பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் இரு நாடுகளின் போர்த் திறன்களையும், அவற்றின் ஆயுதங்களையும் பரிசோதிக்கும் ஒரு களமாகவும் அமைந்துள்ளது.
புதன்கிழமை இரவு இஸ்ரேலைத் தாக்கிய போது, முதன்முறையாக உள்நாட்டு தயாரிப்பான செஜில் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக, இரான் கூறியது.
செஜில் என்பது கனமான, அதிக வெடிபொருள் பொருத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையாகும்.
இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை செஜிலை வெற்றிகரமாக இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது .
செஜில் ஏவுகணை இரானின் நடான்ஸ் நகரத்திலிருந்து ஏவப்பட்டால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை ஏழு நிமிடங்களில் அடைய முடியும் என்பதிலிருந்தே அதன் வேகத்தை மதிப்பிடலாம் .
ஏனென்றால், நடான்ஸிலிருந்து டெல் அவிவ் வரையிலான தூரம் சுமார் 2000 கிலோமீட்டர்.
புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதல்கள் ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3’ இன் கீழ் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, செஜில் ஏவுகணை பேசுபடு பொருளாக தீவிரமடைந்துள்ளது.
செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது?
பட மூலாதாரம், Getty Images
ஜூன் 19, வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள இரானிய தூதரகம், ஐ.ஆர்.ஜி.சி-யை மேற்கோள் காட்டி செஜில் ஏவுகணை பற்றிய தகவலை வழங்கியுள்ளது.
“இது ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ ‘ஆபரேஷனின் பன்னிரண்டாவது பதிலடி தாக்குதல் ஆகும், மிகவும் கனமான மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய இரண்டு-நிலைகளை கொண்ட செஜில் ஏவுகணை ஏவப்பட்டது” என்று இரானிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.
“செஜில் ஏவுகணைகள் திட எரிபொருளில் இயங்குகின்றன. அவை இரானின் மிகவும் துல்லியமான மற்றும் சக்தி வாய்ந்த மூலோபாய ஆயுதங்களில் ஒன்றாகும். எதிரி இலக்குகளை ஊடுருவி அழிக்கக்கூடிய திறனை அவை கொண்டுள்ளன.”
செஜில் ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் திட எரிபொருளால் இயங்கக் கூடியது. இது மற்ற எரிபொருட்களைக் காட்டிலும் கூடுதல் அனுகூலங்களை வழங்கக் கூடியது.
போர்க்களத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தும் இந்த ஏவுகணையை துரிதமாக ஏவுவதற்கு தயார் செய்யவும் முடியும்.
தூரம்: செஜில் ஏவுகணை அதிகபட்சமாக 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது நடுத்தர தூரம் வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையின் மூலம் இஸ்ரேல், தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இலக்குகளை இரானால் தாக்க முடியும்.
சுமந்து செல்லும் எடை: இந்த ஏவுகணை சுமார் 700 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது. இதன் மூலம் தாக்குதலுக்கு இலக்காகும் இடத்தல் பெரும் சேதத்தை விளைவிக்க முடியும்.
ஏவுகணையின் மொத்த எடை: ஏவப்படும் ஏவுகணையின் மொத்த எடை தோராயமாக 23,600 கி.கி. இருக்கும். அதாவது அதன் எரிபொருள், சுமந்து செல்லும் வெடிபோருள் உள்பட ஏவுகணையின் மொத்த எடை இதுவாகும்.
இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை 2008-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையின் போது செஜில் ஏவுகணை 800 கி.மீ தூரம் பறந்தது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அதனை வழி நடத்தும் அமைப்புகளை சோதிக்க மே 2009ல் இரண்டாவது முறையாக செஜில் ஏவப்பட்டது .
அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தகவல்படி, செஜில் ஏவுகணையில் பல வகைகள் இருக்கக்கூடும். 2009 ஆம் ஆண்டில், ‘செஜில் 2’ என அழைக்கப்பட்ட ஏவுகணையை இரான் சோதித்தது. உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், ‘செஜில் 3’ என்பது இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. செஜில் 3 ஏவுகணை மூன்று நிலைகளைக் கொண்டதாகவும், அதிகபட்சமாக 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது.
செஜில் ஏவுகணை 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுவெளியில் சோதிக்கப்படாததால், அது படையில் சேர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு ஒரு ராணுவப் பயிற்சியின் போது, இரான் இந்த ஏவுகணையை பயன்படுத்தியது.
இஸ்ரேல்-இரான் மோதல்: இதுவரை நடந்தது என்ன ?
பட மூலாதாரம், Getty Images
ஜூன் 13-ஆம் தேதி, டெஹ்ரான், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல இரானிய ராணுவ மற்றும் அணுசக்தி நிலைகளை இஸ்ரேல் தாக்கியது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று இஸ்ரேல் பெயரிட்டது.
இரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, எனவே இரானை தாக்குவது மட்டுமே ஒரே வழி என்று இஸ்ரேல் கூறுகிறது.
தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் ஏவியது.
இரான் ஏவுகணை தாக்குதலில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. இருப்பினும், மருத்துவமனைக்கு அருகில் இருந்த ராணுவ தளம் தான் தனது இலக்காக இருந்தது என்கிறது இரான்.
இந்த தாக்குதலில் 71 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றிரவு முழுவதும் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்தன.
இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் முதல் செஜில் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.
மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இரானில் உள்ள அரக் மற்றும் நடான்ஸ் உள்ளிட்ட பல அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்தது.
இதற்கிடையில், அராக் கனரக நீர் உலை உட்பட இரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு