• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு – புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே அறிவிப்பு

Byadmin

Sep 25, 2024


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை நேற்று தான் அவர் பிரதமராக அறிவித்திருந்தார். நேற்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்பட்டதால் புதிய சட்டங்க்ளை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இத்தகைய சூழலில் புதிய ஜனாதிபதி அடுத்து என்ன செய்ய போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நவம்பர் 14-ஆம் தேதி நடத்தப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழக்கம். ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக் குறைந்தது 113 உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வேண்டும். அப்படியென்றால்தான், ஆட்சியை சுமூகமாக நடத்திச் செல்ல முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

By admin