சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு ஆகிய பணிகளில் முறைகேடு செய்ததாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு சுமார் 26 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை முடக்குவதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த 2018 கடைசி முதல் 2019 தொடக்கம் வரை பல்வேறு காலகட்டங்களில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் பல புகார் மனுக்களைக் கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு 290 கோடி ரூபாயும் சாலை சீரமைப்பு, நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு 246 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
முதல் தகவல் அறிக்கை – சொல்வது என்ன?
இந்தப் புகாரின் அடிப்படையில், கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 17) அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணி உட்பட 10 மாநகராட்சி அதிகாரிகளின் மீது குற்றம் சுமத்தப்பட்டன. இவர்கள் மீது 120(பி), 420, 409 ஐ.பி.சி, 13(2), 13(1)(ஏ), 109 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், ”டெண்டர் விதிமுறைகளை மீறி அமைச்சராக இருந்த வேலுமணி செயல்பட்டுள்ளார். அவருக்கு மிக நெருக்கமான கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளரான சந்திரசேகர், யாருக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் கோவை புறநகர் அ.தி.மு.க இளைஞர் அணியின் செயலராக அவர் இருந்தார். சென்னை மாநகராட்சி அதிகாரிகளை கையாளும் பொறுப்பை சந்திரசேகரிடம் அமைச்சர் வேலுமணி ஒப்படைத்திருந்தார்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒப்பந்த விதிகளை மீறி சிலருக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் இந்தப் பணிகள் தரமாக நடைபெறவில்லை எனவும், இதுதொடர்பான விசாரணையில் முறைகேடு கண்டறியப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிக்கான ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் விலையை சந்தை விலையைவிட 97 சதவீதம் அதிகமாக அந்த டெண்டரில் குறிப்பிட்டதாகவும் சாலை மற்றும் நடைபாதை சீரமைப்பு பணிகளுக்கு சந்தை விலையை விட 99.8 சதவீதம் அதிகமாக நிர்ணயித்ததாகவும் இதன்மூலம் அரசுக்கு 26 கோடியே 61 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கும் எல்.இ.டி தெருவிளக்கு முறைகேடு வழக்கும் உள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் சொல்வது என்ன?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், “2018-ஆம் ஆண்டில் புகார் கொடுத்தோம். ஆனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால் 2019-ஆம் ஆண்டு பிற்பகுதி வரை காத்திருந்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தோம். 2023-ஆம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டதாக கூறியது.
மாநகராட்சி பொறியாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றால் 17ஏ பிரிவின்படி அந்த துறையின் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி கொடுத்துள்ளார்.” என்கிறார்.
டெண்டரில் கூட்டு சதியா?
தொடர்ந்து பேசிய ஜெயராம் வெங்கடேஷ், “மழைநீர் வடிகால் மற்றும் சாலைகள் அமைப்பதில் கூட்டு சதி மூலம் டெண்டரை முடிவு செய்தனர். ஒப்பந்தத்தை வேறு வேறு நிறுவனங்களின் பெயர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே எடுத்துள்ளனர்.
இதில் மிக முக்கியமான விஷயம், ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் நடந்த முறைகேடுதான். 2018-ஆம் ஆண்டில் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் ஒரு கியூபிக் மீட்டர் விலை ஐந்தாயிரம் ரூபாய். ஆனால், அதற்கு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என விலையை முடிவு செய்துள்ளனர். மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளுக்குமான டெண்டரில் இதே விலையை குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்து, இந்தப் பணிகளுக்கு ஆற்று மணல் பயன்படுத்துவதாக டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உண்மையில் எம் சாண்டை பயன்படுத்தியுள்ளனர். எம் சாண்டின் விலை கியூபிக் அடி 50 ரூபாய். அதுவே ஆற்றுமணல் 120 ரூபாய்க்கு விலை போனது. அந்தவகையில், பாதிக்கும் குறைவாக எம் சாண்ட்டின் விலை உள்ளது” என்கிறார்.
இதையடுத்து, எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை என் கைகளுக்கு வரவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை செய்தி ஊடகங்கள் மூலம் மட்டுமே அறிந்தேன். எஃப்.ஐ.ஆரை பார்த்த பிறகு பேசுகிறேன்” என்று மட்டும் பதில் அளித்தார்.
அதிமுக தலைவர்களை முடக்க சதியா?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணியை பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரிடம் பேச முடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், “தி.மு.க அரசு அமைந்ததில் இருந்தே மிரட்டல் தொனியைக் கையாண்டு வருகின்றது. இவ்வளவு காலமாக இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் தலைவர்களை முடக்குவதற்கு இப்படியொரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர் ” என்கிறார்.
” இதன்மூலம் அரசியல் லாபம் அடைய தி.மு.க முயற்சிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு முறை வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினாரால் சோதனை நடத்தப்பட்டது. அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளிக்கொண்டு வர முடியவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்கிறார் கல்யாண சுந்தரம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.