பட மூலாதாரம், Getty Images
ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது.
கடைசி நாளான இன்று (ஜூன் 24) இங்கிலாந்து அணி வெற்றி பெற 350 ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில், அந்த அணியின் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கின்றன.
கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்பு 300 ரன்களுக்கு மேல் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதா? முதல் இன்னிங்சைப் போலவே இன்றும் பும்ரா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவாரா?
ராகுல் – ரிஷப் பந்த் அபாரம்
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மன் கில், கார்ஸ் பந்துவீச்சில் பேட்டில் இன்சைட் எட்ஜ் எடுத்து கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் செஷனில் இந்திய அணி 63 ரன்கள்தான் சேர்த்தது. ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்சராகி எகிறியதால் ராகுலும், ரிஷப் பந்தும் சற்று பொறுமையாக பேட் செய்தனர்.
முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் ராகுல் கவர் ட்ரைவ், ஸ்குயர் ட்ரைவ், புல்ஆ-ஃப் ஷாட், ஆன்ட்ரைவ் ஷாட்களை அழகாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்று பேட் செய்த ராகுல், முதல் செஷனில் 44 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 87 பந்துகளில் ராகுல் அரைசதத்தை எட்டினார். பந்து தேய்ந்து பழையதானபின் ராகுல் தனது பேட்டிங் கியரை மாற்றி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.
ராகுலுக்கு இங்கிலாந்து பீல்டர்கள் 3 முறை கேட்சை கோட்டைவிட்டனர். ராகுல் 59 ரன்களில் இருந்தபோதும், 99 ரன்களில் இருந்தபோதும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் நழுவவிட்டனர். முடிவில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
137 ரன்கள் சேர்த்த ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
தொடக்க வீரராகக் களமிறங்கி இங்கிலாந்து மண்ணில் ராகுல் 3வது சதத்தை நிறைவு செய்துள்ளார். ராகுல் டிராவிட், கவாஸ்கர், விஜய் மெர்ச்சன்ட் ஆகியோர் தொடக்க வீரராக 2 சதங்களைத்தான் அடித்திருந்தனர்.
கே.எல்.ராகுலைப் பொருத்தவரை ஆசிய நாடுகளை தாண்டியும் கடந்த 5 சுற்றுப்பயணங்களிலும் சிறப்பாகவே பேட் செய்துள்ளார். 2021ல் இங்கிலாந்து டெஸ்டில் 84, 129 ரன்களும், தென் ஆப்ரிக்காவில் 123 ரன்களும், ஆஸ்திரேலியத் தொடரில் 77, 26 ரன்களை ராகுல் சேர்த்துள்ளார்.
இந்த டெஸ்டிலும் 2வது இன்னிங்ஸில் இக்கட்டான சூழலில் சதம் அடித்து அணியை ராகுல் மீட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
2வது சதம் அடித்த ரிஷப் பந்த்
ராகுல் ஒருபுறம் நிதானமாக பேட் செய்ய, அவருக்கு ஈடு கொடுத்து ஆடிய ரிஷப் பந்த் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடி ரன்களைச் சேர்த்து 83 பந்துகளில் அரைசதம் எட்டினார். அடுத்த 50 பந்துகளில் வேகமாக ரன்களைச் சேர்த்த ரிஷப் பந்த் 50 ரன்களை சேர்த்து 130 பந்துகளில் தனது 8-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 18 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு கட்டத்தில் பஷீர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார். இதற்கு நடுவர் பால் ரீஃபில் அவுட் வழங்காத நிலையில் இங்கிலாந்து அப்பீல் சென்றது. ஆனால், ரிஷப் பந்த் பேட்டில் பந்து பட்ட பின் கால்காப்பில் பட்டதால் இங்கிலாந்தின் ரிவியூ வீணானது. இதன்பின், சுதாரித்துக்கொண்ட ரிஷப் பந்த் தனது ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக பேட் செய்தார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ஒருவர் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்தது இது 2வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹராரேவில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியிருந்தார். அதன்பின் 24 ஆண்டுகளுக்குப்பின் ரிஷப் பந்த் சதம் விளாசியுள்ளார். இந்திய அளவில் முதல் முறையாக ரிஷப் பந்த் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு பயணம் செய்த வெளிநாட்டு அணிகளில் ஒரு பேட்டர் ஒரு டெஸ்டில் இரு சதங்களை விளாசிய 9-வது பேட்டராக ரிஷப் பந்த் பெயரெடுத்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2019ல் இரு சதங்களை விளாசியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ரிஷப் பந்த் முதல் டெஸ்டிலேயே 252 ரன்களைக் குவித்து, ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். உலகளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (17), ஆன்டி பிளவர் (12) இருவருக்கு அடுத்தபடியாக அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார்.
கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 333 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என வலுவான நிலையில் இருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தபின் அடுத்த 31 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷர்துல் தாக்கூர் இந்த முறையும் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசை வீரர்கள் 3 பேரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்த், ராகுல் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் 25 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. மிகவும் எதிர்பார்ப்பு அளித்த கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கில் 8 ரன்னில் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 6 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. கிராவ்லி 12 ரன்களுடனும், டக்கெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?
லீட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை கடைசி நாளில் பேட் செய்ய அற்புதமான மைதானமாகும். கடந்த 11 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் கடைசி நாளில் பேட் செய்ய 2வது சிறந்த ஆடுகளமாக லீட்ஸ் திகழ்ந்து வருகிறது.
ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மேலும் அதிகமாகும் என்பதால் பும்ரா, ஜடேஜாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால், ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டிவிட்டால், இங்கிலாந்து பேட்டர்களுக்குத்தான் முழுமையாக ஆடுகளம் ஒத்துழைத்து எளிதாக சேஸ் செய்துவிடுவார்கள். அதிலும், 2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் அதிரடி ஆட்ட முறையை கையாண்டு வரும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக இந்த இலக்கை எட்டக்கூடும்.
லீட்ஸ் ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இங்கிலாந்து 4 முறை சேஸ் செய்துள்ளது. கடைசியாக 2019 ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 359 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. ஆதலால், இங்கிலாந்து நிச்சமயாக 350 ரன்களை சேஸ் செய்யும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் ஆட்டத்தைக் கையில் எடுத்தபின் 23 டெஸ்ட் போட்டிகளில் 15 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியைப் பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜாவை நம்பியே இருக்கிறது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை. பும்ரா ஏதேனும் தனது பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தினால், சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்து ஜடேஜாவின் பந்துவீச்சும் எடுபட்டால் இந்தியாவின் பக்கம் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
கைவசம் 10 விக்கெட்டுகளுடன் வலுவாக இருக்கும் இங்கிலாந்து அணியின் பக்கமே வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு