பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நவம்பர் 10, 2022.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக அன்றைய தினம்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது.
அதன்பிறகு, டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றது இந்தியா. இந்த காலகட்டத்தில் 2024-ஆம் ஆண்டு இந்திய அணி 17 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றது.
ஆனால், பிப்ரவரி 22-ஆம் தேதி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மோசமாக விளையாடி, டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற சூப்பர்8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற 20 ஓவர்களில் 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
உள்நாட்டு மைதானத்தில் சுமார் 90,000 பார்வையாளர்கள் முன்னிலையில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
முன்னதாக டி20 உலகக் கோப்பையில் 50 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை.
இந்திய அணி லீக் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வென்றிருந்தாலும், இந்த தோல்வி இந்திய அணியின் பல குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி என்று கணிக்கப்பட்டிருந்த போதிலும், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பயணம் எளிதானதாக இருக்காது என்பதைக் காட்டியுள்ளது.
தொடக்கமே தடுமாற்றம்
பட மூலாதாரம், Getty Images
18, 6, 0, 0, 31, 8, 25, 1, 0 மற்றும் 0. கடந்த 10 போட்டிகளில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்த போது எடுத்திருந்த ரன்கள் இவை.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மாறிமாறி தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய போதிலும், கடந்த 10 போட்டிகளில் ஒரு முறை கூட இந்திய தொடக்க ஜோடி 50 ரன்களை சேர்க்கவில்லை.
இந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, டி20 சர்வதேச போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த சஞ்சு சாம்சன் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இஷான் கிஷன் அணிக்குத் திரும்பிய பிறகு சஞ்சு சாம்சனுக்கு 11 பேர் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என கருதப்படும் சுப்மன் கில், 15 பேர் அணியில் கூட இடம்பெறவில்லை.
சூப்பர் 8 சுற்று நெருங்கிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மூன்று போட்டிகளில் பூஜ்ஜிய ஸ்கோர் எடுத்திருந்த அபிஷேக் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தன்னுடைய கணக்கை தொடங்கினார். ஆனால் அவர் 15 ரன்களை தாண்டவில்லை.
தொடக்க ஜோடி மட்டுமின்றி, பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரரின் ஆட்டமும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. லீக் சுற்றில் திலக் வர்மா 4 போட்டிகளில் 120 எனும் ஸ்டிரைக் ரேட்டில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது அணியில் அவருடைய இருப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது.
நேற்றைய போட்டிக்கு முந்தைய நாள், செய்தியாளர் சந்திப்பில் திலக் வர்மா குறித்துகேப்டன் சூர்யகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யகுமார், “திலக் வர்மாவின் ஆட்டத்திறன் குறித்து யாராவது சந்தேகிக்க முடியுமா” என தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் 7 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அதில் இருந்து கடைசி வரையிலும் மீளவில்லை.
இந்த தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், வெறும் 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது, இந்திய அணி அணியின் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவை காட்டியது. இருப்பினும், கேப்டன் சூர்யகுமார் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், அதற்கு பிறகு வந்த போட்டிகளில் சூர்யகுமாரும் ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார். இந்த தொடரில் 5 போட்டிகளில் அவர் 180 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 127 தான். இது, டி20 சர்வதேச போட்டிகளில் அவருடைய ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட்டான 162 உடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
அவரது மெதுவான பேட்டிங், டாப் ஆர்டரின் தோல்வி இந்திய பேட்டிங் வரிசையில் எந்த அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தொடர்ந்து திணறிய இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 15-வது ஓவரில் கேஷவ் மகாராஜ் மூன்று பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிய போது மிகவும் தெளிவாக தெரிந்தது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பேட்டிங்கில் திணறுவதாக, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “இந்திய அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளித்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றங்களை தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அம்பலப்படுத்தினர். உலகக் கோப்பையின் போது இந்திய பேட்டர்களால் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை..” என பதிவிட்டுள்ளார்.
கேப்டனின் முடிவுகள் எழுப்பும் கேள்விகள்
பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து கேப்டன் சூர்யகுமாரின் முடிவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. துணை கேப்டனாக இருந்த போதிலும் அக்சர் படேல் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது மிகப்பெரிய கேள்வி.
இந்தியாவின் முதல் 6 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறித்தும் விவாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது, இதை இந்திய அணியின் மோசமான வியூகம் என வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.
இந்த முடிவால் இந்திய அணிக்கு எதிராக வியூகம் வகுக்க எதிரணியின் பவுலர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர்கள் தங்களுடைய பந்துவீச்சில் எந்தவொரு பெரிய மாற்றங்களையும் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தந்த போது, அவரை மீண்டும் பந்து வீச வைக்க ஏன் இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் கூறுகையில், “எதிரணியின் மூன்று பேட்ஸ்மேன்களை 21 ரன்களுக்குள் பெவிலியனுக்கு அனுப்பி நன்றாகவே நாங்கள் தொடங்கினோம். ஆனால், 7 முதல் 15 ஓவர் வரையிலும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.” என்றார்.
அரையிறுதிக்கான பாதை எவ்வளவு கடினமானது?
பட மூலாதாரம், Getty Images
தற்போது சூப்பர் 8 சுற்றில் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமல்லாமல், அப்போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தமும் இந்திய அணியின் மீது உள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்தியா அரையிறுதிக்கு வர மற்ற அணிகள் விளையாடும் ஆட்டங்களின் முடிவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம்.
இந்தியா அடுத்த இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, அதே சமயம் தென்னாப்பிரிக்காவும் அதன் இரு போட்டிகளிலும் வென்றால் இந்திய அணி 4 புள்ளிகளையும் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளையும் பெற்றிருக்கும். இதன்மூலம், இந்திய அணி அரையிறுதிக்கு எளிதில் தகுதி பெறும்.
இந்தியா இன்னொரு போட்டியில் தோற்றால் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் ஆபத்தை சந்திக்கும். இந்தியா இரு போட்டிகளிலும் வென்று, தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் தோற்றால் இரு அணிகளும் 4 புள்ளிகளை பெற்றிருக்கும்.
தென் ஆப்ரிக்கா அடுத்த போட்டியில் தோற்றால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் மேம்படும். குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்ரிக்காவை வென்றால் அது இந்தியாவுக்கு பலனளிக்கும். அப்படியான சூழலில், ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி மிகவும் முக்கியமானதாகும். அந்த நிலையில், ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தும் என்ற நம்பிக்கையிலேயே இந்தியா இருக்க வேண்டி வரும். இந்த சூழலில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா இரு புள்ளிகளை பெற்றிருக்கும். இதனால், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் நான்கு புள்ளிகளுடன் தகுதி பெறும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு