விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு ஆயுதத்தை நிலைநிறுத்தியதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இத்தகைய தாக்குதல் திறன்களை அது ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
எதிரிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்கு சுற்றுப்பாதையில் உள்ள இந்த ஆயுதம் அவசியமானது என்று அமெரிக்க விமானப் படைச் செயலாளர் டிராய் மெய்ங்க் தெரிவித்தார்.
திங்களன்று நடைபெற்ற வான், விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய மெய்ங்க், “வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை” எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், இந்த ஆயுதத்தின் திறன்கள் குறித்தோ அல்லது இது எப்போது சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது என்பது குறித்தோ அவர் விவரங்களை வெளியிடவில்லை.
எதிர்கால மோதல்களில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்கவும், அவற்றை முடக்கவும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் திட்டங்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டு, விண்வெளியில் தங்களது ராணுவத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் “ஆயுதப் போட்டியில்” ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து சீனா செவ்வாய்க்கிழமை பதிலளித்தது.
“அமெரிக்கா தனது ராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதையும், விண்வெளியில் போருக்குத் தயாராவதையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
இது குறித்து அமெரிக்க விண்வெளிப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விண்வெளியை ஆதிக்கம் செலுத்துவதும் கட்டுப்படுத்துவதும் எங்களது முதன்மைப் பணியாகும். தேவைப்பட்டால், எதிரிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கவும், அவற்றை முடக்கவும் அல்லது அழிக்கவும் கூடிய வழிகள் பின்பற்றப்படும். ராணுவக் கட்டளைகளின்படி, இத்திறன்கள் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்” என்றார்.
விண்வெளி ராணுவத் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், இத்தொழில்நுட்பத்தைப் பற்றிப் பொதுவெளியில் “மிகக் குறைவாகவே” தெரியவந்துள்ளதாகவும், இதில் “பல்வேறு வகையான ஆயுத அமைப்புகள்” இடம்பெற்றிருக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.
‘ரேடியோ 4’-இன் ‘டுடே’ நிகழ்ச்சியில் பேசிய ‘ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்’ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பிளெடின் போவன், “இது முற்றிலும் எனது ஊகம் மட்டுமே” எனக் குறிப்பிட்டு, அமெரிக்கா சுட்டிக்காட்டியது “ஒருவகை மின்னணுப் போர் முறை அல்லது ரேடியோ ஜாமிங் தளமாக” இருக்கலாம் என்றார்.
இத்தகைய ஆயுதங்கள் ஏற்கனவே பூமியில் பயன்பாட்டில் உள்ளவை என்றும், அவை ரேடியோ தொடர்புகளைத் துண்டிக்கும் திறன் கொண்டவை என்றும் போவன் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு சாத்தியக்கூறாக, “செயற்கைக்கோள் மீது ஏதேனும் ஒரு பொருளை அல்லது ஏவுகணையை மோதவிட்டு அழிக்கும் ‘தாக்குதல் வாகனம்’ ஆகக்கூட இது இருக்கலாம்” என்றார்.
ஆனால், இத்தகைய நேரடித் தாக்குதல் சாதனங்கள் அதிக அளவிலான விண்வெளிக் கழிவுகளை உருவாக்கும் என்பதால், இதற்குச் சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் போவன் மேலும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Thomas Traasdahl/Ritzau Scanpix/AFP via Getty Images
படக்குறிப்பு, பிட்டுஃபிக் விண்வெளித் தளம், வடக்கு கிரீன்லாந்து (அக்டோபர் 4, 2023): பின்னணியில் மேகமூட்டமான ஆரஞ்சு நிற மாலையோந்தி வானிருக்க, முன்புறத்தில் சரக்குக் கொள்கலன்களுக்கு அருகில் கம்பீரமாக நிற்கும் ஒரு பெரிய செயற்கைக்கோள் உணர்வித் தட்டு
ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள “கோல்டன் டோம்” தற்காப்பு அமைப்பில், விண்வெளி சார்ந்த திறன்களும் இடைமறிப்பு ஏவுகணைகளும் மிக முக்கியமான அங்கமாகும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாதனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஒரு தாக்குதல் சக்தியாகவும் செயல்படுவதில் அமெரிக்க விண்வெளிப் படையின் பங்கை வலியுறுத்தும் வகையிலான நிர்வாக உத்தரவு ஒன்றை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிறப்பித்தார்.
சுமார் 70 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட முதல் புதிய பிரிவான ‘அமெரிக்க விண்வெளிப் படை’ 2019-இல் தொடங்கப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புக்குப் பயன்படும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அமெரிக்கச் சொத்துகளை விண்வெளியில் பாதுகாப்பதே இதன் முதன்மையான நோக்கம்.
1967-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்று விண்வெளிச் சுற்றுப்பாதையில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. அன்றிலிருந்து, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற முக்கிய வல்லரசுகள், அந்த ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட பிற திறன்களை ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக ராணுவத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கு மிக முக்கியமான எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை இலக்கு வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பிப்ரவரி தொடக்கத்தில், 2022-இல் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, குறைந்தது ஒரு டஜன் ஐரோப்பிய செயற்கைக்கோள்களின் தகவல் தொடர்புகளை இரண்டு ரஷ்ய செயற்கைக்கோள்கள் இடைமறித்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியானது.
இத்தகைய இடைமறிப்புகள் மூலம், அந்தச் செயற்கைக்கோள்கள் அனுப்பிய உணர் திறன்மிக்கத் தரவுகளை ரஷ்ய உளவு அமைப்புகள் படித்திருக்கக் கூடும் அல்லது கோட்பாட்டு ரீதியாக, அந்தச் செயற்கைக்கோள்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கூட கொண்டு வந்திருக்கக் கூடும்.
2024-இல், பிற செயற்கைக்கோள்களைத் தாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் ஒரு செயற்கைக்கோளை ரஷ்யா ஏவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும், ரஷ்யா இது குறித்து பகிரங்கமாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
சீனா “தனது ராணுவ நவீனமயமாக்கல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் எதிர்-விண்வெளித் திறன்களை உருவாக்கி இயக்கி வருகிறது” என்றும், அதேவேளையில் ரஷ்யா “விண்வெளியை ஒரு போர்க்களமாகக் கருதுவதோடு, எதிர்கால மோதல்களில் விண்வெளி ஆதிக்கமே தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று நம்புகிறது” என்றும் அமெரிக்க விண்வெளிப் படை தெரிவிக்கிறது.