- எழுதியவர், இஷாத்ரிதா லஹரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே காணப்படும் நட்புறவை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கதேசத்தின் மறுசீரமைப்புக்கு யூனுஸ் ‘அதிக முயற்சிகளை’ மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். அதன் பின்னர் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்த அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார். நியூயார்க்கில் யூனுஸ் மற்றும் பைடன் இடையேயான நட்பு மோதி அரசுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது மாறிவிட்ட சூழ்நிலையில் வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவை ஏற்படுத்த மோதி அரசு முயற்சிக்கிறது.
சமீப ஆண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளில் வங்கதேசமும் ஒன்றாகும். அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றங்கள் காரணமாக அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவு சிறிதே ஆட்டம் கண்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கையின் புதிய அதிபராக இடதுசாரித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். 2023 இல் நேபாளத்திலும், 2021இல் மியான்மரிலும், 2023 இல் மாலத்தீவுகளிலும் 2021இல் ஆப்கானிஸ்தானிலும் அதிகார மாற்றம் நடந்துள்ளது.
மறுபுறம் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவிலும் பதற்றம் காணப்படுகிறது.
நரேந்திர மோதி 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அரசு ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood first) கொள்கையைத் தொடங்கியது. அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் இந்தக் கொள்கையின் செயல்திறனை சோதித்துள்ளன.
அண்டை நாடுகளுடனான உறவில் பதற்றம்
சமீப காலமாக இந்தியா பல அண்டை நாடுகளுடன் பிரச்னைகளை கொண்டுள்ளது. மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்சு, ‘இந்தியா அவுட்’ என்ற முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றார்.
அதன் பிறகு முய்சு பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தை உடைத்தார். இந்த பாரம்பரியத்தின் படி, மாலத்தீவில் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு அதிபரும் முதலில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
ஆனால் முய்சு தனது முதல் சுற்றுப்பயணத்திற்கு துருக்கியைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவுக்குச் சென்ற பிறகு முய்சு மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியாவை கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்று இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்றது. ஆனால் ஜூலையில் முய்சுவின் அணுகுமுறையில் சிறிது மாற்றம் காணப்பட்டது.
இந்தியாவை தனது நெருங்கிய நட்பு நாடு என்று வர்ணித்த அவர் பொருளாதார உதவியையும் நாடினார்.
இதேபோல், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளும் மோசமடைந்தன. நேபாளத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்று அப்போது நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி கூறியிருந்தார்.
2024 ஆம் ஆண்டில் ஒலி மீண்டும் நேபாளத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் ஐநா பேரவை கூட்டத்தின் போது ஒலியும் மோதியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதாகவும், இந்த உறவுகளுக்கு மேலும் வேகத்தை அளிக்கும் திசையில் தாங்கள் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
தாலிபனை ஆப்கானிஸ்தானின் சட்டபூர்வ அரசாக இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தூதாண்மை பணிகளை தொடரும் 15 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
இப்போது இறுதியாக வங்கதேசம் பற்றிப் பேசுவோம்.
முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா சற்றே பின்வாங்கிய நிலையில் இருந்தது. ஷேக் ஹசீனாவின் அரசுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டிருந்தது.
ஆனால் வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபோது அங்குள்ள மக்கள் இந்தியாவை சந்தேகக்கண்ணுடன் பார்க்கத் தொடங்கினர்.
பிரதமர் மோதி மற்றும் யூனுஸ் இருவரும் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆயினும் அதன் திசை என்னவாக இருக்கும் என்பது தற்போது தெளிவாக இல்லை.
‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளுடனான உறவுக்கு அளித்த முன்னுரிமையை அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கவில்லை என பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
மூத்த பத்திரிகையாளரும், ‘தி இந்து’ நாளிதழின் தூதாண்மை விவகாரங்களுக்கான ஆசிரியருமான சுஹாசினி ஹைதர், “அண்டை நாடுகளுடனான உறவுகள் இந்தியாவுக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அரசு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்று பேசியது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. எனவே இந்த நாடுகள் தன்னைப்பற்றி ஆக்கபூர்வமாக உணரும் என்று இந்தியா எதிர்பார்க்கக் கூடாது” என்றார்.
“தனது வெளியுறவுக் கொள்கையை அண்டை நாடுகளின் அரசுகள் எப்போதும் ஏற்றுக் கொள்ளும் என்ற மாயையில் இந்தியா இருக்கக் கூடாது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அண்டை நாடுகள் மீது திணிக்க முடியாது. தொடர்ந்து மாறிவரும் சூழலில் இருந்து இந்தப் பாடத்தை அரசு கற்றுக்கொண்டு வருகிறது,” என்று சுஹாசினி ஹைதர் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரம், நாட்டின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி கூறுகிறார்.
“இந்தக் கொள்கை மிகவும் பொறுப்பு வாய்ந்தது மற்றும் நெகிழ்வுத்தனமை கொண்டது. நாம் (இந்தியா) எந்த சூழலையும் அனுசரித்துச் செல்ல முடியும். மாலத்தீவில் முய்சுவின் ‘இந்தியா அவுட்’ கொள்கையை இந்தியா எப்படி எதிர்கொண்டது என்பது இதற்கு சிறந்த உதாரணம். மெல்லமெல்ல எல்லாம் சரியாகிவிட்டது.” என்று அவர் குறிப்பிட்டார்.
“இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியா நிதி உதவி வழங்கியது. வங்கதேசத்தின் இடைக்கால அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இந்தியா கூறியுள்ளது,” என்றார் வீணா சிக்ரி.
“அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை இப்போது விரிவடைந்துள்ளது மற்றும் முதிர்ச்சியடைந்துள்ளது என்பதற்கான ஒரு பெரிய அறிகுறியாகும் இது. இந்தக் கொள்கை கடந்த சில ஆண்டுகளாக சோதிக்கப்பட்டது மற்றும் அந்த சோதனை வெற்றியும் பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டுக் கொள்கை மற்றும் ஜனநாயகம்
அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பல காரணங்களால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு மாற்றங்கள் மற்றும் அவற்றின் ஜனநாயகமயமாக்கல் ஆகியவை இதில் அடங்கும்.
“இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சவால்களை அதிகப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை” என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்வரண் சிங்.
”ஆனால் இந்த மாற்றங்களுக்குக் காரணம் இந்தியா அல்ல. அண்டை நாடுகளின் உள்நாட்டுக் கொள்கைகள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
”அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய இரண்டு பெரிய அண்டை நாடுகள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியா பாகிஸ்தானைத் தவிர வேறு பல சிறிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது,” என்று ஸ்வரண் சிங் குறிப்பிட்டார்.
இது ’ஸ்மால் ஸ்டேட் சிண்ட்ரோம்’ என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்தியா தங்களை அதிகாரம் செய்யப் பார்ப்பதாக அண்டை நாடுகள் கருதுகின்றன. இந்த குட்டி நாடுகளில் ஜனநாயகம் வலுப்பெறும் போது, இந்தியாவின் முன் உறுதியாக நிற்பது இந்த நாடுகளின் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறும்,” என்றார் அவர்.
உதாரணமாக பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் அங்கு தேர்தல் நடத்தப்படும்போது, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகள் போன்ற எல்லா சிறிய நாடுகளும் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் ‘சம தூரம்’ என்ற கொள்கையை பின்பற்றுகின்றன.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணுவதற்கு இந்த சிறிய நாடுகள் சமச்சீர் நிலையை பராமரிக்கின்றன. இதன் காரணமாக கடன் பிரச்னை, உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை ஆதாரங்களின் பற்றாக்குறை போன்ற கடினமான சூழ்நிலைகளுக்கு அவைகள் தள்ளப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சமச்சீர் நிலையை பேணும் இந்த முயற்சி இந்த சிறிய நாடுகளுக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசவும் வாய்ப்பளிக்கிறது.
அண்டை நாடுகளின் உள்நாட்டு மாற்றங்களை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வங்கதேசம் போன்ற சில விஷயங்களில் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின்மை தெளிவாகத் தெரிகிறது.
”மோதி அரசால், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிராந்திய புவிசார் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதை அண்டை நாடுகளில் ஏற்படும் சாதகமற்ற ஆட்சி மாற்றங்கள் காட்டுகின்றன,” என்று சுஹாசினி ஹைதர் கூறுகிறார்.
“அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது. ஆனால் அது தன் அண்டை நாடுகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.” என்கிறார் அவர்.
வங்கதேச நிகழ்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்திய ஹைகமிஷனுடன் கூடவே அந்த நாட்டில் நான்கு தூதரக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் இந்தியாவால் அங்குள்ள நிலைமையை சரியாக மதிப்பிட முடியவில்லை.
“வங்கதேசத்தில், இந்தியா ஒரு தரப்புடன் மட்டுமே தொடர்பில் இருந்தது. நாட்டிற்குள் இருந்த எதிர்ப்பை புறக்கணித்தது. இந்த தவறுக்கான விலையை இந்தியா இப்போது அளிக்கிறது,” என்று சுஹாசினி ஹைதர் குறிப்பிட்டார்.
மாறாக இலங்கையின் அரசியல் சூழ்நிலையை இந்தியா சிறப்பாகக் கையாண்டது. ஏனெனில் பிரதமர் மோதி, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே அநுர குமார திஸாநாயக்கவை இந்தியாவுக்கு அழைத்தார் என்று ஹைதர் கூறுகிறார்.
“இலங்கையில் அதானியின் திட்டம் போல பல அண்டை நாடுகளில் இந்தியர்களின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட திட்டங்களை ஆதரித்தால் அது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னோக்கிய வழி
அண்டை நாடுகளுடனான உறவில் இந்தியா மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு சாதகமாக இருப்பதாகவும், நமது வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் என்றும் வீணா சிக்ரி கூறுகிறார்.
“உலகம் முழுவதும் அரசுகள் மாறுகின்றன. ஆனால் இந்தியாவின் நற்பெயரைக் காப்பாற்றக் கூடிய அளவுக்கு நாம் செயல்புரிய வேண்டும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நமது வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும்.” என்கிறார் வீணா.
இந்தியாவின் உள்நாட்டு கொள்கைகளும் அண்டை நாடுகளுடனான உறவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தியா உணர வேண்டும் என்கிறார் சுஹாசினி ஹைதர்.
“இந்தியா அண்டை நாடுகளில் ஒரு தலைவராக பார்க்கப்படுகிறது. கருத்துகள் மற்றும் லட்சியங்களைக் கொண்ட, ஒரு வழிகாட்டி நாடு. எனவே, குடியுரிமைச் சட்டத் திருத்தம் (சிஏஏ) போன்ற இந்தியாவின் கொள்கைகள் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
“சிஏஏ அறிவிக்கப்பட்டபோது வங்கதேசத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஷேக் ஹசீனாவின் அரசு சிஏஏவை ஏற்றுக்கொண்டாலும் அங்குள்ள மக்கள் அதை எதிர்த்ததால் அது இந்தியாவின் பிம்பத்தை பாதித்தது.அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தால் மட்டும் போதாது. இந்த நாட்டு மக்களின் இதயங்களையும் நாம் வெல்ல வேண்டும்.” என்று சுஹாசினி கூறுகிறார்.
இதற்கு அடிப்படை மந்திரம் பொறுமை என்று பேராசிரியர் ஸ்வரண் சிங் சுட்டிகாட்டினார்.
“நேபாளத்தில் ஒலி மற்றும் வங்கதேசத்தில் யூனுஸ் விவகாரத்தில் இந்தியா மிகவும் பொறுமையைக் காட்டியது. கொந்தளிப்பான சூழ்நிலையிலும் இந்தியா நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளுடனான மோசமான உறவுகள் தனக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலையில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும்,” என்று அவர் விளக்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு