இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்திருக்கும் நிலையில், அந்நாட்டில் சிறுபான்மையினரான தமிழர்களும் இஸ்லாமியர்களும் யாருக்கு வாக்களித்தார்கள்? அதற்கான காரணம் என்ன?
இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தையும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
சில தமிழ் அமைப்புகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர், ஒட்டுமொத்தமாக, சுமார் 2.3 லட்சம் (2,26,343) வாக்குகளையே பெற்றார்.
தமிழ் வேட்பாளர்களின் நிலை
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரேலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மொனராகல, கோகாலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பொது வேட்பாளரால் முதல் ஐந்து இடங்களில் கூட வர இயலவில்லை. இந்த இடங்களில் அநுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜெயவீர ஆகியோரே இருந்தனர். சில இடங்களில் ஐந்தாவது இடத்தை கே.கே.பியதஸி என்பவர் பிடித்தார்.
யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, திகாமடுல்ல ஆகிய தேர்தல் மாவட்டங்களின் பல இடங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்தார் அரியநேத்திரன். யாழ்ப்பாணத்தில் ஊர் காவற்துறை, நல்லூர், பருத்தித் துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை போன்ற சில பகுதிகளில் அரியநேத்திரனுக்கு முதலிடம் கிடைத்தது.
அதே நேரம் கிழக்கின் அம்பாறை, கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய இஸ்லாமியர் கணிசமாக உள்ள இடங்களில் அவருக்கு நான்காவது இடமே கிடைத்தது. மட்டக்களப்பிலும் சேருவில, திருகோணமலை பகுதிகளிலும் தமிழ் பொது வேட்பாளர் நான்காவது இடத்தையே பிடித்தார்.
‘இது வெற்றிதான்’
2024-ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது வடக்கில் இருந்த சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து, ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தன.
இதற்காக தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழ் மக்கள் பொது சபை என்ற அமைப்பும் இணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கின. இந்தக் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் நிறுத்தப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகரும் பா. அரியநேத்திரனின் ஆதரவாகச் செயல்பட்டவருமான நிலாந்தன், தமிழர் பகுதிகளைப் பொருத்தவரை, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் சிதறியிருக்கின்றன, என்கிறார்.
“தமிழர்களின் வாக்குகளை மொத்தமாகப் பெறும் நோக்கிலும் ஒரு குறியீட்டு அடிப்படையிலும்தான் தமிழ் பொது கட்டமைப்பு ஈடுபட்டது. அந்த வகையில் இரண்டு லட்சத்து இருபத்து ஆறாயிரம் வாக்குகளைத் திரட்ட முடிந்தது, அந்த வகையில் இது ஒரு வெற்றிதான்,” என்கிறார்.
மேலும், “இந்த முறை, தமிழ் மக்கள் கட்சி மாறுபாடுகளைக் கடந்து வாக்களித்திருக்கிறார்கள். கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கிலும் சுமார் ஒரு லட்சம் அளவுக்கு வாக்குகள் கிடைத்திருப்பது ஒரு உணர்வு ரீதியான வெற்றிதான்,” என்கிறார்.
‘வாக்காளர்களிடையே குழப்பம்’
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்வுசெய்யப்பட்டார்.
பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பிபிசியிடம் பேசிய பா. அரியநேத்திரன், “வருகிற ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிக்காட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல,” என்று கூறியிருந்தார்.
தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளமாகவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
“தமிழ்ப் பொதுக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒரு குறியீடாகத்தான் நிறுத்தப்பட்டார். அப்படி பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டது, கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றிணைத்திருக்கிறது,” என்கிறார் நிலாந்தன்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு 2 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் கிடைத்திருந்தாலும், அதைவிட அதிக வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார் நிலாந்தன்.
“முதலாவதாக, வாக்குகள் மற்ற வேட்பாளர்களுக்கும் சிதறின. அடுத்ததாக பொது வேட்பாளர் பற்றிய செய்தி எல்லாத் தரப்பிற்கும் சென்று சேரவில்லை. தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தது, வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இவையெல்லாம் சேர்ந்துதான், அதிக வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்குக் கிடைக்காமல் செய்துவிட்டன,” என்கிறார் நிலாந்தன்.
சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் அந்தக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தனர்.
தமிழரசுக் கட்சியின் ஆதரவு பெற்றிருந்த சஜித் பிரேமதாஸவுக்கு யாழ் தேர்தல் மாவட்டத்தின் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி, கோப்பாய், மானிப்பாய், வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, கல்முனை, பொத்திருப்பு, சம்மாந்துறை, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சேருவில, திருகோணமலை ஆகிய இடங்களில் முதலிடம் கிடைத்தது.
தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற இஸ்லாமியக் கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன.
இதன் காரணமாகவே, வடக்கிலும் கிழக்கிலும் பா. அரியநேத்திரனும் சஜித் பிரேமதாஸவுமே அதிக வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தப் பின்னணியில் புதிய ஜனாதிபதியான அநுர குமார திஸாநாயக்க தமிழர்களின் கோரிக்கையை எப்படி அணுகுவார் என்ற கேள்வி இருக்கிறது.
“தமிழர்கள் கேட்பது அமைப்புரீதியான மாற்றம். இலங்கையில் சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு இனங்கள் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால்தான் தீர்வை நெருங்க முடியும். அநுர அதனை ஏற்கவில்லை. தேசிய மக்கள் சக்தியைப் பொருத்தவரை, தமிழர் விவகாரத்தை மனிதாபிமானப் பிரச்னையாக அணுகுகிறதே தவிர, அரசியல் பிரச்னையாக அணுகவில்லை. அவர்கள் 13-வது திருத்தத்திற்கு மேல் செல்லவே விரும்பவில்லை,” என்கிறார் நிலாந்தன்.
மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிட்ட மயில்வாகனம் திலகராஜாவுக்கு 2,138 வாக்குகளே கிடைத்தன. தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையகத் தமிழர்களை கருத்தில் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திலகராஜா தெரிவித்திருந்தார்.
‘சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக இல்லை’
மலையகத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மயில்வாகனம் திலகராஜா, சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“இன மற்றும் மத சிறுபான்மையினர் இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது என்ற எண்ணம் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதனால் தான் சிறுபான்மை வேட்பாளர் யாரேனும் போட்டியிட்டால் அவர்களை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. சிறுபான்மை வேட்பாளார் இந்த தேர்தல் வழியாக மக்களுக்கு கூற நிறைய இருக்கிறது என்பதை வெளிக்கொணரவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்,” என்று கூறுகிறார் மயில்வாகனம் திலகராஜா.
“நான் வெற்றி பெற போட்டியிடவில்லை. மக்களிடம் எங்களது கருத்தைக் கூறவே போட்டியிட்டேன்,” என்றும் அவர் கூறினார்.
“ஒருவரை எதிர்த்து நிற்கவேண்டும் என்றால் சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நிற்கின்றனர். மகிந்த முதன்முறையாக போட்டியிட்ட போது வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மையின மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால், இதுவே ஒருவருக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று வந்தால் இந்த ஒற்றுமையை அவர்கள் காட்டுவதில்லை,” என்று குற்றம்சாட்டினார் அவர்.
இஸ்லாமியர்களின் வாக்குகள் யாருக்கு?
பெரும்பான்மை சமூகங்களின் அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றியுள்ளனர் என்ற எண்ணம் இந்த தேர்தலில் சிறுபான்மையினரிடம் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று கூறுகிறார் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் எம்.எம். ஃபாசில்.
மலையக மக்கள் மற்றும் இன, மத சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்து பேசும் போது அவர், “அநுரவுக்கு 30,000 வாக்குகளுக்கு மேல் வடக்கு பகுதியில் கிடைத்திருப்பது இதையே சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தருணத்தில் ஒரு பொதுவேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதை மக்கள் ஏற்புடையதாக பார்க்கவில்லை,” என்று கூறுகிறார் அவர்.
“ஆனால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரும் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக இல்லை. புலம் பெயர்ந்த தமிழகர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததையும் மக்கள் உணர்ந்திருந்தனர். அதனால் வாக்குகள் பிளவடைந்தன. மேலும் அது பொது வேட்பாளருக்கு சாதகமாக அமையவில்லை,” என்றும் கூறினார் ஃபாசில்.
உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பிளவு காணப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். “கஜேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் சுபந்திரன் போன்றவர்கள் இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுவும் கூட பொது வேட்பாளருக்கான வாக்குகள் கிடைப்பதை குறைத்தது,” என்று ஃபாசில் விவரித்தார்.
“இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இருந்தனர். வேறு சில தலைவர்கள் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் ரணிலுக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் ஆதரவைப் புறம் தள்ளிவிட்டு இஸ்லாமிய வாக்காளர்கள் சிலர் அநுரவுக்கு வாக்களித்துள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு