குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ பதிவில், பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது என்று மோடி கூறினார்.
எனவே, இந்த பிரச்சினையை கையாளும் வகையில் கல்வி முறையில் விரிவான மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
விட்டுவைக்க மாட்டோம்:
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “மத்திய அரசும் பல மாநிலங்களும் பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன.
வினாத்தாள் கசிவு கும்பல்கள், வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்,” என்று பிரதமர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “வினாத்தாள் கசிவு சம்பவங்கள் கட்டுப்பாடின்றி தொடர அனுமதிக்கப்படாது. இந்த பிரச்சினைக்கு எதிரான எங்கள் போராட்டம் எதிர்காலத்திலும் தொடரும்,” என்று கூறினார்.
மசோதா நிறைவேற்றம்:
நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்தில் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.
‘பொது தேர்வுகள் திருத்த மசோதா 2026’ இந்தியா (INDIA) கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.