உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸின் ரஸ்கவான் கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், நெல் மற்றும் தினை வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள டிஎல் பப்ளிக் ஸ்கூலின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 11 வயது சிறுவன் பலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பள்ளிக்கூடத்தின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளன. பெயர் பலகை கிழிந்துள்ளது. வெளியே பள்ளி மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
இந்த ஆங்கில மீடியம் பள்ளியில் ஒரு மாணவர் ‘பலி’ கொடுக்கபட்டதாகக் கூறப்படுவதை, பள்ளிக்கு வெளியே நிற்கும் ஊர் மக்கள் பலர் நம்பத் தயாராக இல்லை.
பள்ளி விடுதியில் தங்கியிருந்த 11 வயது கிருதார்த் குஷ்வாஹா செப்டம்பர் 22-23-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
அடுத்த நாள் செப்டம்பர் 23-ஆம் தேதி காலை பள்ளி சீருடையில் இருந்த கிருதார்த்தின் உடல், பள்ளி மேலாளர் தினேஷ் பகேலின் காரில் கண்டெடுக்கப்பட்டது. அவரது புத்தகப்பையும் காரில் கிடந்தது.
கிருதார்த்தின் கழுத்தில் அடர் சிவப்பு நிற அடையாளங்கள் இருந்தன. கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாகவும், கழுத்து எலும்பு உடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
கிருதார்த்தை கொலை செய்த குற்றச்சாட்டில் பேரில் பள்ளி மேலாளர் தினேஷ் பகேல், அவரது தந்தை யசோதன் பகேல், பள்ளி முதல்வர் லக்ஷ்மண் சிங் மற்றும் பள்ளி வளாகத்தில் வசிக்கும் இரண்டு ஆசிரியர்களை காவல் துறை செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று கைது செய்து
65 வயதான யசோதன் பகேல், சுற்றுப்புற கிராமங்களில் ‘பகத் ஜி’ என்ற பெயரில் அறியப்படுகிறார். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வரை ’மந்திர தந்திரம்’ மற்றும் ‘பேயோட்டுதல்’ போன்றவற்றை செய்து வந்தார்.
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் புகழுக்காகவும் மாணவர் பலி கொடுக்கப்பட்டதாக ஹாத்ரஸ் காவல் உயர் அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
காவல்துறை கூறுவதென்ன?
இதுவரை நடந்த விசாரணையில் இது பலி சம்பவம் போலவே தெரிகிறது என்று ஹாத்ரஸ் காவல்துறையுடன் தொடர்புடைய, பெயர் தெரிவிக்க விரும்பாத நபர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
யசோதன் பகேல் ஒரு மந்திரவாதியாக இருந்தவர் என்றும் பலி கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், காவல்துறை கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரிமாண்ட் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பிபிசியிடம் பேசிய ஹாத்ரஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஷோக் குமார் சிங், “விசாரணை இன்னும் முடிவடையவில்லை, மேலும் சில உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரக்கூடும்” என்றார்.
இது தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு ஹாத்ரஸ் காவல் கண்காணிப்பாளர் நிபுண் அகர்வால் பதிலளிக்கவில்லை.
ஹாத்ரஸ் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட, மாணவர் பலி கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.
“வழக்கின் விசாரணையின் போதும் சாட்சியங்களை சேகரிக்கும் போதும், மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்தன. கொலை சம்பவத்தை தீர விசாரித்த பின்னர் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று இந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை விசாரணை தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். மேலும் இந்த சம்பவத்தின் முழு உண்மையையும் காவல்துறை இன்னும் கண்டறியவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுண் அகர்வால் கூறிய கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை பலியாக கருதுவதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான யசோதன் பகேல் ஒரு மந்திரவாதிம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தந்தையின் கேள்விகள்
ரஸ்கவான் கிராமத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள துர்ஸன் கிராமத்தில், இறந்தபோன கிருதார்த்தின் வீட்டிற்கு வெளியே ஒரு கூட்டம் நிற்கிறது.
கிருதார்த்தின் தந்தை கிருஷ்ணா குஷ்வாஹா, “21-ஆம் நூற்றாண்டில் எப்படி யாரையாவது பலி கொடுக்க முடியும்? என் குழந்தையின் கொலைக்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது. முழு உண்மையும் வெளிவர வேண்டும்” என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.
சனிக்கிழமையன்று உத்தரபிரதேச குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தேவேந்திர ஷர்மா, தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் குழு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல அதிகாரிகளுடன் குடும்பத்தினரை சந்தித்தார்.
தேவேந்திர ஷர்மா பிபிசியிடம் பேசுகையில், “இது ஒரு ’பலி’ என்றால், ஒரு முன்னேறிய சமூகத்தில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை இந்த விஷயத்தை முழுமையாக விசாரிக்கும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறினார்.
“இந்த சம்பவத்தை உத்தரபிரதேச அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. குடும்பத்தினரை சந்திப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் என்னை அனுப்பியுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணா தன் மகனுக்கு நீதி கேட்டு தேவேந்திர ஷர்மாவின் காலில் விழுந்து அழுதார். “என் ஒரே மகனை இழந்துவிட்டேன், எனக்கு நீதி வேண்டும். வருங்காலத்தில் வேறு எந்த ஒரு தந்தையும் தன் மகனை இழக்காத வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்.
கிருதார்த்தின் தாய் கமலேஷ் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளார். தன் குழந்தையின் பள்ளி சீருடையை பார்த்து அவர் மயங்கி விழுந்தார்.
”என் மகனை மிகுந்த நம்பிக்கையுடன் ஹாஸ்டலுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் மகனைப் படிக்க அனுப்பியிருந்தோம், அவர்கள் அவனைக் கொன்றுவிட்டனர்,” என்று கமலேஷ் கூறினார்.
கிருஷ்ணா ஒரு பொறியாளர். நொய்டாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் கிராமத்திற்கு வரும் கிருஷ்ணா சம்பவத்தன்று கிராமத்தில் இருந்துள்ளார். ரஸ்கவான் கிராமத்தின் பள்ளி அவரது வீட்டிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
செப்டம்பர் 23 காலையை நினைவு கூர்ந்த கிருஷ்ணா, “அப்போது காலை சுமார் ஐந்து மணி. நான் நொய்டாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி மேலாளர் தினேஷ் பகேல் என்னை தொலைபேசியில் அழைத்து, கிருதார்த்துக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தார். ஏதோ குளறுபடி இருப்பதாக நான் உணர்ந்தேன். நான் தினேஷ் பகேலை திரும்பத் திரும்ப அழைத்தேன். குழந்தையுடன் ஆக்ரா செல்வதாக ஒரு முறை சொன்னார். அலிகர் செல்வதாக மற்றொருமுறை சொன்னார். இந்த நிலையில் சாதாபாத்தில் அவருடைய காரை கண்டுபிடித்தோம். அதில் என் மகனின் உடல் கிடந்தது. நாங்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தோம்,” என்றார்.
தனது மகன் பலி கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் இருந்தே தனக்கு தெரியவந்ததாக கிருஷ்ணா குறிப்பிட்டார்.
“நான் ஒரு தந்தை. என் ஒரே மகனை இழந்துவிட்டேன். என் மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறிவது என்னுடைய உரிமை. அவன் ஏன் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டான்?” என்று கிருஷ்ணா கேள்வி எழுப்புகிறார்.
சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வந்த ஹாஸ்டல்
டிஎல் பப்ளிக் ஸ்கூல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற்றிருந்தது, ஆனால் இங்கு எட்டாம் வகுப்பு வரை உள்ளது. தங்கும் விடுதியை நடத்த பள்ளியிடம் அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
கிருதார்த்தின் மரணத்திற்குப் பிறகு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஹாத்ரஸ் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கூடவே பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது.
பிபிசியிடம் பேசிய தொடக்கப்பள்ளி கல்வி அதிகாரி ஸ்வாதி பாரதி, “தங்கும் விடுதி சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது. பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என்றார்.
இந்தப்பள்ளியின் ஹாஸ்டலில் 25 மாணவர்கள் தங்கியிருந்தனர். 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வந்தனர்.
