நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர்.
ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: ‘அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?’
மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான்.
ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,”நாங்கள் வெறுமனே பள்ளிக்கு செல்வோம். பாடத்திட்டத்திற்கு வெளியே எதுவும் இல்லை, ஆனால் இன்று நீங்கள் உங்கள் குழந்தையை நீச்சல் வகுப்புகளுக்கும், ஓவிய வகுப்புகளுக்கு அனுப்பவேண்டியுள்ளது. அவர்கள் வேறு எதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்,” என்றார் நம்ரதா.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குழந்தைகளின் பள்ளி செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்
எச்சரிக்கும் யு.என்.எஃப்.பி.ஏ.
இனப்பெருக்க உரிமைகளுக்கான ஐநாவின் முகமையான ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund) அறிக்கையின்படி, நம்ரதாவின் நிலை சர்வதேச அளவில் காணப்படும் இயல்பாக உள்ளது.
கருவுறுதல் விகிதம் குறைவது குறித்து இதுவரை இருந்ததிலேயே வலுவான நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் எடுத்துள்ளது. குழந்தை வளர்ப்பதால் ஏற்படும் கடுமையான செலவு, பொருத்தமான துணை இல்லாதது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பல நூறு மில்லியன் மக்களால் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என எச்சரித்துள்ளது.
14 நாடுகளில் இருக்கும் 14,000 பேரிடம் அவர்களுடைய கருவுறும் நோக்கம் குறித்து UNFPA ஆய்வு நடத்தியது. ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை அல்லது பெற்றுக்கொள்ளமாட்டோம் என தெரிவித்தனர்.
ஆய்வு நடத்தப்பட்ட தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனி, ஸ்வீடன், பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, இந்தியா, இந்தோனீசியா, மொரோக்கோ, தென்னாப்ரிக்கா, மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 14 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றக் கொள்ள இயலாது என்று கூறியுள்ளனர்
உண்மையான நெருக்கடி இது
குறைவான, நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த மற்றும் அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகளின் கலவை அவை. யுஎன்எஃப்பிஏ (UNFPA) இளம் வயது வந்தோரிடமும், தங்களது இனப்பெருக்க காலத்தை கடந்தவர்களிடமும் ஆய்வு நடத்தியது.
யுஎன்எஃப்பிஏ அமைப்பின் தலைவரான டாக்டர் நடாலியா கானெம், “கருவுறுதல் விகிதத்தில் உலகம் முன்பெப்போதும் இல்லாத சரிவை தொடங்கியிருக்கிறது,” என்று கூறினார்.
“ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புகின்றனர். கருவுறுதல் விகிதம் குறைய பெருமளவு காரணம் தாங்கள் விரும்பும் குடும்பத்தை உருவாக்க முடியவில்லை என பலரும் நினைப்பதுதான். அதுதான் உண்மையான நெருக்கடி,” என்கிறார் அவர்.
“இதை நெருக்கடி என அழைப்பது, அது உண்மையானது என சொல்வதாகும். அது ஒரு மாற்றம் என நான் நினைக்கிறேன்,” என்கிறார் அன்னா ராட்கெர்ச். ஐரோப்பாவில் கருவுறும் விருப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தியவரும், பின்லாந்து அரசுக்கு மக்கள்தொகை கொள்கை குறித்து ஆலோசனை வழங்குபவருமான மக்கள் தொகை ஆய்வாளர் அவர்.
“ஒட்டுமொத்தமாக, கருவுறுதல் நோக்கங்களை மிஞ்சுவதை விட அதைவிட குறைவாக எட்டுவதே அதிகமாக உள்ளது,” என்கிறார் அவர். இவர் இதை ஐரோப்பாவில் விரிவாக ஆய்வு செய்திருப்பதால், உலக அளவில் எத்தகைய பிரதிபலிப்பை கொண்டிருக்கிறது என்பதை காண்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
தாங்கள் விரும்பியதை விட குறைவாகவே குழந்தை பெற்றுக்கொண்டதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோரில் எவ்வளவு பேர்(31%) கூறியிருக்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 நாடுகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வின் முன்னோடியான இந்த ஆய்வின் நோக்கம் குறுகலானது. உதாரணமாக நாடுகளுக்குள் வயது பிரிவுகள் என வரும்போது, முடிவு எதுவும் எட்டமுடியாத அளவு குறைவான மாதிரிகளே கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சில முடிவுகள் தெளிவாக உள்ளன.
அனைத்து நாடுகளிலும், 39% பேர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிதி குறைபாடுகள் தடுப்பதாக தெரிவித்தனர்.
அதிகபட்ச பதில் கொரியாவிலும்(58%), குறைந்தபட்சம் ஸ்வீடனிலும்(19%) பதிவாகின.
மொத்தத்தில், 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுற இயலாமை– அல்லது கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை தாய்லாந்து(19%), அமெரிக்கா(16%), தென்னாப்பிரிக்கா (15%), நைஜீரியா(14%) மற்றும் இந்தியா(13%) உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர்.
“குறைந்த கருவுறுதல் விகித பிரச்சனைகள் குறித்து [ஐநா] உண்மையில் முழுமையாக முன்னெடுத்துள்ளது இதுதான் முதல்முறை,” என்கிறார் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மக்கள் தொகை ஆய்வாளர் ஸ்டூவர் கீடெல்-பாஸ்டென்.
அண்மைக் காலம்வரை , தங்களின் விருப்பத்தை விட அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்கள் மற்றும் கருத்தடைக்கான “பூர்த்தி செய்யப்படாதத் தேவை” குறித்தே முகமை அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.
இருந்தாலும், கருவுறுதல் குறைவதற்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து கவனமாக இருக்கும்படி யுஎன்எஃப்பிஏ வலியுத்துகிறது.
“தற்போது, அதிக மக்கள்தொகை அல்லது சுருங்கும் மக்கள் தொகை என பேரழிவு பற்றிய வெற்றுப் பேச்சுக்களைத்தான் பெரிய அளவில் பார்க்கிறோம். இது இதுபோன்ற அதிகபடியான எதிர்வினையையும் சில நேரம் சூழ்ச்சியான எதிர்வினையையும் உண்டாக்குகிறது,” என்கிறார் காணெம்.
“அதாவது பெண்களை அதிக குழந்தைகள் அல்லது குறைவான குழந்தைகள் பெற்றுக்கொள்ள செய்யும் வகையில்.”
40 வருடங்களுக்கு முன்பு சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் எல்லாம் தங்களது மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக கவலைப்பட்டதாக அவர் சுட்டிக்கட்டுகிறார். ஆனால் 2015ஆம் ஆண்டில் அவர்கள் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினர்.
“அந்த நாடுகள் பயத்தில் அவசரகதியில் ஏதேனும் கொள்கையை இயற்றாமல் தடுக்க நாம் முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும்,” என்கிறார் கீடெல்- பாஸ்டென்.
“குறைவான கருவுறுதல், வயதாகி வரும் மக்களின் தொகை, மக்கள்தொகை தேக்கம் போன்றவை தேசியவாத, குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் பாலின பாரம்பரிய கொள்கைகளை அமல்படுத்த ஒரு சாக்காக பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்,” என்கிறார் அவர்.
குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரத்தை விட பெரிய தடையாக இருப்பது போதிய நேரமின்மைதான் என்பதை யுஎன்எஃப்பிஏ (UNFPA) கண்டறிந்தது. மும்பையில் இருக்கும் நம்ரதாவுக்கு இது உண்மையாக் தோன்றுகிறது.
அவர் தனது அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு தினமும் குறைந்தது நான்கு மணி நேரத்தை செலவிடுகிறார். அவர் வீடு திரும்பும்போது முற்றிலும் சோர்வடைந்திருக்கிறார், ஆனால் தனது மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். அவரது குடும்பத்திற்கு அவ்வளவு தூக்கம் கிடைப்பதில்லை.
“ஒரு வேலை நாளுக்கு பிறகு, உங்கள் குழந்தையுடன் போதிய நேரம் செலவிடவில்லை என ஒரு தாயாக உங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இயல்பிலேயே வரும்.,” என்கிறார் அவர்.
“எனவே நாங்கள் ஒரே ஒரு குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தப் போகிறோம்.”