பட மூலாதாரம், ANI
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 தொடரின் 38வது போட்டியில் இன்று (ஏப்ரல் 26) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன் மூலம் லக்னௌ அணி தொடர்ச்சியாக ஐந்தாவது போட்டியில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் எம்.சித்தார்த்துக்குப் பதிலாக ஜார்ஜ் லிண்டா சேர்க்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்தார். லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் பந்துவீச்சாளர் மோசின் கான் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதனால் ஆட்டம் ‘டை’ ஆனது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமனாக்கியது எல்எஸ்ஜி அணி.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி, 1 ரன் மட்டுமே எடுத்தது. மூன்றே பந்துகளில் அந்த அணியின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சுனில் நரைன். அதன்பிறகு முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.
தடுமாறிய கேகேஆர் பேட்டர்கள்
பட மூலாதாரம், ANI
இந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்டர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினார்கள். டிம் செய்ஃபர்ட் ரன் ஏதும் எடுக்காமல் மோசன் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தான் வீசிய முதல் ஓவரை மெய்டன் விக்கெட்டாக வீசினார் மோசின் கான். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய அவர், அடுத்த ஓவரில் ரஹானேவின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
போட்டியின் ஐந்தாவது ஓவரில் சர்ச்சைக்குறிய ஒரு நிகழ்வு நடந்தது. கேகேஆர் பேட்டர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும்போது தன் பாதையை மாற்றியதாக, ‘obstructing the field’ முறையில் ஆட்டமிழந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்திவருகிறது.
தொடர் விக்கெட் வீழ்ச்சியால் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், பவர்பிளே முடிந்தும் அந்த அணிக்கு பிரச்னைகள் தொடர்ந்தது. 7வது ஓவரின் முதல் பந்திலேயே ராவ்மன் பவல் விக்கெட்டை வீழ்த்தினார் மோசின் கான்.
முதல் 3 ஓவர்களிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மோசின், தன் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிரடியாக விளையாடத் தொடங்கியிருந்த கேமரூன் கிரீன் விக்கெட்டை அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் வீழ்த்தினார் மோசின். 21 பந்துகளை சந்தித்த மோசின், 34 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அனுகூல் ராய் விக்கெட்டையும் எடுத்தார் மோசின்.
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய மோசின் கான், 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றும் முதல் பௌலர் இவர்தான்.
73/6 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த கேகேஆர் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் ரிங்கு சிங். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அவர் 42 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி 2 ஓவர்களில் தன் வேகத்தைப் பன்மடங்கு கூட்டிய ரிங்கு சிங், ஷமி விசிய 19வது ஓவரில் 1 சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடித்தார். அடுத்ததாக திக்வேஷ் வீசிய 20வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசினார்.
ரிங்குவின் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. 51 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரிங்கு சிங். கடைசி 2 ஓவர்களில் மட்டும் கேகேஆர் அணி 43 ரன்கள் எடுத்தது.
பட மூலாதாரம், ANI
ஆட்டம் ‘டை’
கொல்கத்தாவைப் போல் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. மிட்செல் மார்ஷ் தூக்கி அடித்த பந்தை சிறப்பாக ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார் ராவ்மன் பவெல். மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் நிதானமாக இரு பார்னர்ஷிப்பை கட்டமைத்தார்கள். இந்த ஜோடி 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தது. 31 ரன்கள் எடுத்திருந்த எய்டன் மார்க்ரம், கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் மிகச் சிறப்பாகப் பிடித்தார் ரிங்கு சிங்.
அதற்கு 2 ஓவர்கள் கழித்து ரிஷப் பன்ட்-ம் தன் விக்கெட்டை இழந்தார். சற்று தன் வேகத்தைக் கூட்டியிருந்த பன்ட், சுனில் நரைன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சி செய்து கீப்பரிடம் கேட்ச் ஆனார். அவர் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
அந்த விக்கெட்டுகள் லக்னௌ மீதான நெருக்கடியைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது. ஆயுஷ் படோனி சற்று அதிரடி காட்டி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
19வது ஓவர் முடிவில் எல்எஸ்ஜி அணி 139/7 என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கார்த்திக் தியாகி வீசிய முதல் பந்தை ஷமி அடிக்கத் தவறினாலும், ஒரு ரன் ஓடி ஹிம்மத் சிங்குக்கு ஸ்டிரைக் கொடுத்தார்.
இரண்டாவது பந்தை கார்த்திக் தியாகி மார்புக்கு மேல் வீச, அது நோ பால் ஆனது. ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது. அடுத்த பந்தையும் கார்த்திக் தியாகி நோ பாலாக வீசினார். அந்தப் பந்தில் 2 ரன்களும் கிடைத்தது. அதனால் 5 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த ஃப்ரீ ஹிட்டில் பவுண்டரி அடித்தார் ஹிம்மத் சிங்.
4 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹிம்மத் சிங் விக்கெட்டை வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. களத்துக்கு வந்த பிரின்ஸ் யாதவ் பந்தை அடிக்கவில்லை என்றாலும், ‘பை’ மூலம் ஒரு ரன் கிடைத்தது.
2 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை. ஐந்தாவது பந்தை ஷமியால் அடிக்க முடியவில்லை. அதனால் ஒரு பந்தில் 7 ரன் தேவை. அந்த நெருக்கடியான நிலையில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை ‘டை’ ஆக்கினார் மொஹம்மது ஷமி. அதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.
இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர்
இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர் இந்தப் போட்டியில் நடந்தது. விதிப்படி, போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யவேண்டும். அந்த அணிக்காக நிகோலஸ் பூரன் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் பேட்டர்களாகக் களமிறங்கினார்கள். சுனில் நரைனை தங்கள் பந்துவீச்சாளராக தேர்வு செய்தது கேகேஆர்.
முதல் பந்திலேயே பூரனை போல்டாக்கி வெளியேற்றினார் நரைன். அடுத்து களமிறங்கிய எல்எஸ்ஜி கேப்டன் பன்ட், சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தை சந்தித்த மார்க்ரம் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அதை வேகமாக ஓடிவந்து பிடித்தார் ராவ்மன் பவல். ஆனால், அவர் வேகமாக ஓடிவந்ததால் அவன் தன் நிலைத்தன்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. எங்கு பவுண்டரி எல்லையையோ மிதித்திவிடக்கூடுமோ என்ற எண்ணத்தில் லாங் ஆஃப் திசையில் இருந்த ரிங்கு சிங் நோக்கி பந்தை வீசினார் பவல். முன்னதாக, இந்தப் போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்திருந்த ரிங்கு சிங், இந்தக் கேட்சையும் பிடித்தார்.
இதன் காரணமாக லக்னௌ அணியின் சூப்பர் ஓவர் வெறும் 1 ரன்னில் முடிவுக்கு வந்தது. மூன்றே பந்துகளில் அந்த அணியை ஆட்டமிழக்கச் செய்தார் சுனில் நரைன்.
அடுத்ததாக கேகேஆர் அணிக்கு ரிங்கு சிங் மற்றும் ராவ்மன் பவல் களமிறங்கினார்கள். பிரின்ஸ் யாதவ் வீசிய அந்த சூப்பர் ஓவரின் முதல் பந்தை பவுண்டரியாக்கி கொல்கத்தாவை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.
பட மூலாதாரம், ANI
டாஸில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பன்ட், “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். எதிரணியை முதலில் அழுத்தத்திற்கு உள்ளாக்கி, ஒரு பேட்டிங் குழுவாக எங்களுக்கான பதில்களைக் கண்டறிய விரும்புகிறோம். நிச்சயமாக நாங்கள் இதற்காகக் கடினமாக உழைத்து வருகிறோம். அணியில் பல தலைமைப்பன்பு கொண்ட வீரர்கள் இருக்கும்போது, ஒரு சரியான வழியைக் கண்டறிவது அவசியம். நாங்கள் அதற்குக் மிக நெருக்கமாக வந்துவிட்டோம். நாங்கள் ஒன்றாக இணைந்து உறுதியாக நிற்க வேண்டும். ஏனெனில், இங்கிருந்து இந்த சீசனை எங்களால் மாற்றியமைக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும். அதைச் செய்வோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எந்தவிதமான நம்பிக்கையும் இப்போது எங்களுக்குத் தேவை, அதை நாங்கள் சாதகமாக எடுத்துக் கொள்கிறோம்.” என்று கூறினார்.
கேகேஆர் கேப்டன் ரஹானே, “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருந்தோம். இந்தத் தருணத்தில், ஒரு அணியாக நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். பந்துவீச்சு குழுஇப்போதுதான் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக நான் உணர்கிறேன். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியதற்குக் காரணம், எங்கள் பேட்ஸ்மேன்கள் எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இறுதியில், நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, பந்துவீசினாலும் சரி, ஆடுகளத்தின் தன்மையை விரைவாகக் கணிப்பதும், பவர்பிளே போன்ற முக்கியமான தருணங்களில் வெற்றி பெறுவதுமே முக்கியம்.” என்று கூறினார்.
பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்
இந்தப் போட்டிக்கான லக்னௌ அணியில் எம்.சித்தார்த்துக்குப் பதிலாக ஜார்ஜ் லிண்டா சேர்க்கப்பட்டுள்ளதாக ரிஷப் பன்ட் டாஸின்போது தெரிவித்தார்.
பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஆயுஷ் படோனி, ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், முகுல் சவுத்ரி, மொஹம்மது ஷமி, திக்வேஷ் ராதி, ஜார்ஜ் லிண்டா, பிரின்ஸ் யாதவ், மோசின் கான்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஹிம்மத் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அப்துல் சமத், எம்.சித்தார்த், ஆவேஷ் கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்தப் போட்டிக்கான கொல்கத்தா அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
பிளேயிங் லெவன்: டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ராவ்மன் பவெல், ரிங்கு சிங், சுனில் நரைன், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, ஃபின் ஆலன், தேஜஸ்வி தாஹியா, நவ்தீப் சைனி, வருண் சக்கரவர்த்தி.