நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
மிகத் திறமையாகவும் உறுதியாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தனது 7ஆவது டெஸ்டில் 8ஆவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 4ஆவது சதத்தைப் பூர்திசெய்தார்.
கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார்.
இன்றைய போட்டியில் ஆட்காட்டி விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் ஓய்வு பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், 4ஆவதாக தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் களம் புகுந்து துடுப்பெடுத்தாடினார்.
மெத்யூஸுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.
கமிந்து மெண்டிஸைவிட குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் வில்லியம் ஓ’ரூக் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
The post கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது, 7ஆவது டெஸ்டில் 4ஆவது சதம் குவித்தார் appeared first on Vanakkam London.