பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அபார தொடக்கத்தை அளித்துள்ளது.
இந்தியா அதிரடியாக ரன்களை குவித்து வந்த நிலையில், நீஷம் 16வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.
16 ஓவர்களுக்குப் பிறகு, இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனை தொடர்ந்து இஷான் கிஷானும் ஆட்டமிழந்தார். கிஷான் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்

சஞ்சு சாம்சன் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சுவும் கிஷனும் இரண்டாவது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தனர்.
14வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார்.
சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது சாம்சனின் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். டி20 உலகக் கோப்பையின் இறுதி மற்றும் அரையிறுதி இரண்டிலும் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் சர்மா அரைசதம்
எட்டாவது ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மாவை ரச்சின் ரவீந்திர ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அபிஷேக் சர்மா 18 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
அபிஷேக் சர்மா இந்தியாவுக்கு ஒரு நல்ல அதிரடி தொடக்கத்தை அளித்தார், இதனால் பவர்பிளேயில் இந்தியா 92 ரன்கள் குவித்தது.
2026 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக, இந்திய தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பட மூலாதாரம், Getty Images
கேப்டன்கள் கூறியது என்ன?
“நாங்களில் முதலில் பேட்டிங் செய்வதை சிறப்பாக செய்துகொண்டிருப்பதால், இன்று முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி தான். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த பெரிய ஸ்கோர் பதிவு செய்து எப்போதுமே நல்ல விஷயம்” என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், “இந்திய அணியில் நிறைய அதிரடி பேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை சேஸ் செய்யக்கூடிய ஒரு ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தவேண்டும்” என்று கூறினார்.
நியூசிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் கோல் மெக்கான்கீ நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.
இந்தத் தொடரில் சேஸ் செய்த 4 போட்டிகளிலுமே நியூசிலாந்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா.
நியூசிலாந்து: டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, மார்க் சேப்மேன், கிளென் ஃபிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்

பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன்கள் சொன்னது என்ன?
இந்தப் போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “நாங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இது நிச்சயமாக ஒரு சவாலாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் எங்களது நுணுக்கமான விஷயங்களைச் சரியாகச் செய்து, ஒரு அணியாகச் சிறப்பான பங்களிப்பை அளித்தால், கோப்பையை வெல்லக்கூடிய நல்ல நிலைக்கு எங்களால் செல்ல முடியும் என்று எங்களுக்குத் தெரியும். ஆம், கோப்பையை ஏந்துவதற்காகச் சிலரின் இதயங்களை உடைக்க வேண்டியிருந்தாலும் எனக்குப் பரவாயில்லை” என்று கூறினார்.
சனிக்கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாளை (மார்ச் 8) அணிக்குத் தலைமை தாங்குவது என்பது ஒரு சிறப்பான உணர்வு, அதுவும் இவ்வளவு அருமையான ஒரு அணியை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திச் செல்வது பெருமையாக இருக்கிறது. அதுவும் நம் சொந்த மண்ணில் நடப்பது இன்னும் சிறப்பு. நிச்சயமாகப் பதற்றமாகத்தான் இருக்கிறது, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனால் நான் எப்போதும் சொல்வது போல, அழுத்தம் இல்லையென்றால் அதில் சுவாரஸ்யமே இருக்காது. அதனால் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இறுதிப் போட்டிக்கு வந்த பாதை
இந்திய அணி குரூப் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளை இந்தியா வென்றது.
அடுத்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிக்கு இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யகுமார் யாதவின் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நியூசிலாந்து அணி குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றது. அதனால், 6 புள்ளிகளோடு டி பிரிவில் அந்த அணி இரண்டாவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
சூப்பர் 8 சுற்றில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சுற்றில் 3 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து, ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது.
பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள் இதுவரை
2007: சாம்பியன் – இந்தியா, ரன்னர் அப் – பாகிஸ்தான்
2009: சாம்பியன் – பாகிஸ்தான், ரன்னர் அப் – இலங்கை
2010: சாம்பியன் – இங்கிலாந்து, ரன்னர் அப் – ஆஸ்திரேலியா
2012: சாம்பியன் – வெஸ்ட் இண்டீஸ், ரன்னர் அப் – இலங்கை
2014: சாம்பியன் – இலங்கை, ரன்னர் அப் – இந்தியா
2016: சாம்பியன் – வெஸ்ட் இண்டீஸ், ரன்னர் அப் – இங்கிலாந்து
2021: சாம்பியன் – ஆஸ்திரேலியா, ரன்னர் அப் – நியூசிலாந்து
2022: சாம்பியன் – இங்கிலாந்து, ரன்னர் அப் – பாகிஸ்தான்
2024: சாம்பியன் – இந்தியா, ரன்னர் அப் – தென்னாப்பிரிக்கா
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு