இந்தக் கட்டுரையில் வரும் விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒடிஷாவில், புவனேஷ்வரில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் ஒரு இந்திய ராணுவ அதிகாரியும், அவரது வருங்கால மனைவியும் தாக்குதல் மற்றும் அத்துமீறலுக்கு உள்ளானதாகக் கூறும் ஒரு வழக்கு செப்டம்பர் 20ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 14 அன்று நடந்தது.
ஒடிஷா காவல்துறையின் பரத்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து காவலர்கள் மீது குற்றப்பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த போலீஸார் இந்தச் சம்பவத்தின் வேறு வடிவத்தை முன்வைத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட போலீசாரான, ஸ்டேஷன் இன்சார்ஜ் தீன் கிருஷ்ண மிஷ்ரா, சப் இன்ஸ்பெக்டர் வைஷாலினி பாண்டா, உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் ஷைல்மயி சாஹு, சாகரிகா ரத் மற்றும் கான்ஸ்டபிள் பல்ராம் ஹன்ஸ்தா ஆகியோர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரத்தில் நீதித்துறை விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் காங்கிரஸும் இந்த விஷயத்தில் மோகன் மாஜி அரசைக் கடுமையாக சாடியுள்ளது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மோகன் சரண் மாஜி உறுதி கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் என்ன?
செப்டம்பர் 14 அன்று நள்ளிரவில் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியும் அவரது வருங்கால மனைவியும் பரத்பூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். சில இளைஞர்கள் தங்களிடம் சில்மிஷம் செய்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் புகாரைப் பதிவு செய்து ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு உதவுவதற்குப் பதிலாக போலீசார் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகவும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் கூறிய விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
செப்டம்பர் 19ஆம் தேதி முதல்முறையாக ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண், காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
தான் லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த அதிகாரியும் அவரது வருங்கால மனைவியும் பரத்பூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது, இருவரும் குடிபோதையில் இருந்தாகவும், காவல் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி அங்கிருந்த அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 10 மணிநேரம் கழித்து ராணுவ உயரதிகாரிகள் தலையிட்ட பிறகு அந்த அதிகாரி விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது வருங்கால மனைவி காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
செப்டம்பர் 18ஆம் தேதியன்று கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்த ஒடிஷா உயர்நீதிமன்றம், அவருக்கு உடனடி ஜாமீன் வழங்க ஒப்புதல் அளித்தது. புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு
செப்டம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், தனது உணவகத்தை மூடிவிட்டு வருங்கால கணவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் தன்னைத் துரத்தி வந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரத்பூர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது புகாரைப் பதிவு செய்வதற்கு பதிலாக அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“முதலில் என் வருங்கால கணவரை லாக்கப்பில் வைத்தனர். நான் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒரு பெண் அதிகாரி என்னைக் கடுமையாக அடிக்கத் தொடங்கினார். அவர் என் தலைமுடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினார். அதனால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் அந்த அதிகாரியின் கையை கடித்தேன். அங்கிருந்த எல்லா அதிகாரிகளும் கோபமடைந்தனர். மூன்று பெண் அதிகாரிகள் சேர்ந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்,” என்று இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் விரிவாக அவர் தெரிவித்தார்.
“இரண்டு ஆண் அதிகாரிகள் என் இரு கைகள் மீதும் கால் வைத்து அழுத்தினர். ஒரு பெண் அதிகாரி என் கைகளைப் பிடித்துக்கொண்டார். மற்றொரு பெண் அதிகாரி என் மார்பிலும் வயிற்றிலும் கால்களால் தொடர்ந்து உதைத்தார். என் கழுத்தை நெறிக்கவும் முயற்சி செய்யப்பட்டது.
சிறிது நேரம் கழித்து ஒரு ஆண் அதிகாரி நான் அணிந்திருந்த ஜாக்கெட் கோட்டால் என் கைகளையும், ஒரு ஸ்கார்ஃப் மூலம் என் கால்களையும் கட்டினார். பின்னர் என்னை இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் பூட்டிவிட்டனர். அங்கு என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன, அவரது பற்களில் ஒன்று உடைந்துள்ளது மற்றும் அவரது தாடையிலும் காயம் உள்ளது, அவரது ஒரு கையின் எலும்பும் உடைந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
“அடுத்த நாள் காலை 6 மணியளவில், காவல் நிலைய பொறுப்பாளர் காவல் நிலையத்திற்கு வந்தபோது, என் மனதில் ஒரு சிறிய நம்பிக்கை எழுந்தது. ஆனால் நான் சொல்வதைக் கேட்காமல், பொறுப்பாளர் என் முகத்தில் உதைத்தார். என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார். நான் கதறினேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை,” என்று பாதிக்கப்பட்ட பெண் விவரித்தார்.
போலீஸ் என்ன சொல்கிறது?
ராணுவ அதிகாரியும் அவரது வருங்கால மனைவியும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரத்பூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது, இருவரும் குடி போதையில் இருந்ததாக, புவனேஷ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் செப்டம்பர் 17ஆம் தேதி கூறினார்.
”அவர்கள் காவல் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி, அங்கிருந்த அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். பெண் போலீஸ் அதிகாரி தடுக்க முயன்றபோது அந்தப் பெண் அவரது கையைக் கடித்தார்.
காவல் நிலையத்தை சேதப்படுத்தினார். கணினியை உடைத்தார். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்,” என்று பிரதீக் சிங் தெரிவித்தார்.
ராணுவ அதிகாரியின் காரில் இருந்து இரண்டு மதுபாட்டில்கள் மீட்கப்பட்டதாகவும், மது அருந்தியுள்ளார்களா என்பதைக் கண்டறியும் “ப்ரெத் அனலைசர் சோதனையை” மேற்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ
மறுபுறம் காவல்நிலையத்தில் இரவு நடந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஒரு ராணுவ அதிகாரி காகிதத்தில் புகார் எழுதுவதையும், அவருக்கு அருகில் அவரது வருங்கால மனைவி இருப்பதும் தெரிகிறது.
“ஒரு ராணுவ அதிகாரியை இப்படி லாக்கப்பில் வைக்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுவது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், “நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை” மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு ஒடிஷா காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஒய்.பி. குரானியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராணுவத்தின் தலையீடு
இந்த விவகாரத்தில் ராணுவமும் அதன் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் தலையிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ராணுவத்தின் மத்திய தலைமை தனது எக்ஸ் பக்கமான ’சூர்ய கமாண்ட்’ இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ராணுவம் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், உரிய நடவடிக்கைக்காக மாநில அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, 5 போலீசார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட ராணுவ மத்திய கமாண்டின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ஷெகாவத், பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு நீதி வழங்கக் கோரி ஒடிஷா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சிஎஸ் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு முன்னரும் எழுப்பப்பட்ட புகார்கள்
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளர் தீன் கிருஷ்ண மிஷ்ரா மீது ஏற்கெனவே புகார்கள் வந்துள்ளன.
கடந்த ஆண்டு கட்டாக்கில் நடந்த பாலி யாத்திரையின்போது அவர், ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்றதாகக் கூறும் ஒரு வீடியோ வைரலானது.
ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் புவனேஷ்வரின் பரத்பூர் காவல் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
‘மாடல் காவல் நிலையத்தில்’ மாயமான சிசிடிவி
இந்தச் சம்பவம் நடந்துள்ள பரத்பூர் காவல் நிலைய திறப்பு விழாவின் போது, “சிசிடிவி உள்ளிட்ட அனைத்து வகையான நவீன வசதிகளுடன் கூடிய ‘மாடல்’ காவல் நிலையம் இது” என்று கமிஷனர் சஞ்சீவ் பாண்டா தெரிவித்திருந்தார்.
ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி குற்றப்பிரிவுக் குழு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு சிசிடிவி இல்லாததைக் கண்டறிந்தனர்.
காவல் நிலையத்தில் ஆரம்பத்தில் இருந்தே சிசிடிவிகள் நிறுவப்படவில்லையா அல்லது குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்க இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சிசிடிவி அங்கிருந்து அகற்றப்பட்டதா என்பதுதான் இப்போதைய கேள்வி.
சூடுபிடித்துள்ள அரசியல்
இந்தப் பரபரப்பான சம்பவம் காரணமாக தற்போது அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.
“விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் விசாரணையை குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தோம். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தோம்.
குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அறிக்கையைs சமர்ப்பிக்குமாறு குற்றப் பிரிவிடம் கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு அறிக்கை கிடைத்தவுடன் குற்றவாளிகளுக்கு எதிராகk கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
பெண்கள் மீதான துன்புறுத்தல் விஷயத்தில் எங்கள் அரசு ‘ஜீரோ சகிப்புத்தன்மை’ கொள்கையைk கடைப்பிடிக்கிறது. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
இதற்கிடையில் வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க அரசை குறிவைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் கட்டுப்பாடற்றதாகவும், தடைகளற்றதாகவும் மாறிவிட்டது. அநீதி செழித்து, அரசு அமைப்பிலேயே தஞ்சம் அடையும்போது, சாமானிய குடிமக்கள் யாரிடம் உதவியை எதிர்பார்க்க முடியும்?” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.