பட மூலாதாரம், Getty Images
நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது, 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றியையடுத்து, 2வது தகுதிச் சுற்றில் பஞ்சாப் அணியுடன் நாளைஆமதாபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் கோப்பைக்காக மல்லுக்கட்டும்.
மும்பையின் கச்சிதமான திட்டம்
குஜராத் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் 230 ரன்கள் வரை சேர்த்த ஆட்டங்களில் அழுத்தம் தாங்காமல் தோல்வியைத் தழுவியது, அதிலும் முக்கிய பேட்டர் ஜாஸ் பட்லர் அணியில் இல்லை. இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்ட மும்பை அணி, தன்னுடைய இலக்கை 200 ரன்களுக்கு மேல் வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது.
மும்பை அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ(47), ரோஹித் சர்மா(81) உறுதுணையாக இருந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் கேமியோ(22) 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியது.
229 ரன்கள் என்ற நெருக்கடியான இலக்கைத் துரத்தத் தொடங்கிய குஜராத் அணி முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை இழந்தபோதே பாதி தோல்வி அடைந்துவிட்டது. சாய் சுதர்சன் மட்டும் நம்பிக்கையுடன் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றார். இதில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்(48), சாய் சுதர்சன் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது, முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்று கணிக்கப்பட்டது
ஆனால், பும்ரா 14-வது ஓவரில் யார்கரில் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாகச் செய்துதான் திருப்புமுனையை ஏற்படுத்தினார், 16வது ஓவரில் சாய் சுதர்சன் போல்டான போது குஜராத் அணியின் ஒட்டுமொத்த போராட்டமும் முடிவுக்கு வந்தது, நம்பிக்கையும் தொலைந்தது.
ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில், பெரிய இலக்கு நிர்ணம், சுப்மான் கில், சுதர்சன் இருவரில் ஒருவரை விரைவாக ஆட்டமிழக்க வைப்பது இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்ததுதான் மும்பை அணி களமிறங்கி ஒவ்வொன்றாக கச்சிதமாகச் செய்து முடித்தது. ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
மும்பையின் பிரமாஸ்திரம் பும்ரா
மும்பை அணி பும்ராவின் பந்துவீச்சு பணி இல்லாமல் இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளையும், சிரமங்களையும் சந்தித்தது. முதல் 5 லீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே மும்பை வென்றது. ஆனால், 4 போட்டிகளுக்குப் பின் பும்ரா அணிக்குள் வந்தபின் அணியின் உத்வேகமும், பந்துவீச்சில் கட்டுக்கோப்பும் வேறுவிதத்தில் இருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை வந்தது.
மும்பையின் நம்பிக்கை நாயகன் பும்ரா இல்லாத நிலையில் தீபக் சஹரைத் தான் தொடக்க பந்துவீச்சாளராக மும்பை பயன்படுத்தியது, டெத் ஓவர்களில் சத்யநாராயண ராஜூவை பயன்படுத்தியது. அந்த நேரத்தில் மும்பையின் டெத் ஓவர் 17-20 வரை ரன்ரேட் 11 ஆக இருந்தது.
ஆனால், பும்ரா அணிக்குள் திரும்பியபின், சஹர், போல்ட் பவர்ப்ளேயில் மட்டும் பயன்படுத்தப்பட்டு, ஹர்திக் நடுப்பகுதி ஓவர்களை கவனித்துக்கொண்டார். பந்துவீச்சு தலைமையை பும்ரா தனது துல்லியமான யார்கர், கட்டுக்கோப்பான எக்கானமி, டெத் ஓவர்களில் பந்துவீசும் பொறுப்பை ஏற்றார். பும்ரா அணிக்குள் வந்தபின் ஹர்திக் பாண்டியாவின் அழுத்தமும், பந்துவீசு்சு சுமையும் சற்று குறைந்தது. அது மட்டுமல்ல டெத் ஓவரில் பும்ரா இல்லாமல் இருந்தபோது அணியின் ரன்ரேட் 11 ஆக இருந்தநிலையில் பும்ரா வந்தபின் 9.48ஆகக் குறைந்தது. மும்பையின் பந்துவீச்சிலும் ஒருவிதமான கட்டுக்கோப்பு, துல்லியம், மிரட்டல் உருவானது.
அதுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடந்தது. வாஷிங்டன் சுந்தரும், சுதர்சனும் ஆட்டத்தை வேறுவிதத்தில் கொண்டு சென்றனர். ஆட்டத்தில் திருப்பம் தேவை என்ற நிலையில் பும்ராவை 14வது ஓவரை வீச அழைத்தனர். ஏற்கெனவே பும்ரா ஓவரில் இரு பவுண்டரிகளை வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார்.
ஆனால், 14வது ஓவரை பும்ரா வீசும்போது, துல்லியம் தவறாமல், கடினமான லென்த்திலும், யார்கரிலும் வீசினார். இதனால் தொடக்கத்திலிருந்தே வாஷிங்டன் ரன் சேர்க்க சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு யார்கரை துல்லியமாக பும்ரா வீச, அதை எதிர்கொள்ள முடியாத வாஷிங்டன் சுந்தர் தலைகுப்புற கீழே விழுந்து போல்டாகினார். அப்போது பும்ராவின் முகத்தில் எழுந்த ஆக்ரோஷம், ஆவேசம் , “என்னுடைய ஓவரிலா பவுண்டரி அடித்தாய்” என்று கேட்பது போன்று இருந்தது. பும்ராவின் இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஆட்டத்தை மும்பையின் கரங்களுக்கு மாற்றியது.
பட மூலாதாரம், Getty Images
போல்டின் முதல் ஓவர் விக்கெட்
ஐபிஎல் போட்டிகளில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குஜராத் அணியின் முக்கிய தூண்களில் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் நிலைகுலைந்துவிடும் என்ற திட்டத்துடன் போல்ட்டுக்கு முதல் ஓவர் தரப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட பணியை போல்டும் கச்சிதமாகச் செய்து முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை சாய்த்தார்.
இதன் மூலம் 33வது முறையாக முதல் ஓவரில் போல்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். டிரன்ட் போல்டின் இந்த விக்கெட் வீழ்த்தும் திறனை சரியாகப் பயன்படுத்தி, புதிய பந்தில் அதிகமாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதாலும், போல்ட்டிற்கு முதல் ஓவரை மும்பை வழங்கியது.
அதற்கு ஏற்றபடி போல்ட் முதல் ஓவரிலேயே சுப்மான் கில்லை கால்காப்பில் வாங்க வைத்து விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். அது மட்டுமல்ல டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து போல்ட் பந்துவீசும்போது மும்பை அணியால் எதிரணியின் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. லீக் போட்டிகளில் இதுவரை டெத் ஓவர்களில் 19 யார்கர்களை போல்ட் வீசியுள்ளார், டெத் ஓவர்களில் 2.75 எக்னாமி ரேட் வைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 53 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.29 எக்னாமி ரேட் வைத்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மாவின் அனுபவம்
ரோஹி்த் சர்மா மும்பை அணிக்குள் வந்தபின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்கிய போதிலும்கூட மும்பை அணிக்கு தன்னால் முடிந்த 100 சதவீத உழைப்பை வழங்கத் தவறியதில்லை. விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்காக அதிகபட்ச ரன்களை சேர்த்துக் கொடுத்ததில் 2வது இடத்தில் 7ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக சேர்த்து ரோஹித் சர்மா இருக்கிறார்.
இந்த சீசனின் தொடக்கத்தில் ரோஹித்தின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தநி லையில் அதற்கு சில போட்டிகளில் அடித்த அரைசதத்தின் மூலம் பதில் அளித்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் அனுபவம், இதுபோன்ற பெரிய தொடர்களில், எலிமினேட்டர், ப்ளே ஆஃப் கட்டங்களில்தான் உதவுகிறது. மும்பை அணியின் திட்டத்தை கச்சிதமாக தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா செயல்படுத்தினார்.
ஒருபுறம் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடத் தயங்கியபோது, ரோஹித் சர்மா 2வது ஓவரிலிலிருந்தே பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினார். பேர்ஸ்டோ முதல் பவுண்டரி அடித்தபின்புதான் அவருக்குள் நம்பிக்கை துளிர்விட்டது. அதுவரை ரோஹித் சர்மாதான் களநாயகனாக இருந்தார். இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்த ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சுழற்பந்துவீச்சில் ரோஹித் சர்மா பலவீனமானவர் என்ற விமர்சனங்களை நேற்று உடைத்தெறிந்தார். குஜராத் சுழற்பந்துவீச்சாளர்கள் சாய் கிஷோர், ரஷீத் கான் வீசிய ஓவர்களில் ஸ்வீப் ஷாட்கள் மூலம் சிக்ஸர், பவுண்டரிகள் என 27 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா வலுவான அடித்தளத்தை தனது அனுபவத்தால் மும்பைக்கு அமைத்துக் கொடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
நடுப்பகுதி ஓவர்களில் ஸ்கையின் பலம்
மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அணியைத் தாங்கிப் பிடிக்க நடுப்பகுதியில் சூர்யகுமார் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார், தேவைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதில் வல்லவர். அணியின் இக்கட்டான நிலையில் ஆங்கர் ரோலையும், டெத் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
இந்த ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சூர்யகுமார் அமைத்த 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் வாய்ப்புக் கொடுத்து ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 14 முறை, 25 ரன்களுக்கும் அதிகமாக சூர்யகுமார் சேர்த்து உலக சாதனையும் படைத்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் ஒர் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பு செய்த பேட்டர்களில் சூர்யகுமார்தான் முதலிடத்தில் உள்ளார். லீக் போட்டிகள் வரை 480 ரன்களை நடுப்பகுதியில் குவித்த சூர்யகுமார் 41.17% பங்களிப்பு செய்துள்ளார். சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக கிளாசன், பட்லர், விராட் கோலி,ஸ்ரேயாஸ், கேஎல்ராகுல் ஆகியோர் உள்ளனர்.
ஆதலால் நடுப்பகுதியில் சூர்யகுமார் யாதவ் இருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாகும். தொடக்க வீரராக இல்லாமல், நடுவரிசையில் களமிறங்கி 2023, 2025 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் ஐபிஎல் வரலாற்றிலே முதல் வீரர் சூர்யகுமார்தான்.
பட மூலாதாரம், Getty Images
மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய ‘ஆலோசனை’
மும்பை அணியில் 4 வீரர்கள் கேப்டன்சி அனுபவத்துடன் இருப்பது எந்த அணிக்கும் இல்லாத மிகப்பெரிய பலமாகும். எந்தவிதமான இக்கட்டான தருணங்களிலும், சிக்கலான சூழல்களிலும், 4 கேப்டன்களின் வேறுபட்ட அணுகுமுறை, ஆலோசனைகள் நிச்சயமாக சிக்கலில் இருந்து மீள வழிவகுக்கும்.
மும்பையின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் கேப்டனாக இருந்த பும்ரா ஆகியோர் இருப்பது இக்கட்டான தருணங்களில் தெளிவான ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுக்க துணை புரியும். இந்த ஆட்டத்தில் கூட வாஷிங்டன் சுந்தர், சுதர்சனைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர்.
அப்போது ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக், பும்ரா ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்ததையும் காண முடிந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் அடுத்த சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
வெற்றியை தவறவிட்ட குஜராத்
குஜராத் அணியின் தோல்வி சேஸிங்கில் எழுதப்படவில்லை, அவர்களின் பந்துவீச்சில் 2வது ஓவரிலேயே எழுதப்பட்டு, அதன்பின் 4வது ஓவரில் அழுத்தமாக எழுதப்பட்டுவிட்டது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் ரோஹித் சர்மா அடித்த ஷாட்டில் கைமேல் கிடைத்த ஷாட்டை கோட்ஸி பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்க தவறியபோது கேட்ச் தவறவில்லை ஆட்டம் தவறியது.
அடுத்ததாக சிராஜ் வீசிய ஓவரில் ரோஹித் சர்மா பேட்டிலிருந்து தெறித்து சென்ற பந்தை விக்கெட் கீப்பர் மெண்டிஸ் எளிய கேட்சை கோட்டை விட்ட போது, தோல்வி என்பது அழுத்தமாகப் பதிவானது. இரு தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா, மும்பையின் வெற்றிக்கு அழுத்தமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.