நீண்ட கால நண்பனும், அண்டை நாடுமான லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிராக இரான் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது அந்த நாட்டில் உள்ள பழமைவாதிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பேசிய போது காஸா மீதான இஸ்ரேல் போரை விமர்சனம் செய்தார். லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்று அவர் எச்சரிக்கையும் செய்துள்ளார்.
ஆனால் ஜூலை மாதம் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பெசெஷ்கியன், தனக்கு முன்பு ஆட்சி செய்த அதிபர்களைக் காட்டிலும் மிகவும் மென்மையான போக்கை கையாளத் துவங்கினார். இஸ்லாமியக் குடியரசின் எதிராளிகளை அழிப்பது என்பது போன்ற பேச்சுகளை அவர் தவிர்த்து வந்தார்.
“நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எந்த நாட்டுடனும் சர்ச்சையில் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கு இல்லை,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
2015-ஆம் ஆண்டு தடைபட்டுப் போன அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அவருடைய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் இரான் மீதும் அதன் முக்கிய கூட்டாளிகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலா மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பழிவாங்குவது தொடர்பாக மூத்த இரானிய தலைவர்களும், இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் ( Islamic Revolution Guard Corps (IRGC)) தளபதிகளும் வெளிப்படுத்தும் கருத்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகளுக்கும் இரானுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இந்த இரண்டு குழுக்களுக்கும் ஆயுதம் வழங்கியதோடு மட்டுமின்றி நிதியும் பயிற்சியும் அளித்தது இரான் மட்டுமே. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கும் பெரிய அரணாக ஹெஸ்பொலா அமைப்பை டெஹ்ரானில் உள்ள தலைவர்கள் அதிகமாக நம்பியுள்ளனர்.
1980களில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர படைக்குழுவினர் ஹெஸ்பொலா அமைப்பை உருவாக்கினர். ஹெஸ்பொலா லெபனானின் பலமான ஆயுதமேந்திய குழுவாக மாறியதற்கும், அரசியலில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்ததற்கும் இரானின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹெஸ்பொலா பயன்படுத்தும் அதிநவீன ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் விநியோகிப்பது இரான் தான். ஹெஸ்பொலாவுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரான் வழங்கியதாக அமெரிக்கா முன்பே குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வாரம் பெய்ரூட்டில் இரான் தூதரக அலுவலகத்தில் நடந்த பேஜர் குண்டுவெடிப்பில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானி பலத்த காயம் அடைந்தார். ஹெஸ்பொலா உறுப்பினர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள், பேஜர்கள் அடுத்தடுத்து நடந்த இரண்டு தொடர் நிகழ்வுகளில் வெடித்து சிதறின. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம் சாட்டியது இரான். ஆனால் பதில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் உடனடியாக வெளியிடவில்லை.
ஆனால், ஏப்ரல் மாதத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 8 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியது இரான். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியது.
டெஹ்ரானில் கடந்த ஜூலையில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டத்திற்கு எதிர்வினையாற்றிய இரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் என்று சூளுரைத்தது. ஆனால் இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் வெளியிடவில்லை.
அமைதி காக்கும் தலைவர்கள் – காரணம் என்ன?
இரானின் இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் முன்னாள் தளபதி பிபிசியிடம் பேசும் போது, “எந்த விதமான செயல்பாடும் தொடர்ச்சியாக வெறும் எச்சரிக்கை மட்டும் செய்வது, உள் நாட்டு ஆதரவாளர்கள் மத்தியிலும், வெளிநாட்டினர் மத்தியிலும் ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்,” என்று கூறினார்.
திங்கள் கிழமை அன்று, அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய பெசெஷ்கியன் இஸ்ரேல் இரானை போருக்குள் இழுத்து வர சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
“இஸ்ரேல் உடனான பதற்றத்தைக் குறைக்க இரான் தயாராக உள்ளது. மேலும் இஸ்ரேல் ஆயுதங்களை கைவிடும் பட்சத்தில் இரானும் அதனை பின்பற்ற தயாராக உள்ளது,” என்று கூறினார்.
அதிபரின் இத்தகைய போக்கு இரானின் பழமைவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பழமைவாதிகள் பலரும் அதிபரின் இந்த கருத்தை விமர்சனம் செய்துள்ளனர். அதிபர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஊடக நேர்காணல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பெசெஷ்கியன் செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. அவர் இதற்கு முன்பு தெரிவித்த கருத்துகளின் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வற்புறுத்தப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
ராணுவ வீரர்கள் மத்தியில் காமனெயி செப்டம்பர் 25-ஆம் தேதி நடத்திய உரையின் போது இஸ்ரேலை தாக்குவது தொடர்பாக எந்த விதமான கருத்தையும் அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் வழக்கத்திற்கு மாறான செயலாகவே கருதப்படுகிறது.
இரானுக்கு புதிய சிக்கல்
செப்டம்பர் 24-ஆம் தேதி அன்று பாரக் ரவித் என்ற இஸ்ரேலிய ஊடகவியலாளர் அமெரிக்க செய்தி தளமான அக்ஸியோஸில் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உதவுமாறு இரானுக்கு ஹெஸ்பொலா அழைப்பு விடுத்தது என்று இரண்டு இஸ்ரேலிய தலைவர்களும் மேற்கத்திய ராஜ்ஜிய அதிகாரிகளும் கூறியதாக தெரிவித்திருந்தனர். “இது சரியான தருணமல்ல,” என்று இரான் ஹெஸ்பொலாவிடம் கூறியதாகவும் இஸ்ரேலிய தலைவர்கள் கூறியதாக ரவித் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம், இரானின் இணைய தொலைக்காட்சி நிகழ்வை தொகுத்து வழங்கும் மைதான், இஸ்ரேல் இரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்ல தாக்குதல் நடத்தியதாகவும், முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றிருப்பதாகவும் இரானிய உளவுத்துறை கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
இரானுக்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதற்கு இரானியப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அது வெளிவருவதை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
IRGC-யுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்திக் குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இரான் இஸ்லாமியக் குடியரசும் கூட ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இருக்கிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் ராணுவ பதிலடியை தூண்டி, நாட்டை பெரிய பிரச்னைக்கு இட்டுச்செல்வதாக அமைந்துவிடும் என்று யோசிக்கிறது இரான்.
அமெரிக்காவின் பொருளாதார தடை மூலமாக பொருளாதார சிக்கலில் இருக்கும் இரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது அந்த நாட்டை மேலும் வலுவற்றதாக மாற்றும். இதனால் இரானிய எதிராளிகள் மீண்டும் ஒன்றாக எழும் சூழலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும், இஸ்ரேலுடனான ஹெஸ்பொலாவின் மோதலில் இரான் நேரடியாக தலையிடுவதைத் தவிர்த்தால், அது பிராந்தியத்தில் உள்ள இதர ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பக் கூடும். நெருக்கடி காலங்களில், இரான் இஸ்லாமிய குடியரசு அதன் சொந்த நாட்டிற்கும் மற்றும் நலன்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் என்பதே அந்த சமிக்ஞையாகும்.
இது இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் வலுவிழக்கச் செய்துவிடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு