பல்லேகலே. இங்கிலாந்தை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக டிரஸிங் ரூமுக்குள் நுழைந்தது இலங்கை அணி. அப்போது பேசிய 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை ஸ்பின்னர் டுனித் வெல்லாலகே, “இங்கிலாந்தை இந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தார். வர்ணனையாளர்களும் அவர்களின் பந்துவீச்சை பாராட்டியிருந்தார்கள்.
147 ரன்கள் தான் இலக்கு. சராசரியாக ஓவருக்கு 7.35 ரன்கள் தேவை. பல்லேகலேவில் இங்கிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றை இலங்கை அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறான விஷயங்களே அங்கு அரங்கேறின. இலங்கை வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.
இந்த சூப்பர் 8 சுற்று தொடங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு பற்றி பிபிசி தமிழில் எழுதியிருந்த தமிழ்நாடு முன்னாள் கிரிக்கெட் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், “இலங்கை அணியின் பந்துவீச்சு எப்படியும் நன்றாகவே இருக்கும். ஆனால், அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது அவர்கள் பேட்டர்களின் கையில் தான். அதிலும் குறிப்பாக பதும் நிசங்காவின் கையில் தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொன்னதைப் போலவே பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்க, பேட்டர்கள் நல்லதொரு பங்களிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். அதிகம் கவனம் பெற்றிருந்த பதும் நிசங்காவே அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ, 51 ரன்களில் தோல்வியை சந்தித்தது இலங்கை.
மறுபக்கம், இங்கிலாந்து அணி பந்துவீச்சில் கொடுத்த செயல்பாட்டை நிச்சயம் குறிப்பிடவேண்டும். அவர்கள் அடித்த ஸ்கோர் போதுமானதாக இருக்குமா என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், முதல் ஓவரில் இருந்து சிறப்பாகப் பந்துவீசி தொடர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது. பந்துவீசிய அனைவருமே சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
அதிலும் குறிப்பாக இரண்டு பௌலர்கள் பவர்பிளேவுக்குள்ளாகவே இலங்கையின் பாதி அணியை வெளியேற்றினார்கள். அதை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டினார் இங்கிலாந்து கேப்டன்.
பவர்பிளேவில் மட்டும் 5 விக்கெட்டுகள்
பட மூலாதாரம், Getty Images
ஆர்ச்சர் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவர்… இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் நிசங்கா. நான்காவது பந்துக்கு முன் ஃபீல்டிங்கை மாற்றினார் ப்ரூக். பவுண்டரியில் இருந்த ஸ்கொயர் லெக் ஃபீல்டரை உள்ளே வரவைத்துவிட்டு, மிட்விக்கெட் ஃபீல்டரை எல்லைக்கு அனுப்பினார். நான்காவது பந்தில் பெரிய ஷாட் ஆட நினைத்த நிசங்கா, சரியாக அதே டீப் மிட் விக்கெட் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த ஓவர் – ப்ரூக் நம்பிக்கையோடு புதிய பந்தில் பயன்படுத்திய ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். குசல் மெண்டிஸ் ‘லீடிங் எட்ஜ்’ ஆகி பௌலரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தையே தூக்கியடிக்க நினைத்த பவன் ரத்நாயகா டாப் எட்ஜ் ஆகி கேட்சானார்.
மூன்று ஓவர்கள் முடிவில் 21/3 என்ற நிலையில் இருந்தது இலங்கை. பின்னடைவைச் சந்தித்திருந்த காரணத்தால், இலங்கையை தொடர்ந்து அட்டாக் செய்ய முடிவு செய்தார் ப்ரூக். மீண்டும் ஆர்ச்சர் கையில் பந்தைக் கொடுத்தார். தன்னுடைய முன்னணி பௌலருக்கு பவர்பிளேவுக்குள்ளாகவே மூன்று ஓவர்களை முடிப்பது பற்றி அவர் அஞ்சவில்லை. சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். அதற்கு அந்த ஓவரில் பலனும் கிடைத்தது.
ஆர்ச்சர் வீசிய அதிவேக பந்தை ஆஃப் சைட் அடிக்க நினைத்த கமில் மிஷாரா, எட்ஜாகி கல்லி திசையில் ஜேமி ஓவர்டனிடம் கேட்ச் ஆனார். அந்த ஃபீல்டிங் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஸ்லிப் என யாரும் இருக்கவில்லை. ஷார்ட் மேன் போலவும் இருக்கவில்லை. கல்லி திசையில், ஆனால் சற்று பின்னால் ‘ஃப்ளையிங் ஸ்லிப்’ என்று சொல்லப்படும் இடத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்தார் ஓவர்டன். பந்து சரியாக அவர் கையில் சென்று தஞ்சமடைந்தது. இலங்கை – 22/4.
பவர்பிளேவின் கடைசி ஓவரையும் ஜேக்ஸ்-ஐ வைத்தே முடித்தார் ப்ரூக். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வெல்லாலகே, இன்னொரு பவுண்டரிக்கு ஆசைப்பட்டு தூக்கி அடிக்க, மிட் ஆன் திசையில் நின்றிருந்த ப்ரூக்கிடமே பந்து சென்றது. ஜேக்ஸ் மூன்றாவது விக்கெட்டைக் கைப்பற்ற, இலங்கை தங்கள் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அந்த அணி தங்கள் பவர்பிளேவை 34/5 என முடித்தது.
இந்த மோசமான தொடக்கத்திலிருந்து இலங்கை அணியால் மீண்டு வர முடியவில்லை. கேப்டன் ஷனகா மட்டும் போராடி 30 ரன்கள் எடுத்தார். எந்தவொரு பார்ட்னர்ஷிப்புமே 20 ரன்கள் கூட தாண்டாததால், இலங்கை அணியால் படுதோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
ஸ்பின்னை சரியாக ஆடக்கூடிய இலங்கை பேட்டர்கள் கூட இன்று தடுமாறியது ஏமாற்றமளித்ததாக இந்தப் போட்டியின் வர்ணனையின்போது சங்கக்காரா கூறினார். இந்தப் போட்டியில் ஓப்பனராகக் களமிறக்கப்பட்ட மிஷாரா முதலிரு ஓவர்களில் ‘இன்டென்ட்’ காட்டி ரன் சேர்க்காதது மற்ற பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆல் ரவுண்டராக அசத்திய வில் ஜேக்ஸ்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தொடர்ச்சியாக கடைசி கட்டத்தில் தன் பேட்டிங்கால் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டுக்கொண்டிருக்கிறார் வில் ஜேக்ஸ்
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய வில் ஜேக்ஸ் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், அவர் பங்களிப்பு பந்துவீச்சோடு நின்றுவிடவில்லை. பேட்டிங், ஃபீல்டிங் இரண்டிலுமே தாக்கம் ஏற்படுத்தினார் ஜேக்ஸ்.
இங்கிலாந்து அணி 94/5 என்ற நிலையில் இருந்தபோது பேட்டிங் செய்ய வந்தார் ஜேக்ஸ். இலங்கை ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்ததால் மிகவும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார் அவர். இலங்கை பௌலர்கள் பெரும்பாலும் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீசிய நிலையில், அந்தப் பந்துகளை கவனமாக எதிர்கொண்டார்.
அதேசமயம் ஆஃப் சைடில் கொஞ்சம் வெளியே சென்றாலும் கவர்/எக்ஸ்டிரா கவர் திசையில் டிரைவ் செய்து பந்தை பவுண்டரி ஆக்கினார். மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா என அனைவரின் பந்துவீச்சிலும் அது நடந்தது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஃப் சைடில் மூன்று ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தியிருந்தபோதும், இடைவெளியை சரியாகக் கண்டறிந்தார் அவர். அவர் அடித்த நான்கு பவுண்டரிகளுமே கவர் மற்றும் எக்ஸ்டிரா கவர் திசையில் தான் அடிக்கப்பட்டன.
14 பந்துகளில் 21 ரன்கள் அடித்த அவர் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணி 140 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த இன்னிங்ஸில் ஃபில் சால்ட்-க்குப் (62 ரன்கள்) பிறகு அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் இவர்தான்.
இதோடு மட்டுமல்ல, ஃபீல்டிங்கிலும் ஒரு சிறந்த பங்களிப்பைக் கொடுத்தார் ஜேக்ஸ். கடைசி கட்டத்தில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா சற்று அதிரடி காட்டினார். அவர் இருக்கும்வரை இலங்கை அணிக்கு கொஞ்சமேனும் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. அவரை தன் ஃபீல்டிங்கால் வெளியேற்றினார் ஜேக்ஸ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷனகா அடித்த ஷாட் சிக்ஸர் ஆகாமல், விக்கெட் ஆவதற்கு முக்கியக் காரணம் வில் ஜேக்ஸின் இந்த முயற்சி தான்
ஆதில் ரஷீத் பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்க நினைத்து தூக்கி அடித்தார் ஷனகா. சற்று பின் நகர்ந்து பந்தை கேட்ச் செய்த ஜேக்ஸ், நிலைத்தன்மை இல்லாமல் பவுண்டரி எல்லையை நோக்கி சற்று நகர்ந்தார். வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் நிறைய ஃபீல்டர்கள் பந்தைத் தூக்கிப் போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்று மீண்டும் மைதானத்துக்குள் திரும்பி கேட்ச் பிடிப்பார்கள். ஆனால், பவுண்டரி எல்லையைப் போலவே அருகில் இருந்த மற்றொரு இங்கிலாந்து ஃபீல்டரான டாம் பேன்டனையும் கவனித்த ஜேக்ஸ், பவுண்டரி எல்லைக்குள் செல்வதற்கு முன்பாக பேன்டனை நோக்கிப் பந்தை வீசினார். பேன்டன் அதைப் பிடித்துவிட, அப்போது இங்கிலாந்தின் ஒரே அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஷனகாவும் வெளியேறினார்.
இப்படி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவிலும் பங்களித்த வில் ஜேக்ஸ், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த உலகக் கோப்பையில் அவர் வெல்லும் மூன்றாவது ஆட்ட நாயகன் விருது இது!