இங்கிலாந்து, ரோயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் என்ற போர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஜுன் மாதம், இந்தியா – கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கி சுமார் 20 நாள்கள் கடந்துள்ள போதும் அதிலுள்ள கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதை பளுதுபாரப்பதற்காக இங்கிலாந்திலிருந்து 20 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினரும் வருகைதந்துள்ளனர்.
எனினும், தரையிறங்கிய விமானம் இதுவரை புறப்படவில்லை. இது இந்தியர்களிடையே சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய இணையவாசிகள் பல memesகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, விமானத்தின் படம் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக இந்திய அடையாள அட்டை பலரையும் நகைப்பில் ஆழ்த்தியது.
அத்துடன், டெல்லி போன்ற நகரங்களில் இது நிறுத்தப்பட்டிருந்தால் உள்ளே உணவகம் திறந்திருப்பார்கள் என்றும் சிலர் கேலி செய்தனர்.
இந்நிலையில், கேரளச் சுற்றுலாத் துறையின் அதிகாரபூர்வ X தளத்திலும் பகடிப்படம் பகிரப்பட்டுள்ளது. “கேரளா அருமையாக இடம். இதை விட்டுச்செல்ல மனமில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
F-35B போர் விமானத்தை சிலர் அபிமான சுற்றுலாப் பயணியாகவே கருத ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விமானத்தின் பாகங்கள் பிரிக்கப்பட்டு, பிறிதொரு விமானத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக போர் விமானம், ஒரு ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
F-35B போர் விமானம் $110 மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது. மேலும், இது மேம்பாட்டு செலவின் அடிப்படையில் மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாகும்.
The post இங்கிலாந்து போர் விமானத்தை வைத்து விளம்பரம் செய்யும் கேரளா சுற்றுலாத்துறை! appeared first on Vanakkam London.