• Tue. Jul 1st, 2025

24×7 Live News

Apdin News

காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன? | Temple guard dead on police investigation Magistrate inquires Madapuram

Byadmin

Jun 30, 2025


திருப்புவனம்: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது குறித்து மடப்புரத்தில் திருப்புவனம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் பெண்கள் முறையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும், தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும், தனிப்படை போலீஸார் மடப்புரம் கோயில் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தை திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் இன்று விசாரணை நடத்தினர். பின்னர் காரில் புறப்பட்ட அவரிடம், அங்கிருந்த பெண்கள் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டனர். அவர்களிடம் வெங்கடேஷ் பிரசாத் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி ஆலோசனை நடத்தினர். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை, குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கை அடிப்படையில்தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதனிடையே, அஜித்குமாரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் ரத்தக் கசிவு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘பிரேத பரிசோதனை அறிக்கை எங்களுக்கு வரவில்லை. இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பதால், குற்றவியல் நடுவர் அறிக்கை அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

லாக்கப் மரணங்கள் – ஸ்டாலின் எச்சரிக்கை – முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்பதைச் சட்டம் – ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ‘மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீஸார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன்?’ என காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி



By admin