படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாந்தோ (கோப்பு புகைப்படம்)
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் ஓர் அறிவிப்பை வெளியிட்டது, அதில் டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள போட்டியைத் தனது கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கிவிட்டது.
“இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் அரசு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 15 பிப்ரவரி 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பங்கேற்காது,” என அந்த நேரத்தில் பாகிஸ்தான் அரசு எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தது
வங்கதேசத்துடன் ‘ஒற்றுமையை’ வெளிப்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருந்தது.
அப்போது வங்கதேசமும், தனக்கு ஆதரவாக நின்றதற்காகப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்திருந்தது.
வங்கதேச இடைக்கால அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், பிப்ரவரி 5-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆசிப் நஸ்ருல் தனது ஃபேஸ்புக் பதிவில் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
ஆனால், திங்கள்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடையேயான ஆலோசனைக் கூட்டத்திற்குப் முன்னதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ‘கிரிக்கெட்டின் நலனைக்’ கருத்தில் கொண்டு, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது.
பின்னர் ஐசிசி மற்றும் பிசிபி தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு, இந்தியாவுடனான புறக்கணிப்பு முடிவைப் பாகிஸ்தான் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தன.
இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் முடிவுக்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்திருந்த அதே வங்கதேசம், பிறகு ஏன் பாகிஸ்தானிடம் இந்தப் போட்டியில் விளையாடுமாறு கோரிக்கை விடுத்தது? என்பதுதான் கேள்வி.
வங்கதேசத்திற்கு என்ன கிடைக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேச கிரிக்கெட் வாரியத் (பிசிபி) தலைவர் அமினுல் இஸ்லாம்
பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, இந்தியாவில் நடைபெறவிருந்த தனது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்து, தனது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுமாறு வங்கதேசம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்த போது ஐசிசி அதனை ஏற்கவில்லை.
பிறகு, டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்துக்கு இடம் அளிக்கப்பட்டது.
அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), ஐசிசி ‘இரட்டை நிலைப்பாட்டை’ கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டியது.
வங்கதேசம் மீது ஐசிசி அதிக அபராதம் விதிக்கக்கூடும் என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஐசிசி, இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது என்பதை நேற்று தெளிவுபடுத்தியது.
தவிர, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) 2028 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் மற்றொரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த முழு ஏற்பாட்டிலும் திருப்தி தெரிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமாறும் கேட்டுக்கொண்டது.
ஆலோசனையின் போது, ஐசிசியின் வருவாய் பகிர்வு கட்டமைப்பு குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. ஆனால் அரசாங்கம் அல்லது ஐசிசியின் எந்த அறிக்கையிலும் இதுகுறித்த குறிப்பு இல்லை.
இந்தியாவுடன் விளையாடுவதற்குப் பதிலாக, இந்தியாவுடன் ஒரு இருதரப்பு தொடர் அல்லது வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு தொடரை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் விதித்ததாக ஆரம்பத்தில் சில செய்திகள் வெளியாகின.
இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் அல்லது முத்தரப்பு தொடர் நடத்துவது தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
இதற்கு முன்னதாக, லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பிசிபி (வங்கதேசம்) தலைவர் அமினுல் இஸ்லாம் மற்றும் ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.
இறுதியாக திங்கள்கிழமை மாலை நிலைமை வேகமாக மாறியது. வங்கதேசம் குறித்த ஐசிசியின் முடிவு, வங்கதேசம் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தது மற்றும் பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தல் ஆகியவற்றிற்குப் பிறகுதான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் முடிவு இறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. இப்போது பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன.
வங்கதேசம் எதிர்ப்பு
பட மூலாதாரம், Tanvin Tamim/DRIK/Getty Images
படக்குறிப்பு, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த மாதம் கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இந்தியாவில் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு சூழல் குறித்து கவலை தெரிவித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்தியா சென்று விளையாட மறுத்தது.
பின்னர் ஐசிசி அந்த கோரிக்கையை நிராகரித்தபோது, வங்கதேசம் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது.
இந்த முடிவை ‘தவறானது’ மற்றும் ‘இரட்டை நிலைப்பாடு’ என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, “கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுத்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்கான போட்டிகள் துபையில் நடத்தப்பட்டன” என்று கூறியிருந்தார்.
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அந்த வசதி வங்கதேசத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை என்று நக்வி கேள்வி எழுப்பியிருந்தார்.
பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு முன்னாள் வீரர்கள் ஆதரவு
பட மூலாதாரம், Sky Sports
படக்குறிப்பு, ஸ்கை ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் மைக் அதர்டனிடம் பேசும் நாசர் ஹுசைன்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாடாத வங்கதேசத்தின் முடிவுக்கும், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவுக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் நிபுணருமான நாசர் ஹுசைன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸின் ஒரு பாட்காஸ்டில், இந்த விவகாரத்தில் வங்கதேசத்துடன் உறுதியாக நின்றதற்காக அவர் ‘பாகிஸ்தானைப் பாராட்டவும்’ செய்தார்.
அதே பாட்காஸ்டில் மைக் ஆதர்டனும் ஐசிசியை விமர்சித்திருந்தார். இந்தியா மற்றும் பிசிசிஐ-க்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஐசிசி மீது அவர் குற்றம் சாட்டினார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் போது இந்தியா நடுநிலையான மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டதால், வங்கதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்று ஆதர்டன் கூறினார்.
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுத்தது குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமாரும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் விளையாட மறுக்கவில்லை. இந்த முடிவு மறுபக்கத்திலிருந்து வந்துள்ளது. ஐசிசி அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசு ஐசிசியுடன் பேசி நடுநிலையான இடத்தை முடிவு செய்துள்ளன. கொழும்பிற்கான எங்களது விமானம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே நாங்கள் நிச்சயமாக அங்கு செல்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
சூர்யகுமார் மேலும் கூறுகையில், “அவர்களது (பாகிஸ்தான்) முடிவு எனது கட்டுப்பாட்டில் இல்லை. 15-ஆம் தேதி போட்டியில் விளையாடுமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையில் நடுநிலையான இடங்களில் அவர்களுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடினோம். கொழும்பில் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், நாங்கள் மீண்டும் விளையாடுவோம்.” என்றார்.