0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Fox News தொலைக்காட்சிக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் அவர்களை கடுமையாக தாக்குவோம். அவர்களுக்கு மிகப்பெரிய அடி காத்திருக்கிறது” என தெரிவித்தார்.
ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இது எதிர்பாராத திடீர் தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் ஏவுகணைகளை ஏவியபோது அவற்றை தடுக்க அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததாகவும், அவர்கள் மிக வேகமாக செயல்பட்டு தாக்குதலை சமாளித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் தொடர்பாகவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.
அந்த நடவடிக்கைகள் ஈராக் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதே அதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.