9
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை 37.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், போருக்கான அவசர நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ள சூழலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மக்களிடையே பெரும் ஆதரவைப் பெறாத ஈரான் போரும், அதனால் அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையும் ஜனநாயகக் கட்சியினருக்கு அரசியல் ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
வாஷிங்டனில் நடைபெற்ற விசாரணைக் கூட்டத்தில் பேசிய ஹெக்செத், அறிவிக்கப்பட்டுள்ள 37.5 பில்லியன் டொலர் செலவில் போரின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் செப்டம்பர் 30 வரை எதிர்பார்க்கப்படும் செலவுகளும் அடங்கியுள்ளதாக விளக்கமளித்தார்.
எனினும், இந்தத் தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து பென்டகன் இதுவரை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை. முன்னதாக, போரின் முதல் 06 நாட்களிலேயே சுமார் 11.3 பில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஈரான் மோதல் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக கூடுதலாக 90 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்குமாறு ட்ரம்ப் கடந்த மாதம் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கை, தேர்தலை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஈரான் தொடர்பான மோதல்களில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 430 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜூலை 7 முதல் காயமடைந்த 100 வீரர்களில் 96 சதவீதம் பேர் மீண்டும் பணியில் இணைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.