7
இங்கிலாந்தில் மிகவும் அபாயகரமான மெலனோமா (Melanoma) வகை தோல் புற்றுநோய் பாதிப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
இங்கிலாந்தில் ஒரு வருடத்தில் கண்டறியப்படும் மெலனோமா தோல் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை முதல் முறையாக 20,000 ஐ கடந்துள்ளது.
கேன்சர் ரிசர்ச் யூகே (Cancer Research UK) அமைப்பின் 2022ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மொத்தம் 20,980 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சூரிய ஒளி அல்லது சன்பெட்கள் (sunbeds) மூலம் வெளிப்படும் புற ஊதா கதிர்களின் தாக்கமே இதற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
தோல் புற்றுநோய் பாதிப்புகளில் 10 இல் 9 பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இளம் வயதுப் பெண்களிடையே சூரிய குளியல் மற்றும் சன்பெட்களின் பயன்பாடு காரணமாகவும், முதிர்ந்த வயதுடைய ஆண்களிடையே நீண்டகால சூரிய ஒளியின் தாக்கம் காரணமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக இங்கிலாந்தில் வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறைந்தது 30 SPF மற்றும் 4 அல்லது 5 நட்சத்திரக் குறியீடு கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அகலமான விளிம்புகளைக் கொண்ட தொப்பி, சூரியக் கண்ணாடி மற்றும் உடலை மூடும் ஆடைகளை அணியவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
முன்னெச்சரிக்கைகளாக தோலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. மச்சத்தில் மாற்றம் (புதிய மச்சம் அல்லது வடிவம் மாறுதல்), ஆறாத புண்கள் அல்லது தோலின் ஒரு பகுதி அசாதாரணமாகத் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இதற்கு முறையான சிகிச்சை பெற்று குணமடைய முடியும்.
18 வயதுக்குட்பட்டவர்கள் சன்பெட்களைப் (sunbeds) பயன்படுத்துவதைத் தடுக்க அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற புதிய விதிகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் சிறார்கள் சட்டவிரோதமாக சன்பெட்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, அவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.