பள்ளி மூடப்பட்டதால் இந்த குழந்தைகளின் கல்வி நின்றுள்ளது. இந்தக் குழந்தைகளுக்காக நிர்வாகம் வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்வாதி பாரதி,“தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்
விடுதியில் கழுத்து நெரிக்கப்பட்டதாக முன்பும் எழுந்த குற்றச்சாட்டுகள்
துர்ஸன் கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹர்தோய் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக இந்த மாணவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு வீட்டில் பல ஆடுகள் மற்றும் எருமைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய குடும்பத்தின் 9 வயது மகனும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு தங்கள் மகனின் கழுத்தும் நெரிக்கப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆன போதிலும், குழந்தையின் கழுத்தில் இன்னும் அந்தத்தடயங்கள் உள்ளன.
“என் மகனுக்கு வலிப்பு வந்ததாக பள்ளி நிர்வாகம் மறுநாள் என்னிடம் கூறியது. நான் உடனடியாக பள்ளிக்குச் சென்றேன். அப்போது என் மகன் அதிர்ச்சியில் இருந்தான். அவன் தொண்டை வீங்கியிருந்தது. அடர் சிவப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தன. அவன் கண்களும் சிவந்திருந்தன,” என்று அந்த மாணவரின் தந்தை கூறினார்.
“அன்றிரவு பகத் ஜி (யசோதன்) என் கழுத்தை நெரிக்க முயன்றார். நான் கண்களைத் திறந்ததும் அவர் என் மேல் ஏறி அமர்ந்து என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தார்,” என்று அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அந்த மாணவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு குடும்பத்தினர் சிறுவனை விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்கள் குடும்பத்திடம் உள்ளன.
“மருத்துவர் என் மகனை பரிசோதித்தபோது ’கழுத்தை நெரித்துக்கொலை செய்ய’ முயற்சி நடந்திருப்பதாகக் கூறினார்,” என்று மாணவரின் தந்தை மேலும் தெரிவித்தார்.
ஆனால் குடும்பத்தினர் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கவில்லை.
அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு 10 வயது மாணவனும் கயிற்றால் தன் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் செப்டம்பர் 18-ஆம் தேதி பிற்பகல் நடந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“ஹாஸ்டலில் தன்னுடன் வசித்து வந்த அவனைவிட மூத்த பையன் ஒருவன் கயிற்றால் தன் கழுத்தை நெரிக்க முயன்றதாக என் மகன் எங்களிடம் சொன்னான். நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். ஆனால் மேலாளர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டார்,” என்று அந்த மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பிபிசி பார்த்தது, அதில் கழுத்தில் அடையாளங்கள் தெளிவாகத் தெரிந்தன.
உரிய நேரத்தில் தாங்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தால் கிருதார்த்தின் உயிரை ஒருவேளை காப்பாற்றியிருக்கலாம் என்று இந்த இரண்டு மாணவர்களின் குடும்பத்தினரும் கூறுகின்றனர்.
விடுதியில் குழந்தைகள் தங்கியிருக்கும் அதே ஹாலில் யசோதனும் இரவில் தூங்குவது வழக்கம் என்று சுமார் 10 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் கூறுகின்றனர்.
இந்த இரண்டு குழந்தைகளின் கழுத்து நெரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஹாத்ரஸ் போலீஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 6 மற்றும் 18-ஆம் தேதிக்கு இடையில் மற்றொரு மாணவரின் கழுத்து நெரிக்கப்பட்டதாக விடுதி மாணவர்களிடமிருந்து பிபிசிக்கு தெரியவந்தது. ஆனால் இந்த கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் யார்?
ரஸ்கவான் கிராமத்தின் மையத்தில் ஒரு பெரிய இரண்டு மாடி வீடு உள்ளது. இது சுற்றியுள்ள வீடுகளை விட பெரியதாக தெரிகிறது.
இந்த வீட்டைப் பார்த்தவுடனேயே இங்கு வசிக்கும் குடும்பம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற குடும்பங்களை விட பணக்கார குடும்பம் என்று ஊகிக்க முடிகிறது.
சுமார் 95 வயதான டோரிலால் பகேல் முற்றத்தில் விரிக்கப்பட்டுள்ள கட்டிலில் படுத்திருக்கிறார்.
“என் மகனும் பேரனும் சிறையில் இருக்கிறார்கள். எங்களுடைய பேச்சைக்கேட்க யாரும் இல்லை” என்கிறார் டோரிலால்.
65 வயதான யசோதன் அதிகப்படி நேரமும் பள்ளியில் தங்கியிருப்பார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தனது தந்தை மத நம்பிக்கை கொண்டவர், சடங்குகளை செய்பவர் என்று கூறும் யசோதனின் மகள் வினிதா பகேல், அவருக்கும் மந்திர தந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.
“பக்கவாதம் வந்த பிறகு பகத்ஜி இந்த வேலையை விட்டுவிட்டார். பள்ளிக்கூடம் கட்டப்பட்ட பிறகு அவர் பெரும்பாலும் அங்கேயே இருந்தார்,” என்று குடும்பத்தின் ஒரு பெண்மணி கூறினார்.
“என் மகன் வீட்டிற்கு வெளியில் இருந்துதான் படித்தான். அவன் சிறிய வயதில் ஃபிரோஸாபாத்தில் தங்கிப்படித்தான். பின்னர் மேல் படிப்புக்கு தயாராக கோட்டாவுக்குச் சென்றான், பிறகு ரூர்க்கியில் பொறியியல் படித்தான்,” என்று குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான தினேஷ் பகேலின் தாயார் சகுந்தலா தெரிவித்தார்.
ரூர்க்கியில் இருந்து பொறியியல் படித்துமுடித்த பிறகு தினேஷூக்கு மலேசியாவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஒரு மாதத்திற்குள்ளேயே அவர் திரும்பிவிட்டார் என்று குடும்பத்தினர் சொன்னார்கள்.
2019-ஆம் ஆண்டில், தினேஷ் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக நிலத்தில் பள்ளியை கட்டுவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்.
”நிலத்தை விற்று வங்கியில் கடன் வாங்கி அவன் பள்ளிக்கூடம் கட்டினான்’’ என்கிறார் சகுந்தலா.
பள்ளியை திறப்பதற்கு முன் தினேஷ் கிராமத்திலேயே குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். தினேஷ் தங்களுக்கு படிப்பதற்கு ஊக்கம் அளித்ததாக அருகில் வசிக்கும் பல மாணவர்கள் கூறுகின்றனர்.
மந்திர-தந்திரத்திற்காக குழந்தை பலியிடப்பட்டதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த சகுந்தலா, “இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் தொழிலை யாராவது அழிப்பார்களா? ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்,”என்றார்.
“என் தந்தை பள்ளியில் தங்கி குழந்தைகளை கவனித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய பள்ளியில் படிக்கும் குழந்தையை அவர் ஏன் கொலை செய்யவேண்டும்?” என்று தினேஷின் சகோதரி வினிதா பகேல் வினவினார்.
அக்கம்பக்கத்தில் உள்ள பல பெண்களும் இதை ஆமோதித்தனர். “பலி கொடுக்கப்பட்டிருந்தால் அதை காவல்துறை நிரூபிக்க வேண்டும் அல்லது அந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
டிஎல் பப்ளிக் ஸ்கூலின் இணையதளத்தில், இது சிபிஎஸ்இ முறையில் கல்வியை வழங்கும் ஹைடெக் பள்ளி என்று விவரிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கிராமங்களில் டிஎல் பப்ளிக் ஸ்கூல் போல பல பள்ளிகள் உள்ளன.
ஆங்கில மீடியம் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் மோகம் இந்த ஊரகப் பகுதியில் தெளிவாகத் தெரிகிறது.
குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிப்பது தங்களுடைய முன்னுரிமை என்று பல பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ரஸ்கவான் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியும், 10-ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. ஆயினும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் டிஎல் பப்ளிக் ஸ்கூலில்தான் படித்து வந்தனர்.
“என் மூன்று குழந்தைகளும் டிஎல் பப்ளிக் ஸ்கூலில் படித்து வந்தனர். இப்போது அவர்களின் படிப்பு நின்று விட்டது. என் குழந்தைகளின் கல்வி குறித்து எனக்கு கவலையாக உள்ளது,”என்று தினேஷின் குடும்பத்தைச் சேர்ந்த அமித் பகேல் கூறினார்.
குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு ஏன் அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு டிரைவர். குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும். அரசுப் பள்ளிகளில் சூழல் சரியாக இல்லை” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.