- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கோவையில் செப்டெம்பர் 11-ஆம் தேதி நடந்த தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார். அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சிலர் அவரோடு பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசனும் பேசினார்.
கோவையில் உணவகச் சங்கிலியையும் நடத்தி வரும் அவர் பேசும்போது, ”ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதால் கம்ப்யூட்டர் குழம்புகிறது, வாடிக்கையாளர்கள் அதிருப்தியாகிறார்கள், வரி விதிக்கும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்” என்று சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்தக் கருத்து, சில மணி நேரங்களில், சமூக ஊடகங்களில் ‘வைரல்’-ஆக பரவியது.
அந்த வீடியோ, ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு, தொழில் துறையினரிடம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது.
தனியாக சந்தித்த ஓட்டல் உரிமையாளர்
இதற்கிடையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 12-ஆம் தேதி மாலை, கோவையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த அதே ஓட்டலில், அதற்குச் சற்று நேரம் முன்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனையும், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசன் சந்தித்து விட்டுத் திரும்பினார்.
செய்தியாளர் சந்திப்பில், சீனிவாசன் கூட்டத்தில் கேள்வி எழுப்பியது பற்றி கேட்டபோது“அவர் ஜனரஞ்சகமாகப் பேசிவிட்டார். அதில் தவறு ஏதுமில்லை. ஜி.எஸ்.டி.,யைக் குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி., கவுன்சில்தான் முடிவு செய்யும்,” என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியானது.
பலராலும் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஓர் அறைக்குள் இடது புறத்தில் நிர்மலா சீதாராமன் அமர்ந்திருக்க, அவருக்கு எதிராக வானதி சீனிவாசன் அமர்ந்திருக்கிறார்.
மற்றொரு புறம் உள்ள சோஃபாவில், அமந்திருந்த தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார். எழுந்து சற்று குனிந்து வணங்கிவிட்டு, மீண்டும் அமர்கிறார். அப்போது அவர் பேசுவது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நிர்மலா சீதாராமனைத் தனியாகச் சந்தித்துப் பேசியது பற்றி, சீனிவாசனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “நான் எந்தச் சமூக ஊடகத்திலும் இல்லை. அதனால் அதில் என்ன வந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. அமைச்சரைச் சந்திக்குமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் சந்தித்து, நான் பேசியது குறித்து விளக்கி, கோரிக்கை மனுவையும் கொடுத்து வந்தேன்,” என்று கூறினார்.
அத்துடன், “எந்தவித உள் நோக்கத்துடனும் நான் அந்தக் கேள்வியை எழுப்பவில்லை. ஓட்டல்கள் சங்கத்தின் கோரிக்கையை, யதார்த்தமாகப் பேசினேன், அவ்வளவுதான். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் அவரைச் சந்தித்து, இந்தக் கோரிக்கை குறித்த மனுவையும் கொடுத்தேன். இதே நிதியமைச்சர், ஆங்கிலத்தில் மட்டும் அல்லது இந்தியில் மட்டும் பேசுபவராக இருந்திருந்தால் நான் தமிழில் இவ்வளவு விரிவாகப் பேசியிருக்க முடியாது. தமிழில் இவ்வளவு எளிமையாகப் பேசவும், அணுகவும் கூடிய அறிவார்ந்த அமைச்சர் என்பதால்தான் அவரிடம் இந்தக் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினேன். நிச்சயமாக அந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் விவாதம்
இந்த நிகழ்வுகள் இரண்டு நாட்களாக நடந்துவந்த நிலையில், இது அரசியல் விவாதமாக மாறியது.
தி.மு.க., மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில், “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை/அணியுமாம் தன்னை வியந்து’ – குறள் 978, அதிகாரம் 98, ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.
அவருடைய கருத்து வெளியான அடுத்த சில மணி நேரங்களில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.
அதில், “கோவையில் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய அளவிலான உணவக உரிமையாளர், அதிகாரிகளிடம், ஜி.எஸ்.டி-யை எளிமைப்படுத்துவது குறித்து வேண்டுகோள் விடுத்தால், அது ஒரு வித பரிகாசத்துடன் அணுகப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
“அதே நேரம், பில்லியன் கணக்கில் தொழில் நடத்தும் ஒரு தொழிலதிபர், தனது வியாபார சாம்ராஜ்யத்தை விரிவு செய்யும் நோக்கத்தில் தேசத்தின் சொத்துக்களை கையகப்படுதும் நோக்கில், சட்டங்களைத் திருத்தி அமைக்கக் கோரிக்கை விடுத்தால், அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பை பிரதமர் மோதி ஜி அளிக்கிறார்,” என்று பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தி, மேலும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், சிறு குறு தொழில்முனைவோர், ஏற்கனவே பணமதிப்பிழப்பு, கடினமான வங்கி விதிமுறைகள், ஜி.எஸ்.டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது அவர்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை
இவர்களின் கருத்துகள் பதிவான அதே நேரத்தில், தற்போது லண்டனில் சிறப்புப் படிப்புக்காகச் சென்றிருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் சமூக ஊடகத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்த வீடியோவை தங்கள் கட்சியினர் வெளியிட்டதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
அதில் மேலும், “சீனிவாசன் அண்ணாவிடம் நான் பேசினேன். எவ்வித உள்நோக்கமும் இன்றி, தனியுரிமையை மீறிய செயலுக்காக வருத்தம் தெரிவித்தேன். அவர் தமிழகத்தின் தொழிற்சமூகத்தின் துாணாக இருப்பவர். மாநிலத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுபவர். எல்லோருமே இந்த விவகாரத்தை இந்த நிலையிலேயே விட்டு விட வேண்டுமென்று எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
‘அவராகத்தான் வந்து மன்னிப்பு கேட்டார்’
இதற்கிடையே இன்று (செப்டம்பர் 13) பத்திரிக்கையாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “நிர்மலா சீதாராமன் பங்கேற்ற தொழில்துறையினர் கலந்துரையாடல் கூட்டத்தில் அன்று காலையிலிருந்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அங்குதான் இருந்தனர். அவர்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சீனிவாசன் அவர்களிடம் எதையும் தெரிவிக்காமல், ‘இந்த எம்.எல்.ஏ. அம்மா எங்க ஓட்டலுக்கு வருவாங்க, ஜிலேபி சாப்பிடுவாங்க. சண்டையும் போடுவாங்க’ என்று பேசினார்.
நாங்கள் அந்த இடத்தில் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. நான் ‘உங்க கடைக்கு நான் எத்தனை முறை வந்திருக்கிறேன், எப்போதாவது சண்டை போட்டிருக்கிறேனா’ என்று அங்கேயே கேட்டிருக்க முடியும். அவர் சொன்னதைப் போல நான் போனதுமில்லை, ஜிலேபி சாப்பிட்டதுமில்லை என்று மேடையிலேயே சொல்லியிருக்க முடியும். ஆனால் நான் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை,” என்றார்.
மேலும், “அடுத்த நாள் காலையில் ஏழு மணியிலிருந்து அவர் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். என்னிடம் தொடர்பு கொண்டு பேசி, ‘நான் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்கணும். இப்பவே நேரம் வாங்கிக் கொடுங்கள்’ என்றார். மதியம் ஓட்டலுக்கு வந்ததும், அவர் அங்கு வந்து விட்டார். அங்கே எங்களைப் பார்த்து, ‘நான் பேசியது தவறுதான். உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இதெல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விட்டது. நீங்கள் மனது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று சொன்னார்,” என்றார்
”இதை அங்கே இருந்த எங்களின் கட்சிக்காரர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பகிர்ந்து விட்டனர். பொதுவெளியில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-வைப் பற்றி அவர் பேசியதில் எங்கள் கட்சிக்காரர்களுக்கு வருத்தம் இருந்தது. அதனால் அவர்கள் தனியாகப் பேசியதை எடுத்துப் பகிர்ந்து விட்டார்கள்,” என்றார் வானதி சீனிவாசன்.
மேலும் அவர்,” நாங்கள் யாரும் அவரைத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்கச் சொல்லவில்லை. அதிகாரத்தில் இருப்பதற்காக நாங்கள் அவரை மிரட்டியதாகச் சொல்வது தவறு. கட்சிக்காரர்கள் எடுத்து வெளியிட்டதை எங்களால் தடுக்க முடியாது. பொதுவெளியில் தப்பாகப் பேசியதற்கு எதிர்வினையாகத்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள். இது தொழில் அமைப்பினரை மிரட்டுவதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் இதனால் தொழில் முனைவோர் யாருமே புகார் சொல்ல வரமாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது” என கூறினார்
தி.மு.க எம்.பி என்ன சொன்னார்?
வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி முடித்த சில மணி நேரங்களில், கோவை தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், இதுகுறித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
அதில் பேசிய ராஜ்குமார், “அறைக்குள் ஒருவர் மன்னிப்புக் கேட்டதை வீடியோ எடுத்து வெளியிடுவது அநாகரீகம். கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு, அவரை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்தியது, கோவை மக்களை அவமானப்படுத்தியதாக நாங்கள் கருதுகிறோம்,” என்றார்.
மேலும், “ஜி.எஸ்.டி-யால் 30% சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு விட்டன. பலரும் வேலைக்குப் போய் விட்டனர். ஜி.எஸ்.டி-யைக் குறைக்கச்சொன்னால், எல்லாவற்றையும் ஜி.எஸ்.டி., கவுன்சில்தான் முடிவு செய்ய முடியும் என்கின்றனர். அப்படியானால் எதற்காக இவர் இங்கு வந்து குறை கேட்க வேண்டும்,” என்றார்.