2
‘கேளடி கண்மணி’ படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகரும், நடிகருமான மறைந்த ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் சரணத்தில் மூச்சு விடாமல் பாடி ரசிகர்களை வியக்க வைத்திருப்பார். அதேபோன்றதொரு முயற்சியை அதர்வா நடிப்பில் தயாராகும் ‘இதயம் முரளி’ படத்திற்காக அப்படத்தின் இசையமைப்பாளரும், பாடகருமான தமன் முயற்சி செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், எஸ் .தமன், நிகாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹாம்சா மற்றும் சி ஹெச் சாய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கட்டழகி..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத , பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான எஸ். தமன் பாடி இருக்கிறார்.
இந்த பாடலின் சரணத்தில் மேலத்தேய தாள லயத்தில் தமன் மூச்சு விடாமல் பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த பாடலின் ஒலி கலவை துல்லியமாக இல்லை என்ற எதிர்மறையான விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. அத்துடன் இந்த பாடலுக்கான திரை மொழியில் நடிகை கயாடு லோகர் அணிந்திருக்கும் ஆடையும், ஆடை வடிவமைப்பும் நடனத்திற்கு பொருத்தமில்லாமல் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்திருக்கிறது.