கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையில் நடைபெற்ற நேரடி விவாதம், அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உற்று நோக்கப்பட்டது.
ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற இந்த விவாதத்தில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே வெளியுறவுக் கொள்கை சார்ந்து தீவிரமான விவாதம் நடைபெற்றது.
பீஜிங் முதல் பூடாபெஸ்ட் வரை இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை பிபிசியின் வெளிநாட்டு செய்தியாளர்கள் இங்கு தொகுத்துள்ளனர்.
விவாதத்தை கவனித்த ரஷ்ய அதிபர் மாளிகை
பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவில் இருந்து ரஷ்ய அதிபர் மாளிகை இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறது என்பது குறித்து விவரித்துள்ளார்.
“உங்களை மதிய உணவுக்குச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அதிபர் புதின் ஒரு சர்வாதிகாரி,” என டொனால்ட் டிரம்பிடம் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
“மதிய உணவு (அல்லது காலை உணவு, அல்லது வேறு எந்த உணவுக்கும்) யாரையாவது சாப்பிடுவது’ என்ற பதம் ரஷ்யாவில் இல்லை. ஆனால், தங்கள் நாட்டுக்குப் பலனளிக்கும் வகையிலான அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து ரஷ்யாவுக்கு நாட்டம் உள்ளதை நீங்கள் காண முடியும்.
போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என விரும்புகிறீர்களா என்ற கேள்வியை டிரம்ப் தவிர்த்ததை ரஷ்ய அரசு கவனித்துள்ளது.
“போர் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்,” என டிரம்ப் தெரிவித்தார்.
அதற்கு முரணாக “யுக்ரேனின் தார்மீக ரீதியிலான தற்காப்பு” குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், விளாடிமிர் புதின் “மற்ற ஐரோப்பிய நாடுகளை பார்த்துக் கொண்டிருப்பதாக” தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான விவாதத்தில் புதின் குறித்துக் கூறப்பட்டவை எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவில் உள்நாட்டுக்குள் நடைபெறும் சண்டையில் புதினின் பெயர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் என்னிடம் தெரிவித்தார்.
“எங்களுக்கு இது பிடிக்கவில்லை. அதிபரின் பெயரை இதிலிருந்து அவர்கள் விலக்கி வைப்பார்கள் என நம்புகிறேன்.”
தான் இந்தத் தேர்தலில் ஹாரிஸை ஆதரிப்பதாக கடந்த வாரம் தெரிவித்த புதின், “அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிரிப்பை அவர் கொண்டிருப்பதாக” கூறினார்.
புதினின் கருத்துகள் “விசித்திரமானவை” என, பின்னர் இதுகுறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சித் தொகுப்பாளர் தெளிவுபடுத்தினார்.
ஹாரிஸின் அரசியல் திறமைகளை நிராகரித்த அந்தத் தொகுப்பாளர், அவர் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் எனக் கூறினார்.
மேலும், அந்த சமையல் நிகழ்ச்சியில் “சர்வாதிகாரிகள்” அமெரிக்க அதிபர் வேட்பாளர்களை “மதிய உணவுக்கு” உண்பது காட்டப்படுமா என்று தான் ஆச்சரியப்படுவதாகவும் கூறினார்.
டிரம்ப் கருத்துகள் குறித்த யுக்ரேனின் கவலை
டிரம்பின் கருத்துகள் மீதான யுக்ரேனின் கவலை குறித்த பார்வையை பிபிசியின் ஐரோப்பிய செய்தியாளர் நிக் பீக், கீயவ் நகரிலிருந்து வழங்கியுள்ளார்.
விவாத மேடையில், யுக்ரேன் போரில் வெல்ல வேண்டும் என விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு டிரம்ப் பதில் சொல்லாதது, யுக்ரேன் மக்களை ஆச்சர்யப்படுத்தவில்லை. மாறாக, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானால் என்ன நிகழும் என்பது குறித்த கவலையில் அவர்களை ஆழ்த்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையைத் தன்னால் ஒரே நாளில் நிறுத்த முடியும் என டிரம்ப் நீண்ட காலமாகத் தெரிவித்து வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரஷ்யா கைப்பற்றிய பெரும்பகுதியை விட்டுக் கொடுக்கும் வகையிலான மோசமான ஒப்பந்தத்தை உருவாக்குவதுதான் டிரம்ப் வார்த்தைகளின் அர்த்தம் எனப் பெரும்பாலான யுக்ரேனியர்கள் நம்புகின்றனர்.
மறுபுறம், தற்போது இருக்கும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகுவது குறித்து எந்த அறிகுறியையும் கமலா ஹாரிஸ் வெளிப்படுத்தாததால், யுக்ரேனியர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.
முழு அளவிலான படையெடுப்புக்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் முக்கியமான உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்ட கமலா ஹாரிஸ், யுக்ரேன் விஷயத்தில் தான் ஆற்றிய பங்கு குறித்துத் தெரிவித்தார்.
டிரம்ப் அதிபராக நீடித்திருந்தால் அவருடைய நிலைப்பாடு, யுக்ரேனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறிய ஹாரிஸ், “டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், புதின் தற்போது யுக்ரேனில் அமர்ந்துகொண்டிருப்பார்,” என்றார்.
யுக்ரேனின் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் விவாதம் தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகின்றனர். ஏற்கெனவே தங்கள் நாட்டில் சண்டையை எதிர்கொண்டு வரும் யுக்ரேன், அமெரிக்க தேர்தல் குறித்து எடைபோடத் தேவையில்லை.
டிரம்ப் வெற்றி பெறுவது யுக்ரேனியர்களுக்கு என்னவாக இருக்கும் என அதிபர் ஸெலென்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பிபிசியிடம் பேசிய ஸெலென்ஸ்கி, “அதற்கு (டிரம்புடன் இணைந்து பணியாற்ற) கடின உழைப்பு தேவை, ஆனால் நாங்கள் கடின உழைப்பாளர்கள்” என்றார்.
அப்துல் யார்?
பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லீஸ் டுசெட், டொனால்ட் டிரம்ப் தாலிபன்கள் குறித்து விவாதத்தில் குறிப்பிட்டவை பற்றி விவரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட், 2021இல் காபூலை நோக்கி தாலிபன்கள் எதிர்பாராத விதமாக முன்னேறியபோது, தங்களின் மீதமுள்ள படையினர் மற்றும் தங்கள் நாட்தனது நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நீண்டகால போர் முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவின் இந்தத் தோல்வி குறித்து விவாதத்தில் பேசப்பட்டபோது, ஆச்சர்யத்திற்கு இடமின்றி அந்த விவகாரம் புறக்கணிக்கப்பட்டது.
“படையினரைத் திரும்பப் பெற்ற விதத்திற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?” என்ற கேள்வியை கமலா ஹாரிஸ் திசை திருப்பினார்.
படையினரைத் திரும்ப பெற்றது குறித்து உன்னிப்பாகப் பின்தொடர்ந்து வரும் செய்தியாளராக, துரதிருஷ்டவசமான கடைசி வாரங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஹாரிஸ் அந்த அறையில் இருந்ததாக நான் கேள்விப்படவே இல்லை. ஆனால், படையினரைத் திரும்பப் பெறும் அதிபர் பைடனின் முடிவை ஏற்றுக்கொண்டதாக ஹாரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
“தற்போதும் தாலிபனின் தலைவராக உள்ள அப்துலிடம்” தான் கடுமையாகப் பேசியதாக டிரம்ப் பெருமையாகத் தெரிவித்தார்.
அமெரிக்க படையினரைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்துல் கானி பரடார்-ஐ டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
ஆனால், அவர் தாலிபனுக்கு எப்போதும் தலைமை வகித்ததில்லை. மேலும், தாலிபன் கட்டுப்பாட்டுக்கு ஆப்கன் வந்ததில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டதில் இருந்து இணையத்தில் அப்துல் எனப் பெயரிட்டவர்கள் இதுதொடர்பாக கேலியான மீம்களை பகிர்ந்தனர். பலரும் இணையத்தில் “அப்துல் யார்?” எனக் கேட்டிருந்தனர்.
தாலிபனிடம் குறைகளுடன் கூடிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது குறித்து இரு வேட்பாளர்களும் கவனம் செலுத்தினர். டிரம்ப் அரசுதான் அமெரிக்க படையினரை திரும்பப் பெறும் திட்டத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தியது; அதை பைடன் அரசாங்கம் அவசரமாக நிறைவேற்றியது.
“நாம் வெளியேறுவதால்” இந்த ஒப்பந்தம் சிறப்பானது என டிரம்ப் தெரிவித்தார்.
வேறு எந்த வழியும் இல்லை. ஆனால், படையினர் வெளியேறிய விதம், பேரழிவாக மாறியது. இதற்கு அனைத்துத் தரப்பையும் குற்றம் சொல்ல வேண்டும்.
சீனா குறித்த கருத்து
பிபிசியின் சீன செய்தியாளார் லாரா பீக்கர், பீஜிங்கில் இருந்து இந்த விவாதத்தின் மீதான சீனாவில் உள்ள தலைவர்களுடைய பார்வையை விவரித்துள்ளார்.
சீனாவில் உள்ள தலைவர்களுக்கு இந்த விவாதத்திற்குப் பின்னரும் கமலா ஹாரிஸ் அறியப்படாத ஒருவராகவே உள்ளார்.
சீனாவில் ஹாரிஸின் கடந்த காலம் குறித்த பதிவுகள் இல்லை. 21ஆம் நூற்றாண்டுக்கான போட்டியில் வெற்றி பெறப்போவது அமெரிக்கா தான், சீனா அல்ல என்ற தன்னுடைய கருத்தை மீண்டும் ஹாரிஸ் கூறினார்.
சீனாவுக்கு பிடிக்காத ஒன்றை கமலா ஹாரிஸ் வலியுறுத்தி பேசினார் – உறுதியற்ற தன்மை.
அதனால்தான், அமெரிக்க அதிகாரிகளின் சமீபத்திய வருகையை, அதிபர் ஷி ஜின்பிங், இரு வல்லரசுகளுக்கு இடையே “ஸ்திரத்தன்மை” வேண்டும் என அழைப்பு விடுக்கப் பயன்படுத்திக் கொண்டார். இதை அமெரிக்க துணை அதிபருக்கான செய்தியாக ஷி ஜின்பிங் கூறினார்.
அதிபர் பைடனின் மெதுவான மற்றும் கவனமான ராஜ்ஜிய ரீதியிலான அணுகுமுறையையே கமலா ஹாரிஸ் பின்பற்றுவார் என, சீனாவில் உள்ள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால், கமலா ஹாரிஸ் விவாத மேடையில், டொனால்ட் டிரம்ப் “சீன ராணுவத்தை மேம்படுத்தவும் நவீனமாக்கவும் அந்நாட்டுக்கு அமெரிக்க ‘சிப்’களை விற்பதாக” தாக்கிப் பேசினார்.
சீனப் பொருட்கள் மீது 60 சதவீத வரி விதிப்பதே தனது திட்டம் என, டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் அதிபராக இருந்த காலகட்டத்தில் வர்த்தகப் போர் தொடங்கக் காரணமாக இருந்த வரியுடன் இது கூடுதலாகச் சேர்க்கப்படும். அதற்கு சீனா பதிலடி கொடுக்கவே, இரு தரப்பிலும் இதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டதைப் பல்வேறு ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
தங்கள் பொருளாதாரத்தை மீட்க பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கு இதைத்தான் சீனா விரும்புகிறது. தாங்கள் விரும்பாத ஒன்றை டிரம்ப் வலியுறுத்துவதாக, சீன தலைவர்களிடம் நிலவிய நம்பிக்கையைத் தணிக்க இந்த விவாதம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இது சீனாவுக்கு பிடிக்காத மற்றுமொரு விஷயம் – கணிக்க இயலாமை.
ஆனால், அமெரிக்க அதிபராக யார் வந்தாலும், உண்மையில் சீனா மீதான அமெரிக்க கொள்கை பெரிதளவில் மாறும் எனச் சிறிது நம்பிக்கை எழுந்துள்ளது.
அதிபர் தேர்தலை உற்றுநோக்கும் மத்திய கிழக்கு
அதிபர் தேர்தலை உற்றுநோக்கி வரும் மத்திய கிழக்கில் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையிலான விவாதம் குறித்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை சர்வதேச செய்தியாளர் பால் ஆடம்ஸ், ஜெருசலேமில் இருந்து விளக்கியுள்ளார்.
இரு வேட்பாளர்களும் தாங்கள் முன்பு கூறிய கருத்துகளையே விவாதத்தில் கூறினர். தனது போட்டியாளர் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என டிரம்ப் மிகைப்படுத்திக் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் மத்திய கிழக்கில் உற்றுநோக்கப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் சிலர், காஸாவில் நடந்து வரும் வன்முறை மற்றும் போர்நிறுத்த உடன்படிக்கையில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாததால், ஹாரிஸைவிட ட்ரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில், தேர்தல் முடியும் வரை இஸ்ரேலிய பிரதமர் வேண்டுமென்றே தள்ளிப்போடுவதாக நம்புகிறார்கள்.
இந்நிலையில், வரலாறு மீண்டும் திரும்பும் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது.
கடந்த 1980ஆம் ஆண்டில் ரொனால்ட் ரீகனின் பிரசாரக் குழு, டெஹ்ரானில் பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க பணயக் கைதிகளை, அதிபர் ஜிம் கார்ட்டரை தோற்கடிக்கும் வரை விடுவிக்க வேண்டாம் என்றும் இதனால் இரானுக்கு சிறப்பான ஒப்பந்தம் கிடைக்கும் என்றும் இரானை வலியுறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதேபோன்று இப்போதும் நடக்குமா?
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முக்கியத் தடையாக நெதன்யாகு இருப்பதாக அவருடைய எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஜோ பைடனைவிட இஸ்ரேல் விவகாரத்தில் தான் கடுமையாக இருக்கப் போவதாக ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். அதைப் பயன்படுத்திக்கொண்ட டிரம்ப், துணை அதிபர் “இஸ்ரேலை வெறுப்பதாக” விவாதத்தில் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் பற்றி ஆழ்ந்த சந்தேகம் கொண்ட பாலத்தீனர்கள், காஸாவில் போரை நிறுத்த பைடன் நிர்வாகத்தின் இயலாமையால் திகைத்துள்ளனர். விரும்பத்தகாத இரு வாய்ப்புகளில் குறைவான தீமை கொண்ட நபராக அவர்கள் ஹாரிஸை பார்க்கின்றனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா ஒரு நேர்மையான மத்தியஸ்தர் என்ற கருத்தை அவர்கள் நீண்ட காலமாகக் கைவிட்டுள்ளனர். ஆனால் ஹாரிஸ், டிரம்பை போலல்லாமல், பாலத்தீன தனிநாட்டுக்கு உறுதியளித்ததாகக் கூறுவதைக் கவனித்திருப்பார்கள்.
ஹங்கேரி பிரதமருக்கு பாராட்டு
பூடாபெஸ்டில் இருந்து மத்திய ஐரோப்பா செய்தியாளர் நிக் தோர்பே, டிரம்ப் ஹங்கேரி பிரதமர் குறித்துப் பேசியது பற்றி அலசியுள்ளார்.
ஹங்கேரி பிரதமரை டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
“விக்டர் ஆபன், மதிக்கத்தக்க மனிதர்களுள் ஒருவர், அவரை வலுவான நபர் என அழைக்கின்றனர். அவர் கடுமையான, மிடுக்கான நபர்.”
டிரம்பின் பாராட்டை ஹங்கேரி அரசுக்கு ஆதரவான ஊடகம் குறிப்பிட்டுள்ளது. “பெரிய அங்கீகாரம்!” எனத் தலைப்பிட்டு, மக்யர் நெம்ஸெட் (Magyar Nemzet) செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அரசை விமர்சிக்கும் செய்தி இணையதளமான 444, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான டிம் வால்ஸின் கருத்தை மேற்கோளிட்டு வெளியிட்டுள்ளது.
“அவருடன் (டிரம்ப்) ஆதரவாக உள்ள ஒரு உலகத் தலைவர் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆபன் என்கிறார். கடவுளே, எங்களுக்குத் தெரிய வேண்டியது இதுதான்,” என்றார் டிம் வால்ஸ்.
கடந்த 2016ஆம் ஆண்டில் டிரம்ப் அதிபர் வேட்பாளராக இருந்தபோது, விக்டர் ஆபன் அவருக்கு ஆதரவளித்தார், வரும் நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலிலும் டிரம்புக்கு அவர் ஆதரவாக உள்ளார்.
கீயவ், மாஸ்கோ, பீஜிங் ஆகியவற்றுக்கு ஆபன் பயணம் மேற்கொண்ட பின்னர், கடந்த ஜூலை 12 அன்று ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் இல்லத்தில் இருவரும் நட்பு ரீதியாகச் சந்தித்தனர். இது, இந்த ஆண்டில் அவர்களின் இரண்டாவது சந்திப்பு.
ஆபன் நிர்வாகம் டிரம்பின் வெற்றி மற்றும் யுக்ரேனில் நடைபெறும் போருக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கும் அவரது திறனை நம்புகிறது.
“எல்லாம் மாறி வருகின்றன. டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், அமைதி நிலவும். ஐரோப்பியர்கள் இல்லாமல் அவரால் இதைச் செய்ய முடியும்,” என்று ஆபனின் அரசியல் இயக்குநர் பலாஸ் ஆபன் பிபிசியிடம் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.