- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
துபாயில் நேற்று நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியடைந்து இந்திய அணி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
நியூசிலாந்து அணி 2024ஆம் ஆண்டில் 11 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று 10 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தது. தற்போது அந்தத் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இரு பயிற்சி ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி நேற்று பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பலாக ஆடினர். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் பெரும்பாலான பேட்டர்கள் 22 யார்ட் வட்டத்தைக் கடந்து பந்தை அடிக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து 58 ரன்களில் மோசமாகத் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து அணியின் ரன் குவிப்புக்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்த கேப்டன் சோபி டிவைன்(57ரன்கள்) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணிக்கு நெருக்கடி
அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் ஏ பிரிவில் இந்திய அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு நிகர ரன்ரேட்டில் மைனஸ் -2.900 என்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.
இந்திய அணி அடுத்து மோதக்கூடிய பாகிஸ்தான்(நாளை), ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
ஏனென்றால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதானது அல்ல, பாகிஸ்தான் அணி நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை வென்று கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதால் நாளை கடினமான போராட்டத்தை இந்திய அணிக்கு எதிராக வெளிப்படுத்தலாம்.
ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு கணக்குத் தீர்க்க இலங்கையை வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சவாலாக இருந்தாலும் வென்றுவிடும் என்று கூறலாம்.
ஆனால், 6 முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் மிகக் கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நிகர ரன்ரேட்டில் இந்திய அணி மைனஸில் இருப்பதால், இந்திய அணி பெறும் வெற்றி அதை உயர்த்து வகையிலும் அமைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
ஆட்டநாயகி டிவைன்
நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன். கடைசி நேரத்தில் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இறுதிவரை டிவைன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 15வது ஓவரில்தான் நியூசாலந்து அணி 100 ரன்களை எட்டியது. இதனால் 130 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து சேர்க்கலாம் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், இந்திய மகளிர் அணி வீசிய 5 ஓவர்களை டிவைன் வெளுத்து வாங்கி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்குத் துணையாக ஜார்ஜியா பில்மர்(34), சூசி பேட்ஸ்(27) ஆகியோரும் ரன்கள் சேர்த்ததால் நியூசிலாந்து பெரிய ஸ்கோரை எட்டியது.
அடுத்துவரும் போட்டிகள் முக்கியம்
தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறுகையில் “எங்களின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. அடுத்து வரும் ஆட்டம் ஒவ்வொன்றும் முக்கியம் என்பதை அறிந்து முன்னேறுவோம். வாய்ப்புகளை உருவாக்கியும் அதை நாங்கள் பயன்படுத்த முடியவில்லை,” என்று தெரிவித்தார்.
தங்களைவிட நியூசிலாந்து வீராங்கனைகள் சிறப்பாக ஆடியதாகக் குறிப்பிட்ட ஹர்மன்ப்ரீத், “ஃபீல்டிங்கிலும் நாங்கள் பல தவறுகளைச் செய்தோம். 160 ரன்களை பலமுறை சேஸ் செய்துள்ளோம், ஆனால், இப்போது முடியாதது குறித்து ஆலோசிப்போம்.
நல்ல தொடக்கம் அமையவில்லை, சீராக விக்கெட்டை இழந்தது, ஒரு பேட்டர்கூட நிலைத்து ஆடாதது தோல்விக்கான காரணமாக அமைந்தது,” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
பந்துவீச்சில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியினர் சிறப்பாகப் பந்து வீசவில்லை. பவர்ப்ளே ஓவர்களுக்குள் நியூசிலாந்து அணியை 55 ரன்கள் சேர்க்கவிட்டனர்.
முதல் இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இந்திய அணி வீழ்த்தினாலும் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். அது மட்டுமல்லாமல், முக்கிய விக்கெட்டுகளை எடுக்காமல் விட்டதும் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தது.
குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியினர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்களை வாரி வழங்கியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.
தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். தீப்திக்கு இரு ஓவர்களை குறைத்துவிட்டு பூஜாவுக்கு வழங்கியிருக்கலாம்.
பேட்டிங்கிலும் இந்திய மகளிர் அணியினர் போதுமான போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசாலந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சையும், பந்துவீச்சில் துல்லியத்தையும் இந்திய மகளிர் அணியினரால் சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ரோஸ்மேரி 4 விக்கெட்டுகளையும், லீ தஹுகு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர், லெக் ஸ்பின்னர் ஈடன் கார்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வலிமையான பேட்டர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கார்ஸன் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஷஃபாலியும், ஸ்மிருதியும் ஆட்டமிழந்தபின் இந்திய அணியினர் நம்பிக்கையிழந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 15 ரன்கள்தான், உதரி ரன்களான 13 ரன்கள் அதற்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சேர்த்த 15 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வகையில் ஷஃபாலி(2), ஸ்மிருதி(12), ரோட்ரிக்ஸ்(13), ரிச்சா கோஸ்(12) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த 18 மாதங்களில் முதல்முறையாக இப்போது 3வது வரிசையில் பேட் செய்து அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. நடுவரிசையில் களமிறங்கி வந்த ஹர்மன்ப்ரீத்தை 3வது வரிசைக்கு உயர்த்தியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியினர் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருகுள் 43 ரன்கள் எடுப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்தது. ஆனால், அடுத்த 12 ரன்கள் சேர்ப்பதற்குள் கூடுதலாக 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இப்படி 75 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. 11 முதல் 19 ஓவர்களில் இந்திய அணியால் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, அதோடு மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது.
