நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கான அணிகள் முடிவாகிவிட்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத வாய்ப்புள்ளதா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
சூப்பர்-8 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளன. எனவே, இவ்விரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோத வேண்டுமானால், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டிகள் இன்று (பிப்ரவரி 21) தொடங்குகின்றன. லீக் போட்டிகளில் இருந்து தேர்வான 8 அணிகள் சூப்பர்-8 சுற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்த 8 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா மூன்று போட்டிகளில் விளையாடும்.
சூப்பர்-8 சுற்றின் குரூப் 1-ல் இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் 2-ல் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த டி20 உலகக் கோப்பையில் மீண்டும் மோத வாய்ப்புள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
சூப்பர்-8 சுற்றில் , இரு நாடுகளும் வெவ்வேறு குழுக்களில் இருப்பதால், இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக விளையாட வாய்ப்பில்லை.
இந்த உலகக் கோப்பையில் கொழும்பில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் தோல்வி 8 போட்டிகளாக நீள்கிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் மீண்டும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் என்ன?
அரையிறுதியில் மோதுவதற்கான இரு சாத்தியங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் தனது பிரிவில் முதலிடத்தையும், இந்தியா தனது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தாலும், இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதிப் போட்டி நடப்பது சாத்தியமாகும்.
இந்தக் கேள்விக்கான பதில் ஆம் என்பதுதான். ஆனால் அதற்கு சில முக்கியமான நிபந்தனைகள் உள்ளன.
இந்தியா அரையிறுதிக்குச் செல்ல தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற வலுவான அணிகளையும், ஜிம்பாப்வே போன்ற ஃபார்மில் இருக்கும் அணிகளையும் வீழ்த்த வேண்டும். மறுபுறம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற பலமான அணிகளை எதிர்கொள்ளும்.
இப்போது, சூப்பர்-8 போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது பிரிவுகளில் முன்னிலை பெற்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
அதாவது இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும். ஒரு அணி தனது பிரிவில் முதலிடத்திலும், மற்றொரு அணி தனது பிரிவில் இரண்டாம் இடத்திலும் இருக்க வேண்டும்.
முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 4-ஆம் தேதி கொழும்பு அல்லது கொல்கத்தாவிலும், இரண்டாவது அரையிறுதி மார்ச் 5-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறும். பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டி கொழும்பில் நடைபெறும், இல்லையெனில் கொல்கத்தாவில் நடைபெறும்.
அதாவது சூப்பர்-8 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அட்டவணையில் இல்லை என்றாலும், இரு அணிகளும் சூப்பர்-8 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்தால், அவை அரையிறுதியில் மோதலாம் என்பது தான் இதன் பொருள்.
அரையிறுதி வடிவம் ‘கிராஸ்ஓவர்’ முறையை அடிப்படையாகக் கொண்டது.
குரூப்-1 இல் முதலிடம் பிடிக்கும் அணிக்கும், குரூப்-2 இல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் இடையே அரையிறுதி நடைபெறும். இப்போது, இந்தியா தனது பிரிவில் முதலிடத்தையும், பாகிஸ்தான் தனது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தால் இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதி போட்டி சாத்தியமாகும்.
மற்றொரு சூழலில், பாகிஸ்தான் தனது பிரிவில் முதலிடத்தையும், இந்தியா தனது பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தாலும் இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதிப் போட்டி நடப்பது சாத்தியமாகும்.
ஒருவேளை இரு அணிகளும் தத்தமது பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தாலோ அல்லது இரண்டுமே இரண்டாம் இடத்தைப் பிடித்தாலோ, அந்த அணிகள் அரையிறுதியில் சந்திக்காது.
இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுமா?
பட மூலாதாரம், Getty Images
இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்வதற்கு சாத்தியம் உள்ளது என்பதுதான் இக்கேள்விக்கான பதில். இப்போது இந்தச் சமன்பாட்டையும், இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு என்ன மாதிரியான சூழல்கள் உருவாகும் என்பதையும் புரிந்து கொள்வோம்.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஆமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும்.
பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இல்லாமல் இறுதிப் போட்டி நடப்பதாக இருந்தால், அது ஆமதாபாத்தில் நடைபெறும்.
சூப்பர்-8 போட்டியில் இரு அணிகளும் முதலிடத்தில் இருந்தாலோ அல்லது இரு அணிகளும் இரண்டாவது இடத்தில் இருந்தாலோ, அவர்களுக்கு இடையே அரையிறுதிப் போட்டிகள் நடக்காது.
அப்படிப்பட்ட சூழலில், அவர்கள் தங்கள் அரையிறுதிப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தால் சாம்பியன் பட்டத்திற்காக இரு அணிகளும் மோதலாம்.
அதாவது, சூப்பர்-8 சுற்றிலிருந்து முன்னேறி இரு அணிகளும் வெவ்வேறு அரையிறுதிப் போட்டிகளில் விளையாடி, அதில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் மோதும்.
அரையிறுதியில் வெவ்வேறு எதிரணிகளைத் தோற்கடித்து இரு அணிகளும் முன்னேறினால், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் விளையாடுவதை நாம் காணலாம். கடைசியாக இவ்விரு அணிகளும் 2007-ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.