• Sun. Jul 6th, 2025

24×7 Live News

Apdin News

“இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம் | mk stalin express his angry over hindi imposition and explained on maharashtra issue

Byadmin

Jul 5, 2025


சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகப் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன, இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள் என்று ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி – சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழகத்தைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழக மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது. இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும்’ என்ற வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவத்தை நீடிக்கவிட மாட்டோம். தமிழுக்கும், தமிழகத்துக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ராவில் நடந்தது என்ன? – முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான, பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவும்(எம்என்எஸ்) கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகாராஷ்டிர அரசு எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மாநிலம் முழுவதும் பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.

மகாராஷ்டிர மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் சிவசேனா, எம்என்எஸ் இணைந்து நடத்தின. இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர். அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகத்தில் கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.



ddtoany_content_bottom">

By admin