• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை | Confiscation Proceedings at Coimbatore Collectorate for Non Payment of Compensation

Byadmin

Jul 31, 2025


கோவை: நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ராமசாமி. அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் கடந்த 1989-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை ரூ.1.83 கோடி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது.

நில உரிமையாளர் ஜி.ராமசாமி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் சார்பில் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தனலட்சுமி இழப்பீட்டு தொகைக்கான மதிப்பீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று அலுவலகங்களில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன் பேரில் நீதிமன்ற அமீனா தலைமையிலான குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்களிடம் அமீனா தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், இழப்பீட்டு தொகையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் வழங்கவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு நீதிமன்ற ஊழியர்கள் கலைந்து சென்றனர். நீதிமன்ற ஊழியர்களின் ஜப்தி நடவடிக்கையால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



By admin