• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து சஜித் பிரேமதாச கருத்து

Byadmin

Apr 27, 2026


2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே இதற்குக் காரணமாக அமைந்து காணப்பட்டன. இந்த போராட்டத்தின் விளைவாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் துறைசார் மேற்பார்வை குழுக்களில் 500-600 வரையிலான இளைஞர்களை நேர்காணல் மூலம் நியமித்தது முக்கியமான நடவடிக்கையாக அமைந்து காணப்பட்டன. இதன் மூலம் அரசியல் பங்கேற்புக்கான வட்டம் விரிவடைந்தாலும், தற்சமயம் துறைசார் மேற்பார்வை குழுக்கள் குறைக்கப்பட்டு, இளைஞர் பிரதிநிதித்துவமும் நீக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இளம் தொழில் வல்லுநர்கள் தரப்புடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

துறைசார் மேற்பார்வைக் குழுக்களை குறைத்து இளைஞர்களை நீக்கியதும், பாராளுமன்றத்தின் பலத்தை குறைத்ததும், அண்மையில் நாடு இழந்த 2.5 மில்லியன் டொலருடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.  பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு இது பெரிய பிரச்சினையாக தெரியாவிட்டாலும், இந்த இழப்பை சரிசெய்ய வரிச் சுமையை அதிகரிக்க வேண்டி வரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் முடியாவிட்டால் மக்கள் இதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

தினந்தோறும் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நமது நாட்டில் இவை குறைபாடின்றி நடைபெற வேண்டும். திறைசேரி கடன் செலுத்துவதற்கு பல நடவடிக்கைகள் காணப்படுகின்றன. மக்கள் இவற்றை ஆராய வேண்டும். இவற்றை முன்கூட்டியே கணித்து தவிர்க்க முடிந்தாலும் இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக இது நடந்துவிட்டது. இதில் மோசடியான நடவடிக்கை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையான விசாரணை அவசியம். 

இத்தகைய சம்பவம் நடந்தபின் திறைசேரி செயலாளர் இராஜினாமா செய்து வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்த வேண்டும். பாராளுமன்ற நிதி பற்றிய குழுவில் திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரை அழைத்து விசாரிக்க வேண்டும். இதில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்று ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்போதாவது சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

கடன் தவணை செலுத்தாததால் கடன் தவறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும். நிதி அமைச்சர் மற்றும் செயலாளர் இவற்றை நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும். இனியாவது இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பான நடைமுறைகளை இப்போது முதலே பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும், குழுக்களின் அதிகாரத்தையும், இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் ஒரே கையெழுத்தில் நீக்கி விட்டது. 

இவற்றைப் பற்றி அரசாங்கத்திற்கு விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் மக்கள் இவற்றை ஆராய வேண்டும். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். ஜனாதிபதி சமீபத்தில் சைபர் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்தாலும், இறுதியில் நமது பணம் திருடப்பட்டு விட்டது.

இந்த அரசாங்கம் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை குறைத்து, இளைஞர் பங்கேற்பை ஒரே கையெழுத்தில் இல்லாமல் ஆக்கிவிட்டது. இத்தகைய சூழலில் இத்தகைய மோசடிகள் நடப்பது வியப்பில்லை. இவர்கள் நாளுக்கு நாள் பாராளுமன்றத்திற்கு காணப்படும் அதிகாரத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

By admin