0
ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகள் மூலம் கடந்து இங்கிலாந்துக்குச் செல்ல முயன்றபோது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக அகதிகள் வருகை பதிவான தினத்தில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு படகு கவிழ்ந்ததில் 30 அல்லது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
முதல் விபத்து நடந்து சுமார் ஏழு மணி நேரத்துக்குப் பிறகு, டன்கிர்க் (Dunkirk) கடற்கரைப் பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு படகில் மூன்று பேர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமையன்று மட்டும் 09 படகுகள் மூலம் 752 பேர் இங்கிலாந்தை வந்தடைந்தனர். இது இந்த ஆண்டின் ஒரே நாளுக்கான அதிகப்படியான வருகையாகும். இதற்கு முன்பு ஜூன் மாதம் ஒரே நாளில் 710 பேர் வந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 14,128 பேர் இங்கிலாந்துக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 42% குறைவு என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலக் கால்வாயில் நிகழும் ஒவ்வொரு மரணமும் ஒரு பேரழிவு என்றும், குற்ற கும்பல்கள் லாபத்துக்காக அப்பாவி மக்களை ஆபத்தில் தள்ளுவதையே இது காட்டுகிறது என்றும் இங்கிலாந்து அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் கவுன்சில் (Refugee Council) இந்த மரணங்கள் இதயத்தை உடைப்பதாகக் கூறியுள்ளதுடன், உக்ரைன் மற்றும் சிரியா நாடுகளுக்கு வழங்கியது போல அகதிகள் பாதுகாப்பாக வருவதற்கு முறையான பாதைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
2018 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 162 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.