• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

அம்பாறை வைத்தியசாலை பெண் வைத்தியரின் சடலம் காரில் மீட்பு: காதலன் மீது சந்தேகம்

Byadmin

Jun 18, 2026


அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம், தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபர் அவரது சடலத்தை காரில் கொண்டு வந்து தெல்தெனிய பகுதியில் கைவிட்டு, தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதாக நேற்று (17) பிற்பகல் சுமார் 02 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வாகனத்தை பரிசோதித்தபோது அதன் உள்ளே பெண்ணின் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் காரின் கதவை உடைத்து சடலத்தை வெளியே எடுத்தனர்.

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் Physiotherapist வைத்தியராக பணியாற்றிய, வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை அவர் நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

அந்த ஹோட்டலின் கண்காணிப்பு காட்சிகளை (CCTV) ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் இருந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணை, அவரது காதலன் என சந்தேகிக்கப்படும் நபர் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சடலம் தொடர்பான தகவலை வழங்கிய நபரும், தற்போது சந்தேகநபராக கருதப்படும் அதே நபராக இருக்கலாம் என்பதும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கண்டறிவதற்காக நுவரெலியா மற்றும் தெல்தெனிய பொலிஸார் இணைந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம், பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலைச் சம்பவமா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

By admin