அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார்.
ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்தக் கட்டி நீக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு இதே போல மற்றொரு கண்ணிலும் கட்டி வந்தது.
இந்தப் பிரச்னை தொடர்ச்சியாக வந்ததால், இதைப் பரிசோதனை செய்த சாருலதாவின் கண் மருத்துவர், “உங்களுக்குக் கண்ணில் மை இடும் பழக்கம் உள்ளதா?” என்று கேட்டு, அதனால்தான் அவருக்குக் கண்ணில் கட்டி வருவதாகக் கூறியுள்ளார்.
“இதுவரை எனக்கு மூன்று முறை கண்களில் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. கண் மை இட்டுக்கொள்வதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இதுபோல கண்களில் கட்டி ஏதும் வரவில்லை” என்று சாருலதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரால் பயன்படுதப்படும் கண் மை ஆபத்தானதா? அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
கண்கள் எவ்வளவு மென்மையானது?
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி, சமூக ஊடக பக்கங்களில் வைரல் ஆனது. அதில் தொடர்ச்சியாக கண் மை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கண் மருத்துவர் அஷ்வின் அகர்வால் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து கண் மருத்துவர்களிடம் கேட்டபோது, “உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் மென்மையானவை மற்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அதில் தூசி போன்றவை படியும்போது கண் எரிச்சல், கண் கட்டி போன்றவை ஏற்படலாம்,” என்று கூறுகிறார் கண் மருத்துவர் வஹீதா நசீர்.
“கண்ணின் விளிம்புகளில் லாக்ரீமல் சுரப்பிகள், மெய்போமியன் சுரப்பிகள் போன்றவை இருக்கின்றன. இவைதான் கண்ணீர் சுரப்பதற்கும், எண்ணெய் போன்றவற்றைச் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்க்கவும் செய்கிறது.”
“கண்ணின் வாட்டர்லைனில் மை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் (pores) அடைப்பு ஏற்படும். இதனால் கண்ணில் சுரக்கப்படும் திரவியங்கள் வெளியேற வழி இல்லாமல் உள்ளேயே இருந்து, அது கட்டி போல உருவாகக்கூடும். இந்த பாதிப்பிற்கு கேலேசியான் (chalazion) என்று பெயர்” என்றார் மருத்துவர் வஹீதா.
என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
கண்களை அலங்கரிக்க கண் மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷாடோ போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக கண்களின் உள்ளே பயன்படுத்தும்போது, கஞ்சக்டிவைடிஸ் எனப்படும் கண் எரிச்சல், ஸ்டை எனப்படும் கண் கட்டிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் வஹீதா.
“இது போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்தால் இந்த பாதிப்பு அதிகமாகி புற்றுநோய்கூட வரும் வாய்ப்புகள் உள்ளன,” என்றார் அவர்.
கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள்பகுதியிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம். இதனால் பார்வைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு விழிகளில் இந்தப் பாதிப்பு பரவி கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார்.
இதுபோன்று கண்ணில் கட்டி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிப்பு தீவிரமாக இருப்பின், அறுவை சிகிச்சை மூலம் கட்டியிலுள்ள சீழ் வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும், என்று இதைக் குணப்படுத்தும் முறை குறித்து விளக்கினார் மருத்துவர் வஹீதா.
“தற்போது பயன்படுதப்படும் கண் மையில் உள்ள வேதிப் பொருட்களால் கண் உலர்ச்சி, கண்ணில் அழுத்தம் அதிகரிப்பு, கார்னியல் அல்சர் எனப்படும் கருவிழிப் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கிறார் கண் மருத்துவர் சிவக்குமார்.
கண் மை பயன்படுவதால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, “இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் கண் மை இட்டுக்கொள்வதும் ஒன்றாக இருக்கின்றது. தொடர்ச்சியாக வேதிப் பொருட்கள் அடங்கிய ஒப்பனை சாதனங்களை கண்ணில் பயன்படுத்தும்போதும், கண்ணில் பிரச்னைகள் இருந்தும் அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்” என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘ஐ மேக்கப்’ – ஒரு பேஷன் டிரெண்ட்
கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர்.
முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன.
“கண் மை என்பது பிரபல பேஷன் டிரெண்டாக எக்காலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம், கண் மை நீர் போன்றவை பட்டு அழியாமல் இருக்க அதில் அதிகளவில் வேதிப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது,” என்று ஒப்பனைக் கலைஞர் அகிலா தெரிவித்தார்.
மேலும், இத்தகைய வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பாக ‘பேட்ச் டெஸ்ட்’ செய்து பார்த்துவிட்டுத் தொடங்க வேண்டும் என்கிறார் அகிலா.
அதாவது, எந்த ஒப்பனைப் பொருளாக இருந்தாலும், அதை மிகச் சிறிய அளவில் உடலின் ஒரு சிறு பகுதியில் பயன்படுத்திப் பார்த்து, அதனால் எந்தவித விளைவுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்கிறார் அகிலா.
பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?
“பொதுவாக உடல் சூடு, தூசி, சுத்தமில்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் கண் இமைகளில் கட்டி வரலாம்” என்கிறார் மருத்துவர் சிவக்குமார்.
இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசிய கண் மருத்துவர் வஹீதா, சில அறிவுறுத்தல்களை வழங்கினார்:
முதலில் கண்களில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்களில் வேதிப் பொருட்கள் கொண்ட ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
ஒருவேளை பயன்படுத்தினாலும் தேவை முடிந்தவுடன் கண் இமை, இமையிலுள்ள முடி போன்ற கண்ணின் எல்லா பகுதிகளிலும் சரியான முறையில் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். அதை அகற்றாமல் போனால் கண்ணில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஒருவர் பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. சோப், ஃபேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும்.
கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணை போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது.
கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.