பட மூலாதாரம், Getty Images
2025 ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று ( மே29) தொடங்குகின்றன. 2 அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும், 2 அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடுகின்றன.
இந்த ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
அடுத்த மாதத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பல வெளிநாட்டு தொடர்கள் தொடங்க இருப்பதால், ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் லீக் ஆட்டங்களில் பல நேரங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருப்பது அணிகளுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இருப்பினும் அதை ஈடுகட்டும் நோக்கில் வேறு வீரர்களை அணியில் சேர்த்து ப்ளேஆஃப் சுற்றை 4 அணிகளும் எதிர்நோக்குகின்றன.
அந்த வகையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாததால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகும்.
ப்ளே ஆஃப் சுற்று எப்படி நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. நியூ சண்டிகரில்தான் முதல் தகுதிச் சுற்றும், எலிமினேட்டர் சுற்றும் நடக்கின்றன. இதில் பஞ்சாப், ஆர்சிபி அணிகள் 19 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்து முதல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி, 16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் போட்டியிடும். இதில் முதல் தகுதிச் சுற்றில் மோதும் இரு அணிகளில் எந்த அணி வெல்கிறதோ அது நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும்.
எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் 2வது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெல்லும் அணிதான் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதாவது முதல் தகுதிச் சுற்றில் வென்ற அணியுடன் கோப்பைக்கான போராட்டத்தில் ஈடுபட முடியும். இதுதான் ப்ளே ஆஃப் சுற்று நடக்கும் முறையாகும்.
ஆர்சிபி அணி எப்படி தயாராகியுள்ளது?
பட மூலாதாரம், Getty Images
இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடிவரும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் போராடுகிறது. இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். “ஈசாலா கப் நமதே” என்ற கோஷம் இந்த முறை நனவாகாதா என்ற ஏக்கம் ரசிகர்கள் முகத்தில் தெரிகிறது.
கடந்த 6 சீசன்களில் 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஆர்சிபி திணறுகிறது. ஆனால் இந்த முறை ஆர்சிபி அணி சீசன் தொடக்கத்தில் இருந்து அற்புதமாக தயாராகி வந்திருக்கிறது.
பெங்களூரைத் தவிர்த்து வெளி-மைதானங்களில் நடந்த 7 போட்டிகளிலும் ஆர்சிபி வென்று சாதனை படைத்தது. வலுவான பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அற்புதமான கலவையுடன் ஆர்சிபி அணி இருக்கிறது.
பஞ்சாப் அணியுடன் இதுவரை ஐபிஎல் தொடரில் 35 முறை மோதியுள்ள ஆர்சிபி அணி 17 முறை வென்றுள்ளது, 18 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனிலும் பெங்களூருவில் பஞ்சாப் அணியிடம் தோற்ற ஆர்சிபி அணி, முலான்பூரில் வைத்து பஞ்சாப் அணியை வென்று பதிலடி கொடுத்தது.
பஞ்சாப் அணிக்கு எந்தவிதத்திலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சளைக்காத அணியாக ஆர்சிபி இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு வீரர்கள் யார் இல்லை?
ஆர்சிபி அணியில் லீக் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல், லுங்கி இங்கிடி ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார்கள், அதேபோல காயத்தால் தேவ்தத் படிக்கலும் ஆடமாட்டார். இவர்கள் 3 பேரும் இல்லாத நிலையில் ஆர்சிபி களமிறங்குகிறது.
இதில் இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசபராபாணியும், படிக்கலுக்குப் பதிலாக மயங்க் அகர்வால், டிம் சீபர்ட் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். இதில் டிம் டேவிட் தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
இன்று நடக்கும் ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் அவருக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்கலாம். டிம் டேவிட்டுக்கு இணையாக பெரிய ஹிட்டராக லிவிங்ஸ்டோன் இருக்கமாட்டார் என்றபோதிலும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும்.
இதில் முக்கிய அம்சமாக ஹேசல்வுட் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று விளையாடுவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால், முசாபராபாணி ஆகியோர் இருப்பது பெரிய வலிமையாகும்.
அதேபோல சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் இருப்பதும், பேட்டர்கள் வரிசையில் விராட் கோலி, பில் சால்ட், பட்டிதார், மயங்க் அகர்வால், ரோமாரியா ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் வரை நல்ல பேட்டிங் செய்யக்கூடிய வரிசை இருப்பது மிகப்பெரிய பலமாகும்.
ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வென்றுவிட்டால், 2016ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு ஆர்சிபி முன்னேறும்.
பஞ்சாப் அணி பைனலுக்கு முன்னேறுமா?
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26 கோடி கொடுத்து வாங்கியது வீண்போகவில்லை என்பது அணியை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்து நிரூபித்துவிட்டார். அடுத்ததாக பைனலை எதிர்நோக்கி பஞ்சாப் அணி இருக்கிறது.
கடைசியாக 2014-ஆம் ஆண்டு பைனலுக்கு முன்னேறிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றது, அதன்பின் 10 ஆண்டுகளாக அந்த அணி பைனலுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை. இந்நிலையில் இந்த முறை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னேறியுள்ளது.
லீக் போட்டிகளில் சில வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சுவைத்து வந்த பஞ்சாப் அணி, கடைசி சுற்று லீக் போட்டிகளில் வென்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியுடன் மோதும் பஞ்சாப் அணி வென்றி பெற்றால், நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
பஞ்சாப் அணியில் லீக் போட்டிகளில் ஆடிய மார்க்கோ யான்சென், மேக்ஸ்வெல், பெர்குசன் ஆகியோர் ப்ளே ஆப் சுற்றில் ஆடமாட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, கெயில் ஜேமிஸன், மிட்ஷெல் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை இந்த சீசன் முழுவதுமே பெரும்பாலும் உள்நாட்டு வீரர்களை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வீரர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக யாரையும் ப்ளேயிங் லெவனில் கொண்டுவரவில்லை. ஆதலால், யான்சென், மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணியை பெரிதாக பாதிக்காது.
அதேசமயம், காயத்தால் ஆடாமல் இருந்த சஹல் அணிக்கு திரும்புவது பெரிய பலம். யான்சென் இல்லாத நிலையில் ஜேமிஸன் கொண்டுவரப்படலாம். இதைத் தவிர பெரிதாக பஞ்சாப் அணியில் மாற்றம் இருக்காது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பஞ்சாப் அணி ஆர்சிபி அணிக்கு வலுவான சவால் அளிக்கும்.
வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே ஓரளவுக்கு அச்சுறுத்தல் தரக் கூடியவர். மற்றவகையில் ஜேமிஸன், ஓமர்சாய் பந்துவீச்சை ஆர்சிபி வீரர்கள் எளிதாக ஆடிவிடக்கூடியவர்கள். ஆனால் சுழற்பந்துவீச்சில் ஹர்பிரித் பிரார், சஹல் ஆகியோரின் 8 ஓவர்கள் நிச்சயமாக சவாலாக இருக்கும்.
பேட்டிங்கில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ், இங்கிலிஸ், நேஹல் வதேரா, சசாங்சிங், ஸ்டாய்னிஷ், ஓமர்சாய், ஜேமிசன் வரை சிறப்பாகவே பேட் செய்யக்கூடிய வரிசையை பஞ்சாப் வைத்துள்ளது ஆர்சிபி அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்சிபி அணியை ஒப்பிடும்போது சற்று வலிமையாக இருப்பது சாதகமான அம்சமாகும்.
குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழுமா?
பட மூலாதாரம், Getty Images
குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றுகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து வந்தநிலையில் கடைசி இரு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளால் 18 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதனால் எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் ஆடி, அதில் வென்று, 2வது தகுதிச்சுற்றில் ஆடி வென்று, பைனலுக்கு முன்னேறய வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி இருக்கிறது.
குஜராத் அணிக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர், ரபாடா, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக இலங்கை வீரர் குஷால் மென்டிஸ், சனகா சேர்க்கப்பட்டுள்ளனர். பட்லர், ரபாடா, பிலிப்ஸ் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவுதான்.
ஏனென்றால், குஜராத் அணி லீக் போட்டிகளில் சேர்த்த ரன்களில் 73% ரன்கள் டாப்ஆர்டரில் 3 பேட்டர்கள் சேர்த்ததாகும், அதில் பட்லரும் ஒருவர். பட்லர் அணியில் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பலவீனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதை குஷால் மெண்டிஸ் நிரப்புவாரா என்பதும் தெரியவில்லை.
அடுத்ததாக லெக் ஸ்பின்னர் ரஷீத் கானின் மோசமான ஃபார்ம் குஜராத் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ரஷீத் கான் 14 போட்டிகளில் ஆடி இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு 9 ரன்களும் 53 பந்துவீச்சு சராசரி வைத்து மோசமாக பந்துவீசி வருகிறார். எலிமினேட்டர் சுற்றில் ரஷித் கான் எழுச்சி பெற்று பந்து வீசினால் தான் குஜராத் அணி தப்பிக்க முடியும் இல்லாவிட்டால் கடினம் தான். ரஷித் கான் தவிர்த்து சாய் கிஷோர், திவேட்டியா இருவர் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
வேகப்பந்துவீச்சில் சிராஜ், அர்ஷத் கான், கோட்ஸி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை. வலுவான பந்துவீச்சு இல்லாததால் தான் கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் குஜராத் அணி, எதிரணியான சிஎஸ்கே, லக்னெள அணியை 230 ரன்கள் வரை சேர்க்க அனுமதித்தது.
குஜராத் அணியின் முக்கியமான பலவீனம் கடந்த 2 போட்டிகளிலும் அம்பலப்பட்டுவிட்டது. லீக் சுற்றுகளில் பெற்ற வெற்றிகள் பெரும்பாலும் டாப்ஆர்டரில் இருக்கும் சுதர்சன், கில், பட்லர் ஆகியோர் சேர்த்த ரன்களால் பெற்ற வெற்றியாகும். நடுவரிசை பேட்டர்களை வைத்து குஜராத் அணி பெரிதாக சோதித்துப் பார்க்கவில்லை. டாப்-ஆர்டரில் 3 பேட்டர்களே பெரும்பாலான போட்டிகளை முடித்துவிட்டனர்.
இந்தச் சூழலில் கடந்த 2 போட்டிகளிலும் நடுவரிசை பேட்டர்களை களமிறங்கி பேட் செய்யும்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எந்தஅளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. உண்மையில் குஜராத் அணியின் நடுவரிசையில் ராதர்போர்ட், ஷாருக்கான், திவேட்டியா ஆகியோர் இருந்தாலும் இவர்களின் பேட்டிங்கில் நிலைத்தன்மைஇல்லாதது பலவீனம். குஜராத் அணி ஒட்டுமொத்தத்தில் கில், சுதர்சன் இருவரின் தொடக்க பேட்டிங்கை நம்பியை இருக்கிறது.
இவர்கள் இருவரும் ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், குஜராத் அணியின் நிலைமை மதில்மேல் நிற்கும் பூனையாக மாறிவிடும்.
6-வது கோப்பையை நோக்கி மும்பை
பட மூலாதாரம், Getty Images
மும்பை அணி தோல்வியுடன் சீசனைத் தொடங்கினாலும் பும்ராவின் வருகை, ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் ஃபார்முக்கு திரும்பியபின் மும்பை அணி வலுவாக வலம் வந்தது. 16 புள்ளிகளுடன் இருந்தாலும் மும்பை அணி வைத்திருக்கும் ரன்ரேட் முதலிடத்தில் இருக்கும் அணியிடமே இல்லை. எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியுடன் மும்பை அணி மோதுகிறது.
லீக் சுற்றுகளில் குஜராத் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலுமே மும்பை அணி தோற்றுள்ளது. ஆனால் அப்போதிருந்த மும்பை அணியைவிட முற்றிலும் மாறியுள்ளது தான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறது.
மும்பை அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்றாலும் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மும்பை அணி அனைத்து அணிகளுக்கும் சாவலாகவே திகழ்கிறது. பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹர் என வகையான பந்துவீச்சாளர்கள், சான்ட்னர், கரன் சர்மா, நமன் திர் என சுழற்பந்துவீச்சாளர்களுடன் நடுப்பகுதி ஓவர்களை நகர்த்துகிறது.
மும்பை அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்கள் வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன், கார்பின் போஸ் ஆகியோர் இல்லாவிட்டாலும், பேர்ஸ்டோ, அசலங்கா, கிளீசன் வருகை அந்த அணிக்கு பெரிய பலம் சேர்க்கும். ரோஹித் சர்மாவுடன், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நின்றுவிட்டால் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்வது உறுதியாகும். இது தவிர சூர்யகுமார், திலக் வர்மா, அசலங்கா அல்லது பேவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், சான்ட்னர் வரை ஓரளவு நிலைத்து ஆடக்கூடிய பேட்டர்களை மும்பை அணி வைத்துள்ளது. குஜராத் அணியை ஒப்பிடும்போது, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாகவே மும்பை அணி இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபிக்கும், பஞ்சாப் அணிக்கும் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்தையும், கடைசிப் பந்துவரை பரபரப்புடன் நகரும் என நம்பலாம். ஏனென்றால் இரு அணிகளுமே தங்களிடம் இருந்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளன. உள்நாட்டு வீரர்களும் வலுவாக இருப்பதால் நிச்சயம் சவாலாக இருக்கும்.
எலிமினேட்டர் சுற்றைப் பொருத்தவரை குஜராத் அணி, மும்பை அணி இடையிலான ஆட்டத்தில் சாய் சுதர்சன், சுப்மான் கில் ஆட்டம் ரசிகர்களை ஈர்க்கலாம். மும்பை அணி முதலில் பேட் செய்து 230 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துவிட்டாலும் குஜராத் அணி திணறக்கூடும். ஆதலால், எலிமினேட்டர் போட்டி, குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு