• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

கொசு மருந்து புகை உயிருக்கு ஆபத்தாகுமா? அன்னூர் சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன?

Byadmin

Aug 15, 2026


கொசு மருந்து அடிக்கப்படும் காட்சி

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கோவை மாவட்டம் அன்னூரில் கொசு மருந்து புகை காரணமாக இருவர் உயிரிழந்ததாகப் பரவிய தகவல் பற்றி, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் களஆய்வு மேற்கொண்டனர். இருவரும் உடல் நலக்குறைவுடன் இருந்தவர்கள் என்றாலும், அவர்களின் திடீர் உயிரிழப்புக்கு, வீட்டுக்குள் அடிக்கப்பட்ட புகை மருந்துதான் காரணமென்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்பு தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் காவல்துறையில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

இருவரும் மிகவும் உடல்நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த புகையினால் அவர்கள் உயிரிழக்கவில்லை என்றும் பேரூராட்சி செயல் அலுவலரும், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரும் பிபிசியிடம் விளக்கினர். கொசு மருந்தில் கலக்கப்படும் ரசாயனம், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் மருந்து அடிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

டெங்கு பரவியதால் அடிக்கப்பட்ட கொசு மருந்து

கொசுமருந்து அடித்ததால் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் மோகன்
படக்குறிப்பு, ஆட்டோ ஓட்டுநர் மோகன்

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் சாலை உப்புத்தோட்டம் என்ற பகுதியில், கடந்த வாரத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் கொசு ஒழிப்புக்கான பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அன்னூர் நகரின் பல பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில், பேரூராட்சி அலுவலர்கள் கொசு மருந்து அடித்தபோது, சில பகுதிகளில் வீட்டுக்குள் புகை வரும் வகையில் அடிக்க வேண்டாமென்று அங்குள்ள மக்கள் சிலர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் மக்கள் சொன்னதைக் கேட்காமல் வீடுகளுக்குள் சென்றும், கதவைத் திறந்தும் புகை மருந்தை அவர்கள் அடித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, சில மணி நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் (வயது 65) என்பவரும், அதே வார்டில் மற்றொரு பகுதியில் வசிக்கும் ராணி என்ற பிரேமா (வயது 75) என்பவரும் உயிரிழந்ததாகத் தகவல் பரவியது. இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அடர்த்தியான புகையுடன் கொசு மருந்து அடித்ததே அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமென்று அப்பகுதியைச் சேர்ந்த பலரும் ஊடகங்களில் பேசினர்.

By admin