ஆர்சிபி ரசிகர்களும், அணியினரும் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். “ஈ சாலா கப் நமதே” என்ற வாசகம் இந்த ஆண்டாவது நனவாகுமா என்றஏக்கம், எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஆர்சிபியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு இருக்கும் ஃபார்ம், அர்ப்பணிப்பு, பேட்டிங்கில் உற்சாகம் ஆகியவை எந்த சீசனிலும் இல்லாத அளவு இருப்பதால் கோப்பையை ஆர்சிபி அணிக்காக வென்றுகொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஆர்சிபி அணியும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமகலவையில் வீரர்களைக் கொண்டிருப்பது கூடுதல் சாதகமான அம்சமாகும். 8-வது வரிசை பேட்டர்கள் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை ஆர்சிபி அணி வைத்திருக்கிறது. அதேபோல, ஹேசல்வுட், யஷ் தயால், புவி ஆகியோரின் வேகப்பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்து வருகிறது. சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, க்ருனால் பாண்ட்யா இருவரும் சிறப்பாக செயல்படுவதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தசைப்பிடிப்பால் கடந்த 2 போட்டிகளில் களமிறங்காத டிம் டேவிட் இன்று விளையாடுவார் எனத் தெரிகிறது.
முதல் தகுசிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எளிதாக சுருட்டி வீழ்த்திய ஆர்சிபி அணி மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஸ்ரேயாஸ் அய்யரை 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், இன்று இருவருக்கும் இடையிலான ஆட்டம் சவாலாக இருக்கும். ஹேசல்வுட் பந்துவீச்சில் 22 பந்துகளைச் சந்தித்த ஸ்ரேயாஸ் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறை ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது.
அதேபோல அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் ஸ்விங் செய்யும்போது, அதை ஆர்சிபி வீரர் பில்சால்ட் எவ்வாறு சமாளித்து ஆடுவார் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை அதிரடியான தொடக்கம், கேப்டன் ஸ்ரேயாஸின் ஆகச்சிறந்த ஆட்டம் ஆர்சிபிக்கு பெரிய சவாலாக அமையும். பஞ்சாப் அணியும் பந்துவீச்சு , பேட்டிங், பீல்டிங்கில் ஆர்சிபிக்கு இணையாக சமபலத்துடன் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் இருக்கிறது. பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு கையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவருக்குப் பதிலாக ஹர்பிரித் பிரார் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
ஆடுகளம் எப்படி?
நரேந்திர மோதி மைதானத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆடுகளத்தில் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆடுகளம் செம்மண், கரிசல் மண் கலந்து வடிவமைக்கப்பட்ட ஆடுகளமாகும். பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளமாகவும், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இந்த சீசனில் இதே ஆடுகளத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்காக நிர்ணயித்தால்தான் தப்பிக்க முடியும்.
அதிகாலை 3 மணிக்குவந்த பில் சால்ட்
ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்து கிடைத்ததால் அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் ஆமதாபாத் விமானநிலையத்தில் சால்ட் வந்திறங்கினார். கடந்த சில நாட்களாக பயிற்சியில் பங்கேற்காமல் நேரடியாக போட்டியில் சால்ட் பங்கேற்கிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு