பிஎஃப் கணக்கில் இருந்து 3 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை எடுக்கலாம் – எப்படி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் அதில் சேமிக்கப்படுகிறதா? ஆம் என்றால் இந்த செய்தி உங்களுக்காக தான்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதாவது EPFO-வில் உங்களுக்கு கணக்கு இருந்தா, இனிமேல் Auto- Settlement என்ற முறை மூலம் உங்க அவசர தேவைகளுக்காக முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் கீழ், உறுப்பினர்கள் இணையம் மூலமாகவே, மூன்று நாட்களுக்குள் 5 லட்சம் வரையிலான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய EPFO இருக்கிறது. உறுப்பினர்களுக்கு விரைவாக நிதி உதவியை வழங்குவதற்காக கோவிட் தொற்று காலத்தில் ஆட்டோ க்ளைம் செட்டில்மெண்ட் (Auto- claim Settlement) முறை அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுவாக PF பணம் எடுக்க 20 நாள் வரை ஆகலாம், ஆனால் இந்த முறையில் வெறும் 72 மணிநேரத்திலே பணத்தை எடுக்கலாம் என இந்திய அரசு கூறுகிறது. மருத்துவம், திடீர் பணத்தேவை, உயர் கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது, வாங்குவது போன்ற தேவைகளுக்கும் இம்முறையில் நீங்கள் தற்போது ரூ. 5 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு