பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், இஃப்தேகர் அலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
நமது உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவின் சுவையை மட்டும் கூட்டுவதில்லை, நமது உடலுக்கும் பலனும் அளிக்கிறது.
உடலில் நீரின் அளவை உப்பு சமன் செய்கிறது, தசைகள் ஒழுங்காக செயல்பட உதவிபுரிகிறது.
எனினும், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பது போல, உப்பை அதிகளவில் உட்கொள்வதும் ஆபத்தை ஏற்படுத்தும்.
பல சந்தர்ப்பங்களில், உப்பை அதிகமாக உட்கொள்வது உயிரையே பறிக்கும் அளவுக்கு செல்லலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ஆச்சர்யப்படுத்தும் சில தகவல்களை வழங்கியுள்ளனர்.
ஆனால், அதற்கு முன்பாக தினமும் நமக்கு எவ்வளவு உப்பு தேவை, அதிகமான அளவில் அதை உட்கொண்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை புரிந்துகொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
அதிகமாக உப்பை உட்கொள்வது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, என்ன வகையான உப்பை உட்கொள்கிறோம் என்பதைவிட, எவ்வளவு உப்பு உட்கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதே மிகவும் முக்கியம்.
வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில் மட்டுமல்லாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட பல உணவுகளில் அதிகளவில் உப்பு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வதும் முக்கியம்.
இத்தகைய உணவுகளை அதிகமாக எடுக்கும்போது, தினசரி உணவில் நீங்கள் குறைவாக உப்பை எடுத்துக்கொண்டாலும், அது உடல்நலனில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒருவர் ஒருநாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது, இது ஒரு தேக்கரண்டிக்கு சமமான அளவாகும்.
இந்தியாவில் உள்ள மக்கள் பரிந்துரைக்கப்பட்டதைவிட, அதிகளவில் உப்பை உட்கொள்வதாக, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உப்பு குறித்து தெரியவருவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இந்தியாவில் அதிகளவில் உப்பை எடுத்துக்கொள்வது ஒரு ‘மறைமுகமாக பெருவாரியாக பரவும் தொற்றுநோயாக’ அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.
உப்பை அதிகமாக உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் வேகமாக அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் ஒருநாளைக்கு சராசரியாக 9.2 கிராம் உப்பையும் கிராமப்புற பகுதிகளில் வாழ்பவர்கள் 5.6 கிராம் உப்பையும் உட்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தரவுகள், உலக சுகாதார மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவு உப்பை இந்தியர்கள் உட்கொள்வதைக் காட்டுகிறது.
குறைவான உப்பை உட்கொள்வதன் பயன்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
அதிகமான உப்பை உட்கொள்வதால் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கும் நிபுணர்கள், உப்பை குறைவாக உட்கொள்ளும்போது இந்த ஆபத்துகள் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர்.
“அதிகமாக உப்பை உட்கொள்வது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் தொடர்புடையது,” என டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல், இரைப்பை குடல் மற்றும் கணைய-பித்தநீர் அறிவியல் துறையின் துணை தலைவர் மருத்துவர் பியூஷ் ரஞ்சன் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “உயர் ரத்த அழுத்தம் நம் உடலின் பல பாகங்களைப் பாதிக்கிறது. அது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.” என தெரிவிக்கிறது.
“உடலில் பல வகையான நோய்கள் ஏற்படும்போது, சோடியம் தக்கவைக்கப்படுகிறது, அதாவது உடலில் உப்பு அதிகமாக சேரத் தொடங்குகிறது. உடலில் உப்பு மற்றும் நீரின் அளவை சமநிலையில் வைத்திருப்பது சிறுநீரகங்களின் வேலையாகும்.”
அவர் கூறுகையில், “ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பல மருந்துகள் வழங்கப்படுகின்றன, அவை டையூரிட்டிக் என அழைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள், உடலில் உள்ள உப்பை சிறுநீரகங்கள் வாயிலாக வெளியேற்றுகின்றன, அதன்மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
“இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் அழற்சி (liver cirrhosis) போன்ற பிரச்னைகளிலும், சிகிச்சை முறையாக ஒருவர் உட்கொள்ளும் உப்பின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”
நோய் ஏற்படும்போது மட்டுமல்லாமல், பொதுவாகவே உப்பை குறைவாக உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மற்றும் இதய மற்றும் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு பயனளிக்கிறது.
நாம் எதை தவிர்க்க வேண்டும்?
எந்த வயதிலும் அதிகளவு உப்பை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, முடிந்தவரை உப்பின் அளவை குறைக்க வேண்டும். அதிகளவு உப்பை கொண்டுள்ள உணவுகளை தவிர்ப்பதும் முக்கியம்.
மருத்துவர் பியூஷ் ரஞ்சன் கூற்றின்படி பல உணவுகளில் மறைமுகமாக அதிகளவில் உப்பு இருக்கிறது.
- ஊறுகாய்
- அப்பளம்
- பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் (சிப்ஸ், சாஸ் உள்ளிட்டவை)
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் (சாசேஜ், நூடுல்ஸ், கெட்சப், பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை)
மேற்கண்ட உணவுகளில் இயல்பான அளவை விட அதிகளவில் உப்பு இருக்கிறது. எனவே அவற்றை வாங்கும்போது அதில் சோடியம் குறித்து லேபிளில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும், அத்தகைய உணவுகளை தவிர்க்கவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு