இலங்கையில் ஜனாதிபதிதேர்தல் இன்று நடைபெறுகிறது. 38 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?
தேர்தலில் நிற்காமல் ரணில் ஜனாதிபதியானது எப்படி?
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்திக்கும் முதல் தேர்தல் இது.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ, சுமார் 42 சதவீத வாக்குகளையே பெற்றார். கோட்டாபய பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தனர்.
ஆனால், 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக 2022-ஆம் ஆண்டில் பெட்ரோல் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். நாடாளுமன்றத்தின் மூலம் ஜூலை 21ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி
இலங்கையின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 40-இன் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும்வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆகவே, புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா. அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் நிற்கின்றனர்.
2015-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேன, அதற்கடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஜனாதிபதியான ரணில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் 2015க்குப் பிறகு, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கிறார்.
தமிழர்களின் வாக்கு யாருக்கு?
இந்தத் தேர்தலில் பொருளாதார நெருக்கடியே மிக முக்கியமான பிரச்னையாக இருக்கக்கூடும். இலங்கையில் தற்போது பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசை இல்லை என்றாலும் விலையேற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் உயர்த்தப்பட்ட அதன் விலை தற்போது சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பிற பொருட்களின் விலை அப்படியே நீடிக்கிறது.
சிறுபான்மையினரைப் பொருத்தவரை வேறு சில அம்சங்களும் அவர்களது வாக்குகளைத் தீர்மானிக்கலாம். குறிப்பாக, வடக்கில் வசிக்கும் தமிழர்களைப் பொருத்தவரை, போர் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ராணுவத்தாலும் தொல்பொருள் துறையாலும் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலையக மக்கள் மத்தியில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற தன்னால் மட்டுமே, சர்வதேச நிதியத்தின் விதிமுறைகளின் கீழ் நாட்டை மீட்டெடுக்க முடியுமெனக் கூறி ஆதரவைத் திரட்டினார் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸவும் அனுர குமார திஸநாயக்கேவும் சில மாற்றங்களுடன் இதைச் செய்வோம் என்கிறார்கள்.
பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பலவீனமடைந்து காணப்படுகின்றன. ராஜபக்ஷக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ களத்தில் இருந்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அதே கட்சியில் உள்ள சில தலைவர்கள், வேறு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பேசுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒரு சுவாரஸ்யமான, கவனிக்கத்தக்க தேர்தலாக்கியிருக்கிறது.
வாக்குப் பதிவு எப்படி நடைபெறும்?
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் 1,71,40,354 பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் சிங்கள மக்கள். மீதமுள்ள 25 சதவீதத்தில் தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோர் அடக்கம். இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 63,000 காவல்துரையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் நிஹகால் தல்துவ தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் நடந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்திருக்கிறார்.
எந்த வாக்குச் சாவடியிலாவது வன்முறை சம்பவங்கள் நடந்தால், அங்கு வாக்குப்பதிவு ரத்துசெய்யப்படும் என்றும் மீண்டும் அங்கே வாக்கெடுப்பு நடந்த பிறகே, நாடு முழுவதற்குமான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிக்க முடியுமென செய்தியாளர் சந்திப்பில் ரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.