பட மூலாதாரம், GSTT
ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட “poo pills” பயன்படுத்தி பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.
இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம்.
பட மூலாதாரம், Getty Images
ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள குடலில் கவனம் செலுத்தும் விதமாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் இந்த மாத்திரைகளை பரிசோதித்து வரும் டாக்டர் பிளேர் மெரிக் கூறுகிறார்
மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்கள், அவை தங்கியிருக்கும் குடலில் இருந்து வெளியேறி, உடலில் வேறு இடங்களில் குறிப்பாக சிறுநீர்ப்பாதை அல்லது ரத்த ஓட்ட தொற்றுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
“‘உங்கள் குடலில் இருந்து சூப்பர்பக்ஸை அகற்ற முடியுமா?’ என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது,” என்கிறார் டாக்டர் மெரிக்.
‘மல மாத்திரைகள்’ என்ற வார்த்தையைக் கேட்டு, இது அபத்தமான யோசனையாக இருப்பதாக கருதவேண்டாம். மலம் மாற்று அறுவை சிகிச்சை, டிரான்ஸ்-பூ-ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், C. difficile எனப்படும் கடுமையான குடல் பாக்டீரியா தொற்றின்போது, மல மாற்று அறுவை சிகிச்சைகள் சூப்பர்பக்ஸையும் அகற்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
மருந்து எதிர்ப்பு பாக்டீரியா தொற்று பாதித்த நோயாளிகளை மையமாகக் கொண்டு ஆறு மாதங்களாக புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த நோயாளிகளுக்கு, மல வங்கிக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன.
பெறப்படும் மல நன்கொடைகள் ஒவ்வொன்றும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், மலத்தில் இருக்கும் செரிக்கப்படாத உணவுகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய மலம் உலர்த்தி பொடியாக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது.
மாத்திரையின் உள்ளே செலுத்தப்படும் இந்த மலத் துகள்கள், வயிற்றின் வழியாக சேதமின்றிச் சென்று குடலை அடைந்து, அங்கு கரைந்து அதன் உள்ளிருக்கும் மலத்துகள்கள் வெளியாகும்.
பெரிய அளவிலான ஆய்வுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் 41 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த மல மாத்திரையை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயாராக இருப்பதாகவும், தானம் பெறப்பட்ட பாக்டீரியாக்கள் குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகும் நோயாளிகளின் குடலில் இருப்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
அதிகரித்து வரும் சூப்பர்பக்ஸின் தாக்குதலை சமாளிக்க மல மாத்திரைகள் உதவும். மேலும், குடலின் உட்புறத்தில் உணவு மற்றும் இடத்திற்கான போட்டியில் சூப்பர்பக்ஸும், தானம் செய்யும் பாக்டீரியாக்களும் நுண்ணுயிர் போருக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் “நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகள்” இருப்பதாக டாக்டர் மெரிக் கூறுகிறார்.
அத்துடன், உடலில் இருந்து அவற்றை முற்றிலுமாக அகற்றலாம் அல்லது “பிரச்னைகளை ஏற்படுத்தாத அளவிற்கு அவற்றைக் குறைக்கலாம்” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு குடல் பாக்டீரியாக்கள் மிகவும் மாறுபட்டதாக மாறும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது சிறப்பான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும், இது “நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடும்”. எனவே புதிய தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது கடினம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“இந்த ஆய்வு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, அனைத்து பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதை உணர்த்தும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று டாக்டர் மெரிக் தெரிவித்தார்.
நாம் பிறந்த சில மணிநேரங்களில் நம் உடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள், நுரையீரல் தொற்றுடன் இளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை பாதியாகக் குறைப்பதாக, இந்த வார தொடக்கத்தில் விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர்.
நமது உடலின் செல்கள், நமக்குள் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இது கிரோன் நோய் முதல் புற்றுநோய், மன ஆரோக்கியம் வரை அனைத்திலும் நுண்ணுயிரியலை உட்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
விரிவான ஆய்வுகளில் சூப்பர்பக்ஸுக்கு எதிராக மல மாத்திரைகள் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டால், ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருத்துவ நடைமுறைகள் உடலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும்.
“இந்த நபர்களில் பலருக்கு மருந்து எதிர்ப்பு உயிரிகளால் அதிக அளவிலான தீங்கு ஏற்படுகிறது,” என்று டாக்டர் மெரிக் சொல்கிறார்.
தற்போது 450க்கும் மேற்பட்ட நுண்ணுயிரியல் மருந்துகள் உருவாக்கத்தில் இருப்பதாக, பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) தெரிவித்துள்ளது.
“அவற்றில் சில வெற்றி பெறும், எனவே மிக விரைவில் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் பாதிப்புகளை சமாளிக்கமுடியும் என நான் நினைக்கிறேன்,” என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் கிறைசி செர்காகி கூறினார்.
“எதிர்காலத்தில், நுண்ணுயிரியல் சிகிச்சைகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்ற முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு