• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

அங்கயற்கண்ணி அன்னக்குடில் பெயர் மாற்றமா? – முல்லைத்தீவில் சர்ச்சை

Byadmin

May 7, 2026


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அமைந்திருந்த “அங்கயற்கண்ணி அன்னக்குடில்” எனும் பாரம்பரிய உணவகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த உணவகம் 2021 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி உண்ணாப்புலவு சந்தியில் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான முழுமையான நிதி உதவி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், உணவகத்தின் முகாமை மற்றும் மேற்பார்வை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

“அங்கயற்கண்ணி அன்னக்குடில்” என்ற பெயர் திறப்பு விழாவுக்கு முன்பும் பின்னரும் பல்வேறு தரப்பினரால் ஆராயப்பட்டதாகவும், அப்போதைய முகாமையாளர் உள்ளிட்டோரிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இருந்ததால், அந்த பெயர் 2021 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவுகளை வழங்கி வந்த இந்த உணவகம், காலப்போக்கில் “அங்கயற்கண்ணியடி” என்ற அடையாளத்துடனும் மக்கள் மத்தியில் அறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அந்த உணவகத்தில் “அரியாத்தை” என்ற பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விசுவமடு – தேராவில் பகுதியில் “அரியாத்தை” என்ற பெயரில் ஏற்கனவே ONUR திட்டத்தின் கீழ் மற்றொரு உணவகம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், “அங்கயற்கண்ணி அன்னக்குடில்” பெயர் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டதா? அல்லது தேராவில் இயங்கிய “அரியாத்தை” உணவகத்துடன் தொடர்புபடுத்தும் நோக்கில் இந்த புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த பெயர் மாற்றம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் நிலவி வருகின்றன.

By admin