இந்தத் தரவுகள் கடல் மேற்பரப்பிலிருந்து 10 மீட்டர் ஆழத்தில் பதிவாகும் கடல் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டவை. மிதவைகள், கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்படும் அளவீடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, உலகளாவிய மதிப்பீடு உருவாக்கப்படுகிறது.
இந்த உச்ச அளவுக்கான பிழை வரம்பு தற்போது மிகவும் குறைவாக இருந்தாலும், உலகளாவிய மதிப்பீடு என்பதால் அதில் சில நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. இருப்பினும், இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ள காலகட்டம் குறிப்பாக கவனிக்கத்தக்கது என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அதன் வருடாந்திர உச்சத்தை எட்டும். இது தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்காலம் முடிவடையும் காலமாகும். ஆகஸ்ட் மாதத்தில் இத்தகைய உச்சநிலை ஏற்படுவது வழக்கமல்ல.
பூமியின் வடக்கு அரைக்கோளத்தைவிட தெற்கு அரைக்கோளத்தில் அதிக அளவு கடல் பரப்பு உள்ளது. எனவே, சராசரி கடல் வெப்பநிலையில் தெற்கு அரைக்கோளம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயற்கையான வானிலை நிகழ்வான எல் நினோ இன்னும் எதிர்பார்க்கப்படும் உச்சத்தை அடைய வெகுதொலைவில் இருக்கும் நிலையிலேயே கடல்கள் இவ்வளவு வெப்பமாக இருப்பதுதான் விஞ்ஞானிகளை குறிப்பாக கவலையடையச் செய்கிறது.
எல் நினோவால் வெப்பமடைந்த நீர், வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக மேலெழுகிறது. இவ்வளவு பெரிய பரப்பளவில் வெப்பமான நீர் இருப்பது, உலகளாவிய சராசரி வெப்பநிலையும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
எல் நினோ கிறிஸ்துமஸ் காலம் வரை தொடர்ந்து வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வலுவான எல் நினோ நிகழ்வாக அமையக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதனால் கடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
“நாம் ஏற்கெனவே வெப்பநிலை உச்சங்களை முறியடித்து வருவது, எல் நினோ எந்த அளவுக்கு வலுவடைந்து வருகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறியாகும்” என்று பிரிட்டனின் சவுத்தாம்ப்டனில் உள்ள தேசிய கடலியல் மையத்தின் மூத்த ஆராய்ச்சி நிபுணர் முனைவர் ஜெரமி கிரிஸ்ட் தெரிவித்தார்.
மேலும், “தற்போதைய நிலை தொடர்ந்தால், 2027-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கடல் வெப்பநிலை உச்ச அளவு மீண்டும் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்” என்றும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றத்தின் விளைவு
பூமி முழுவதும் பரவலாக நிலவும் இந்த வெப்பமயமாதல், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகின் கடல்களில் அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தால், குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால், உருவாகும் அதிகப்படியான வெப்பத்தில் 90%-க்கும் அதிகமானதை கடல்கள் உறிஞ்சுகின்றன.
“கோபர்நிகஸின் சமீபத்திய தரவுகள், கடல் வெப்பநிலை கவலையளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கை உறுதிப்படுத்துகின்றன” என்று ஸ்மித் கூறினார்.
கடல்கள் வெப்பமடைவது தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. புயல்களுக்கு கூடுதல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் அவை வழங்கக்கூடும்.
சில கடலோரப் பகுதிகளில் கடல் காற்று ஏற்படுத்தும் குளிர்விக்கும் தாக்கத்தைக் குறைப்பதன் மூலம், நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளையும் தீவிரப்படுத்தக்கூடும்.
வெப்பமான நீர் அதிக இடத்தை ஆக்கிரமிப்பதால், கடல் மட்டம் உயர்கிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
அதேவேளை, கடலில் நிலவும் கடுமையான வெப்பம் பவளப்பாறைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் வாழிடங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் அதிகரித்து வருவது, “கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள சமூகங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று பர்கெஸ் எச்சரித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு