படக்குறிப்பு, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றது (ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத்)கட்டுரை தகவல்
எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரிட்டனின் எஜ்பாஸ்டன் நகரில் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது மைதானம் நீல நிறமாக மாறியிருந்தது.
இந்திய அணியும் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை. பாகிஸ்தான் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது டி20 உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கியுள்ளது.
ஆசியாவிற்கு வெளியே பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் வெற்றி பெறும் சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் வெற்றியில் தீப்தி சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முக்கிய பங்கு வகித்தார்கள்.
அணி இக்கட்டான நிலையில் இருந்த போது மந்தனா தனது அரைசதம் அணியை மீட்டெடுத்தார். அதே நேரத்தில் தீப்தி, பாகிஸ்தான் பேட்டிங்கின் போது வேகமான தொடக்கத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகி விருதையும் வென்றார்.
ஒரு உலகக் கோப்பையிலிருந்து மற்றொரு உலகக் கோப்பை வரை தீப்தி
பட மூலாதாரம், Philip Brown/Getty Images
படக்குறிப்பு, தீப்தி சர்மா மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார்
தீப்தி சர்மா தனது சிறந்த பந்துவீச்சால் இந்தியாவை வெற்றி பெற வைப்பதை ஒரு வழக்கமாகவே மாற்றிக் கொண்டுள்ளார். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியனாவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதை வென்றார். அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
தீப்தி தற்போது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானை 171 ரன்கள் என்ற இலக்கை எட்டும் கனவைக் கூட காண விடவில்லை.
தீப்தி விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி, பாகிஸ்தானின் நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்த முனீபா அலியை ஒரு சிறந்த த்ரோ மூலம் ரன் அவுட் செய்து, எஞ்சியிருந்த சிறிய நம்பிக்கையையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.
முனீபா, ஃபிரோசாவுடன் பவர்பிளேயில் அதிரடியான முறையில் இன்னிங்ஸைத் தொடங்கிய விதம், இந்திய வீராங்கனைகளின் முகங்களில் சற்று கவலையை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தீப்தி வந்தவுடனேயே குல் ஃபிரோசா மற்றும் ஆயிஷா ஜாஃபர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை பின்தங்கச் செய்தார். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு அவர் வெற்றி தேடித் தந்தார்.
பிட்ச் பற்றி தீப்தி என்ன சொன்னார்?
தீப்தி சர்மா பேசுகையில், “எனக்கு என் மீது எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. சரியான சூழ்நிலை வரும்போதெல்லாம் நான் சிறப்பாக செயல்படுகிறேன். என் செயல்திறனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த வகையான விக்கெட்டுகள் (பிட்ச்) எனக்குப் பிடிக்கும். விக்கெட் மெதுவாக இருந்ததோடு சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாகவும் இருந்தது, அதனால் பந்தின் வேகத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தேன்.”
“நான் மெதுவாக பந்துவீச முடிவு செய்தேன், இது எனக்கு பலன் அளித்தது. அதிக எண்ணிக்கையில் வந்திருந்த ரசிகர்களின் ஆதரவும் முழுமையாகக் கிடைத்தது. ஸ்மிருதி மற்றும் ஹேரி அக்கா (ஹர்மன்பிரீத்) ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பையும் நான் பாராட்ட விரும்புகிறேன், ஏனெனில் இதுதான் போட்டியின் போக்கையே மாற்றியது.” என்றார்.
ஜூலன் சாதனையை நெருங்கும் தீப்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை ஜூலன் கோஸ்வாமி வசம் உள்ளது, தீப்தி சர்மா அவரை விட வெறும் ஒரு விக்கெட் மட்டுமே பின்தங்கியுள்ளார். 2022 இல் ஜூலன் தனது கடைசி போட்டியை விளையாடினார் (கோப்புப் படம்)
இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 355 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை ஆவார். தீப்தி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 354 ஆக உயர்த்தியுள்ளார்.
அவர் இந்த உலகக் கோப்பையின் போது எப்போது வேண்டுமானாலும் ஜூலனின் சாதனையை முறியடிக்கலாம். ஷ்ரைவர் ப்ரண்ட் 335 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், எலிஸ் பெர்ரி 332 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, போட்டிக்கு பிந்தைய கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியின் போது பேசுகையில், “நான் தீப்தியை மிகச் சிறிய வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். என் சாதனையை அவர் முறியடித்தால், அதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்” என்றார்.
“இந்திய பந்துவீச்சாளர்களால் பவர்பிளேயில் நன்றாக பந்துவீச முடியவில்லை. ஆனால் தீப்தி வந்தவுடன் பந்துவீச்சில் வேரியேஷன் செய்து போட்டியின் போக்கையே மாற்றி அமைத்தார்.”
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக வர்ணனை செய்த மற்றொரு வர்ணனையாளரான கிரண் மோர் கூறுகையில், “தீப்தி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, மெதுவான விக்கெட்டில் எப்படி விக்கெட்டுகளை எடுக்கலாம் என்பதைக் காட்டியுள்ளார். அவரது செயல்திறன் நிச்சயமாக சிறப்பாக இருந்தது. இந்த செயல்திறனில் நல்ல ஃபீல்டிங்கும் மிகப் பெரிய பங்காற்றியது” என்றார்.
ஸ்மிருதி மந்தனா சாதனை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவின் வெற்றியில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் ஒருமுறை சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்
பேட்டிங்கில் இந்திய அணியின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிராக இந்த ஆட்டத்திற்கு முன்புவரையிலும் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்ததில்லை.
ஆரம்பத்திலேயே சக ஓப்பனர் ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகள் விழுந்ததாலும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் திட்டமிட்ட பந்துவீச்சாலும் இந்திய அணிக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டது.
மந்தனா இந்த இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டை தக்கவைத்து ஆடிய விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவரது நிதானமான இன்னிங்ஸ்தான் இந்தியாவின் வெற்றிக்கான வழியை வகுத்துக் கொடுத்தது. அவர் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார், அதில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
மந்தனாவுக்கு ஹர்மன்பிரீத் கவுர் நல்ல ஜோடியாக அமைந்தார். இந்த ஜோடி 64 பந்துகளில் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தன் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு சவாலான இலக்கை இந்தியா நிர்ணயிக்க வழிவகை செய்தது.
இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த அவர்கள், களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பின்னரே ரன் வேகத்தை அதிகரித்தனர். மந்தனா இன்னிங்ஸின் மிகப்பெரிய சிறப்பம்சம் அவரது சிறந்த ஷாட் தேர்வு ஆகும்.
மந்தனா இந்த இன்னிங்ஸின் போது இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். அவர் 87 சிக்ஸர்களை அடித்து, ஹர்மன்பிரீத்தின் 86 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் போட்டிக்குப் பிறகு கூறுகையில், “நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் தீப்தி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பிட்ச் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் நாமே தேவையில்லாமல் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் நானும் மந்தனாவும் பேட்டிங் செய்தபோது போட்டி மீண்டும் நமக்கு சாதகமாக மாறியது. நீங்கள் கேட்ச்களைப் பிடிக்கும்போது போட்டி உங்களுக்கு சாதகமாகிவிடும், இந்த போட்டியிலும் அதுதான் நடந்தது” என்றார்.
ரிச்சாவின் பங்கு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிச்சா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்
இந்த உலகக் கோப்பை தயாரிப்புக்காக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய நட்பு ரீதியான போட்டியில் ரிச்சா கோஷ் 36 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அப்போது கூறுகையில், “நாங்கள் ரிச்சாவின் நம்பிக்கை திரும்புவதற்காகக் காத்திருந்தோம். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீராங்கனை. அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறியிருந்தார்.
கேப்டனின் இந்த எதிர்பார்ப்புகளை ரிச்சா முழுமையாகப் பூர்த்தி செய்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் உள்பட இரண்டு-மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தபோது, இந்திய அணி 150 ரன்களை எட்டுமா என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுந்தது.
ஆனால் ரிச்சா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டு சென்றார்.
கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் ஜூலன் கூறுகையில், “ரிச்சாவுக்கு என்று ஒரு தனி கிளாஸ் இருக்கிறது. அவர் ஆட்டத்தை கொண்டு செல்லும் விதம் அற்புதம். அவரிடம் ஒவ்வொரு பந்தையும் விளையாட மூன்று ஆப்ஷன்கள் உள்ளன, அவர் எப்போதும் சிறந்த ஆப்ஷனையே பயன்படுத்துகிறார்” என்றார்.
இந்தியாவின் இந்த வெற்றியின் போது ஷஃபாலி வர்மா பேட்டிங்கில் பெரிய பங்களிப்பை அளிக்க முடியாவிட்டாலும், டி20 உலகக் கோப்பையில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.