சவாலான டிவைன்
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கியது நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் பேட்டிங். இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் டிவைன் டாப் ஆர்டரில் களமிறங்கி ஆடிய நிலையில் இந்த உலகக்கோப்பையில் நடுவரிசையில் களமிறங்கி அணிக்கு நங்கூரம் பாய்ச்சினார்.
இந்த ஆண்டில் 11 டி20 போட்டிகளில் டிவைன் ஆடியிருந்தாலும், இவரின் சராசரி 21 ரன்கள் என சுமாராகவே இருக்கிறது, இரு அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார். அதிலும் கடைசி 5 போட்டிகளில் டிவைன் 5, 12, 4, 5 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.
ஆனால், டிவைனின் ஆட்டம் நேற்றைய போட்டியில் கடந்த காலப் போட்டிகளைப் போல் இருக்கும் என நினைத்த இந்திய அணிக்குப் பெரிய அதிர்ச்சியையும், சவாலையும் அவர் அளித்தார்.
ஏழு ஓவர்களாக நியூசிலாந்து அணி பவுண்டரி அடிக்காமல் திணறிய நிலையில் இந்திய அணியின் ஆஷா ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து டிவைன் ஃபார்முக்கு திரும்பினார்.
ரேனுகா சிங் வீசிய 15வது ஓவரிலும் டிவைன் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி ரன்களை சேர்த்து, 21வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் ஃப்ரூக் ஹாலிடேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டிவைன் 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக இருந்தார்.
எடுபடாத இந்திய அணியின் உத்தி
இந்த ஆண்டில் டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. மொத்தம் 6 பந்துவீச்சாளர்கள் என்ற உத்தியைக் கையில் எடுத்து சுட்டுக்கொண்டது.
வஸ்த்ராக்கர், ரேணுகா, அருந்ததி ரெட்டி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களைச் சேர்க்க, இந்த ஆண்டின் 2வது சிறந்த பந்துவீச்சாளர் எனப் பெயரெடுத்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவை களமிறக்கவில்லை.
ஆறு பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்பதால், பேட்டிங்கில் பலம் குறைந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3வது வரிசையிலும், ரோட்ரிக்ஸ் 4வது இடத்திலும், கோஸ் 5வது இடத்திலும் களமிறக்கப்பட்டனர்.
ஆனால், கீழ் வரிசையில் எந்த பேட்டரும் இல்லாமல் போனதால் கடைசி நேரத்தில் இந்திய அணியால் ரன் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. துபாய் ஆடுகளத்தில் 161 ரன்களை சேஸ் செய்வது கடினமானது. அதிலும் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே ஏறக்குறைய தோல்வியின் பிடிக்குள் சிக்கிவிட்டது.
ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்குக்கூட போராடி ரன்களை சேர்த்திருக்கலாம். ஆனால், கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லாததால் அதையும் செய்ய முடியவில்லை.
சர்ச்சைக்குரிய ரன்-அவுட்
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனைகள் டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயலும்போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரால் ரன்-அவுட் செய்யப்பட்டனர்.
ஆனால், அதை நடுவர்கள் அன்னா ஹாரிஸ், ஜேக்குலின் வில்லியம்ஸ் இருவரும் டெட்பால் என அறிவித்தனர். இதனால் நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதாவது, தீப்தி ஷர்மா 14வது ஓவரின் கடைசிப் பந்தை வீசினார். அந்தப் பந்தைத் தட்டிவிட்டு டிவைன், கெர் இருவரும் ஒரு ரன் ஓடினர். ஓவரும் முடிந்துவிட்டதால், நடுவரும் தீப்தியிடம் தொப்பியை வழங்கினார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை ஃபீல்டிங் செய்து கையில் வைத்திருந்தார். அப்போது திடீரென டிவைன், கெர் இருவரும் 2வது ரன்னுக்கு முயற்சி செய்து ஓடினர். இதைப் பார்த்த ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி எறிய அதைப் பிடித்த ரிச்சா கோஸ் கெர் க்ரீஸுக்குள் வருவதற்குள் ரன்-அவுட் செய்தார்.
ஆனால், நடுவர்கள் இது ரன்அவுட் இல்லை, ஓவர் முடிந்து பந்துவீச்சாளரும் தொப்பியைப் பெற்றுக்கொண்டதால் இது டெட்பால் என அறிவித்தனர். ஆனால், நடுவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம் செய்ததால் 7 நிமிடங்கள் வரை ஆட்டம் நின்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.