- எழுதியவர், ஐயோன் வெல்ஸ், ஜெஸிகா க்ரூஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
-
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள லத்தீன் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு மிகப்பெரிய கேள்வி அல்லது சந்தேகம் என்னவென்றால், கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா என்பது தான்.
“ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் பற்றிய பல்வேறு விதமான தவறான செய்திகள் மக்கள் மத்தியிலும் இணையத்திலும் வலம் வர ஆரம்பித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று அவர் சோஷலிஸ்ட்டா அல்லது கம்யூனிஸ்ட்டா என்பதுதான்” என்கிறது ஸ்பானீஷ் மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் உண்மை அறியும் நிறுவனமான ஃபேக்ட்செக்யூடோ (Factchequeado).
கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் அடக்குமுறைக்கு ஆளாகி அங்கிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிப்பது போல் இது போன்ற செய்திகள் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கமலா ஹாரிஸின் கொள்கை சார்ந்து வெளியாகும் மீம்கள், வைரல் வீடியோக்களில் சமீபமாக அனைவராலும் பேசப்பட்டது, தீவிர இடதுசாரி கட்சியான அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (Revolutionary Communists of America) சின்னத்தின் முன்பு கமலா ஹாரிஸும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிம் வால்ஸும் நின்றிருக்கும் வீடியோ தான்.
இந்த வீடியோ உண்மையா என்றால் இல்லை. டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களாக அறியப்படும் தில்லே மீம் குழு (Dilley Meme Team) தான் இப்படி ஒரு வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். ஸ்பானீஷ் மொழி பேசும் மக்களால் இணையத்திலும், ஆஃப்லைனிலும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ.
அவர் கம்யூனிஸ்ட்டா என்ற சந்தேகம் தற்போது அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்று பிபிசியிடம் கூறுகிறார் தெற்கு ஃப்ளோரிடாவைச் சேர்ந்த கலாசார பின்னணி உத்தி வகுப்பாளரான எவலின் பெரெஸ் – வெர்தியா.
மயாமியில் செயல்பட்டு வரும் ஸ்பானீஷ் மொழி வானொலியான ல நியூவா பொதெரோஸாவில் (La Nueva Poderosa) இந்த போலி வீடியோவை வைத்து விவாதம் ஒன்றை நிகழ்த்தியதை கேட்டதாக கூறுகிறார் எவலின்.
“அவர்கள் அந்த சின்னத்தின் முன் நின்றிருப்பதை பார்த்தீர்களா? அவர்களின் பின்புலம் குறித்து கொஞ்சம் கூட வெட்கம் இல்லை,” என்று அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறியுள்ளார்.
எவலின் அந்த வானொலியை தொடர்பு கொண்டு அந்த வீடியோ பொய்யானது என்று கூறியுள்ளார். இருப்பினும் கூட, மக்கள் மத்தியில் பேசும் போது அந்த தொகுப்பாளர், “அந்த மீம் தரும் செய்தி தவறானதுதான். ஆனால் கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிய சிந்தனையாளர் என்பதற்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை,” என்று கூறிவிட்டார்.
ஆயுதமாக்கப்பட்டுள்ள அச்சம்
அமெரிக்காவில் 36.2 மில்லியன் லத்தீன் மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அமெரிக்காவில் இவர்களின் வாக்கு வங்கி 14.7% ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் நெவேடா, அரிஸோனா போன்ற மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
பிராந்திய ரீதியாக அங்குள்ள அனைவரும் ஒரே மாதிரியாக வாக்களிப்பார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் லத்தீன் மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 44% மக்கள் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர். 16% நபர்கள் மட்டுமே டிரம்புக்கு ஆதரவு அளித்தனர்.
பொருளாதாரம், புலப்பெயர்வு, கருக்கலைப்பு உரிமைகள் போன்ற காரணிகள் அடிப்படையில் இங்கு குடியரசுக் கட்சியினருக்கு ஆதரவு அதிகரித்து வருவதை கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
இன்றைய அமெரிக்காவின் நிலை, கடந்த காலத்தில் தங்கள் சொந்த நாட்டில் நிலவிய சூழலை பிரதிபலிப்பதாக பல லத்தீன் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தெற்கு ஃப்ளோரிடா போன்று கியூபா மற்றும் வெனிசுவேலாவை பூர்வீகமாக கொண்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சோஷலிசம் அல்லது கம்யூனிசம் குறித்த எச்சரிக்கையுடன் கூடிய செய்திகள் அதிகமாக உலவுவதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.
ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கும், மயாமியை சேர்ந்த வெனிசுவேலாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான சமந்தா பாரியோஸ், “தங்கள் நாட்டில் அடக்குமுறை காரணமாக தப்பி வந்த மக்கள் மத்தியில் கம்யூனிசம் தொடர்பான தவறான தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன,” என்று கூறுகிறார்.
எங்கள் நாடுகளில் இருந்து வெளியேறியதற்கும், வெளியேறுவதற்கும் இது தான் ஒரு முக்கிய காரணம் என்பதால், வெனிசுவேலா, கியூபா, நிகரகுவா நாடுகளை சேர்ந்த மக்களை பயமுறுத்த இது போன்ற சொற்களை தீவிர வலதுசாரி ஊடகங்கள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சமந்தா.
வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகளில் நடந்த அரசியல் அடக்குமுறைக்கு அமெரிக்கா பலமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதுமே அவர்கள் ஜனநாயகக் கட்சியை விமர்சிக்க காரணமாக இருக்கிறது என்று ஒரு சிலர் கூறுகின்றர்.
கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்று பொய்யாக பரப்பப்படும் தகவல்கள் காரணமாக லத்தீன் மக்கள் மத்தியில் நிலவும் நியாயமான சந்தேகங்களும் கூட அரசியலுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்று கவலை தெரிவிக்கிறார் சமந்தா.
பெரெஸ் – வெர்தியா இதுகுறித்து பேசும் போது, லத்தீன் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சியினர் எடுக்க தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
“மக்களின் அச்சத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். இது மரியாதையற்ற செயல். மக்களிடம் நியாயமான பயம் இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்” என்று வெர்தியா கூறுகிறார்.
விவாதமாகும் ‘கம்யூனிஸ்ட்’ கருத்து
இது போன்ற தகவல்கள் லத்தீன் மக்களை மட்டுமே இலக்காக கொண்டு வெளிவருவதில்லை என்று டிஜிட்டல் டெமாக்ரசி இன்ஸ்டிட்யூட் ஆஃப் தி அமெரிக்காஸ் (DDIA) கூறுகிறது. ஸ்பானீஷ், போர்த்துகீசிய மொழியில் செயல்பட்டு வரும் 1300க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்கள், மற்றும் 200 டெலிகிராம் சேனல்களை மேற்பார்வையிட்டு வருகிறது இந்த நிறுவனம்.
2020-ஆம் ஆண்டு முதல் சோஷலிசம் சார்ந்த பயத்தை வலதுசாரியினர் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்கள், நடிகர்கள், இன்ஃபுளுயென்சர்கள் மக்கள் மத்தியில் திணித்துள்ளனர் என்று இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஃபேக்ட்செக்யூடோவின் நிறுவர் லாரா ஸோம்மர் இது குறித்து பேசும் போது, ஜோ பைடன் அதிபர் பதவிக்கு போட்டியிடும் போது அவர் கம்யூனிஸ்ட் என்று பரப்புரைகள் செய்யப்பட்டதை நினைவு கூறுகிறார். ஏ.ஐ. கொண்டு உருவாக்கப்பட்ட படங்களையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் இந்த அளவுக்கு முன் எப்போதும் பார்த்ததில்லை என்று குறிப்பிடுகிறார்.
சில போலி செய்திகள் டிரம்பின் மூலமாகவோ அல்லது அவரை ஆதரிக்கும் மிகப்பெரிய ஆளுமைகளாலோ பகிரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க், கம்யூனிஸ்ட் கட்சியின் சுத்தியும் அரிவாளும் கொண்ட சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற சீருடையில் கமலா ஹாரிஸ் நிற்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில்,”முதல் நாளே, கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியாக செயல்பட சபதம் கொண்டிருக்கிறார். இந்த உடையை அவர் அணிந்திருக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா,?” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் எலோன்.
இந்த பதிவை 83.9 மில்லியன் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யும் போது, இந்த சீருடையில் வந்த ஆரம்ப கால பதிவுகளில் இதுவும் ஒன்று என தெரிய வந்துள்ளது.
கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் மத்தியில் கமலா பேசுவது போன்ற ஏ.ஐ. புகைப்படம் ஒன்றை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டிருந்தார். எக்ஸ் தளத்தில் 81.5 மில்லியன் மக்கள் அதனை பார்வையிட்டுள்ளனர். ஆனால் அதேபோன்ற புகைப்படங்கள் இதற்கு முன்பும் பதிவிடப்பட்டிருந்தன.
பிபிசிக்காக தயாரித்த அறிக்கையில், அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதத்திற்கு பிறகு கமலா ஹாரிஸை கம்யூனிச சிந்தனைகளுடன் ஒப்பிடும் பதிவுகள் அதிகமாகிவிட்டன என்று DDIA நிறுவனம் கூறுகிறது.
விவாதத்தின் போது கமலாவையும் அவருடைய அப்பாவையும் கம்யூனிஸ்ட்டுகள் என்று டிரம்ப் கூறினார். புலம்பெயர் மக்களுக்கான கொள்கைகள் மூலமாக அமெரிக்காவை வெனிசுவேலா போல மாற்றிவிடுவார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அந்த விவாதத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் Marxista என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில், கூகுளில் மார்க்சிஸ்ட் என்ற வார்த்தைக்கான தேடுதல் 17 மணி நேரத்தில் 1000% அதிகரித்தது.
விவாதத்திற்கு பிறகு ஸ்பானீஷில் அதிகமாக தேடப்பட்ட கேள்வி கமலா ஹாரிஸின் தந்தை யார் என்பது தான் என்று கூறுகிறது ஃபேக்ட்செக்யூடோ.
அந்த விவாதத்திற்கு பிறகு இரண்டு முக்கிய விஷயங்கள் அதிகமாக தேடப்பட்டன. ஒன்று, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கமலா ஹாரிஸ் என்று வெளியான போலி ஆவணம் குறித்தது. மெட்டாவின் சொந்த தரவுகளின் படி இந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வைரலானது. மற்றொன்று, “Kamarada [Comrade] Kamala” என்பது. விவாதத்தின் போது டிரம்ப் இந்த சொற்களை பயன்படுத்தி கமலா ஹாரிஸை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்று கூறினார்.
வைரலான உறுப்பினர் அட்டையை பிபிசி ஆய்வு செய்த போது அது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களை போலியாக தயாரிக்க அனுமதிக்கும் இணைய தளத்திற்கு இட்டுச்சென்றது.
அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் எண், ஸ்டாம்ப் மற்றும் இதர தகவல்கள், போலியான ஆவணங்கள் தயாரிக்கும் இணையத்தில் இடம் பெற்றிருந்த தகவலுடன் ஒன்றிப்போனது. ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக பகிரப்பட்ட இந்த போலி புகைப்படத்தை இதுவரை 5 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்.
“அமெரிக்காவும் கம்யூனிஸ்ட் நாடாகிவிடக் கூடும்”
ஜனநாயகக் கட்சி ஒரு சோஷலிச கட்சி கிடையாது. கம்யூனிச அரசுகளுக்கு ஆதரவையும் அது வழங்கியது இல்லை. ஆனால் பெர்னி சாண்டர்ஸ், அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ – கோர்டெஸ் போன்ற பெரிய தலைவர்கள் தங்களை ஜனநாயக சோஷலிசவாதிகள் என்று தங்களின் அரசியல் பார்வையை குறிப்பிட்டுள்ளனர்.
கலிஃபோர்னியா செனட்டராக பணியாற்றும் போது சாண்டர்ஸின் ‘மெடிகேர் ஃபார் ஆல் பில்’ என்ற மசோதாவை இணைந்து கமலா ஹாரிஸ் தாக்கல் செய்தார். இந்த மசோதா மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு மட்டுமே காப்பீடு வழங்கும் அங்கமாக மாற்றும் ஒன்றாகும். மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் மருத்துவ காப்பீட்டை வழங்கும் தனியார் நிறுவனங்கள் அதீத இழப்பை சந்தித்திருக்கும். அதன் பின்னர் அவர் எப்போதும் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்று கூறினார்.
தனியார் சொத்துகளை கையகப்படுத்தும் அல்லது முடக்கும் கம்யூனிச கொள்கைகளுக்கு அவர் ஒருபோதும் ஆதரவை வழங்கியது இல்லை. சூப்பர் மார்க்கெட்டுகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் கமலாவின் திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்களில் அவரை கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். எலோன் மாஸ்க் இதனை விமர்சிக்கும் போது, சூப்பர் மார்க்கெட்டுகளில் வெனிசுவேலாவைப் போன்று காலியான ‘ஷெல்ஃபுகள்’ இருக்கும் என்று கூறியிருந்தார்.
கமலா ஹாரிஸ் தன்னுடைய திட்டத்தில், உற்பத்தி விலையைக் காட்டிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை விசாரிக்க வர்த்தக ஆணையத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இது உணவுப் பற்றாக்குறையால் திண்டாடிவரும் கியூபா மற்றும் வெனிசுவேலாவில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளைக் காட்டிலும் கமலாவின் திட்டம் வேறுபட்டது.
ஆனால் தங்களின் நாடுகளில் இருந்து தப்பித்து வந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயமானது அவர்களின் நாடுகளில் செயல்பாட்டில் இருந்த இதுபோன்ற கொள்கையின் விளைவால் ஏற்பட்டது.
டெக்ஸாஸில் லத்தினோ ஸ்ட்ரைக்ஃபோர்ஸ் என்ற பெயரில், லத்தினோ ரிபப்ளிகன் முகநூல் பக்கத்தை இயக்கி வரும் ட்யூக் மசாடோ, ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் கம்யூனிசத்தின் பிடிக்குள் நாடு சென்று சென்றுவிடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“நாம் கவனமாக இல்லையென்றால் கியூபா, வெனிசுவேலாவைப் போன்று மாறிவிடுவோம். அவர்களின் இலக்கானது முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான்,” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவை ஜனநாயகக் கட்சியினர் கம்யூனிஸ்ட் தேசமாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்புவது சரியா என்ற கேள்வியை அவரிடம் கேட்ட போது,”இது ஒன்றும் பொறுப்பற்ற செயல் இல்லை. நான் என்னுடைய கடமையாக இதைப் பார்க்கின்றேன்,” என்று கூறினார் ட்யூக்.
கூடுதல் செய்திகளை வழங்கியவர் பிபிசி வெரிஃபையில் இருந்து கெய்லீன் வெலின்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு