0
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற LGBTQ+ சமூகத்தினரின் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் வேன் ஒன்று புகுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு, சில மணி நேரங்களிலேயே உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பெர்லின் பொலிஸார், தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் தற்போது சந்தேகிக்கப்படும் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம். அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபர் பெர்லினில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர் என காவல்துறைக்கு ஏற்கனவே தகவல் இருந்ததாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா அல்லது வேறு காரணத்தினாலா இடம்பெற்றது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெர்லின் நகரின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.