படக்குறிப்பு, 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 16வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடந்தது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை அது தக்க வைத்திருக்கிறது.
மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18 ஓவர்களிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸ் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் வீசிய பவுன்சரை சமாளிக்க முடியாமல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஃபில் சால்ட்.
சிறப்பாக இன்னிங்ஸைத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆர்ச்சர், பர்கர் இருவருமே தங்கள் வேகத்தால் மிரட்டினார்கள். தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பந்துகளை வீசினார்கள்.
ஒருசில வாய்ப்புகள் தவறி பவுண்டரிகள் ஆகின. அதனால், ஆர்சிபி அணிக்கு ரன்களும் வந்தது. ராயல்ஸுக்கு விக்கெட்டுகளும் வந்தது.
4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 55/2 என்ற நிலையில் இருந்தது. அப்போது ஐந்தாவது ஓவரை வீச வந்த ரவி பிஷ்னாய் ஆட்டத்தை ராயல்ஸ் பக்கம் எடுத்துவந்தார். அவர் கோலியின் விக்கெட்டை (32 ரன்கள்) வீழ்த்த, அதிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸின் ரன் வேகம் குறைந்தது.
ரன் வேகம் குறைந்ததால் மெல்ல பொறுமை இழந்த ஆர்சிபி பேட்டர்கள் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள். குருனால் பாண்ட்யா 1, ஜித்தேஷ் ஷர்மா 5, டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெபர்ட் 22 என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தார்கள்.
அதனால் 14 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. அதனால் வெங்கடேஷ் ஐயர் முதல் இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது.
ஒருபக்கம் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் நிலைத்து நின்று விளையாடினார். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அணியின் ரன் விகிதத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொண்டார். 40 பந்துகளை சந்தித்த அவர் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருகட்டத்தில் ஆர்சிபி 200 ரன்களைத் தொடுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்டியதால், அந்த அணி 201 ரன்களை எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழக்கம்போல் முதல் ஓவரில் இருந்தே அதிரடியைத் தொடங்கியது.
யஷஷ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறியிருந்தாலும், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புயல் வேகத்தில் விளையாடினார்.
அபினந்தன் சிங் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் விளாசினார் சூர்யவன்ஷி. முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் பறந்தன.
புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து தன் அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார். 15 பந்துகளில் அரைசதம் கடந்த தன் அதிவேக அரைசதத்தை அவர் மீண்டும் சமன் செய்தார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு சூர்யவன்ஷியுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரெலும் வேகமாக ஆட, ராஜஸ்தான் ராயல்ஸின் ரன்ரேட் அதிவேகமாக உயர்ந்தது. பவர்பிளே முடிவிலேயே அந்த அணி 97 ரன்கள் எடுத்தது. ராயல்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான்.
இம்பேக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயரைப் பயன்படுத்தியதால், ஒரு பௌலர் குறைவாகவே விளையாடியது ஆர்சிபி. அது அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
பவர்பிளேவுக்குப் பிறகும் அதிரடியைத் தொடங்கிய சூர்யவன்ஷி, குருனால், டிம் டேவிட் ஆகியோரின் சுழற்பந்துவீச்சையும் சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசினார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 78 ரன்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் விளாசினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடைசி வரை ஆட்டமிழக்காமல் தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் துருவ் ஜுரெல் (கோப்புப் படம்)
சூர்யவன்ஷியை அவுட்டாக்கிய அடுத்த பந்திலேயே ஹிட்மெயரையும் வெளியேற்றினார் குருனால். ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் ரியான் பராக்கும் அவுட்டாக ராயல்ஸ் அணி மீது நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பராக் – ஜடேஜா ஜோடி ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது.
ஜடேஜா மிகவும் நிதானமாக விளையாட, பராக் தன் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 25 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.