8
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19) புதன்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், மாவட்டத்தில் 07 மாதத்தில் 84 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில், விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்றையதினம் பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் குறித்த மாணவி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார். இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.