பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
PoK-இல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’ (JAAC) இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறது.
போராட்டம்:
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடந்த மாதம் முதல் PoK-இல் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
PoK-இல் நடைபெறும் தேர்தல்களை, அப்பகுதியில் தாங்கள் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கும், அங்கு இழைக்கப்படும் “கடுமையான” மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்கும் இஸ்லாமாபாத் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என மத்திய அரசு தெரிவித்தது.
கொடிய தாக்குதல்:
ரவாலகோட்டில் இருந்து முசாஃபராபாத் வரை JAAC நடத்திய நீண்ட பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொடிய தாக்குதல் முறைகளை கையாண்டதாகவும், இந்த ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர்களில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரரான உஸ்மான் நசீரும் அடங்குவார் என்று அவர்கள் கூறினர்.
வேண்டுகோள்:
சட்டவிரோத கொலைகள் குறித்து உடனடி மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவும், கொடிய தாக்குதல் முறைகளை உடனடியாக நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் சர்வதேச உரிமை அமைப்புகளிடம் JAAC அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுயாதீன அறிக்கைகளை மேற்கோள் காட்டி, மிர்பூர் பிரிவில் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களின் முதல் கட்டத்தில் வாக்காளர் வருகை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது 45 சதவீத வாக்குப்பதிவு என்று கூறப்படும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்றும், JAAC-இன் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பிற்கு ஆதரவாக முக்கிய நகரங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.